முகப்பு
தினமணி கதிர்

ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: சோம்பேறித்தனம் அகல..!

மனதில் எழும் தமோ குணத்தின் ஆதிக்கத்தினால் மனிதர்கள் சோம்பேறியாக மாறிவிடுவார்கள் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதை அகற்ற, மூளைக்கு நிறைய வேலை

Updated On : 23 பிப்ரவரி, 2013 at 12:52 PM
பகிர்:

என் மகனுக்கு வயது 35. டிகிரி வரை படித்திருந்தும் எந்த வேலைக்கும் போகாமல் சோம்பேறியாக தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பது, கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது என்றெல்லாம் பொழுதைப் போக்கி வருகிறான். அடிக்கடி முகத்தை ஒரு பக்கமாக வெட்டி வெட்டி இழுப்பதுபோல செய்கிறான். ஆனால் மனோதத்துவ நிபுணர் மூளையில் ஒரு கோளாறுமில்லை என்கிறார். இவனுக்கு ஆயுர்வேத நிவாரணம் கிடைக்குமா?

நளினி ராமேஸ்வரம், மேற்குமாம்பலம், சென்னை-33.

மனதில் எழும் தமோ குணத்தின் ஆதிக்கத்தினால் மனிதர்கள் சோம்பேறியாக மாறிவிடுவார்கள் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதை அகற்ற, மூளைக்கு நிறைய வேலை கொடுக்க வேண்டும். மூளைக்கு எவ்வளவு வேலை கொடுத்தாலும் ஒன்றும் ஆகாது. எவ்வளவுக்கெவ்வளவு மூளைக்கு வேலை கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லதே தவிர கெடுதல் இல்லை. கத்தி தீட்டத் தீட்ட கூர்மையாகிறதே, அதைப் போலத்தான் புத்தியும். ஓயாமல் மூளைக்கு வேலை கொடுத்தால் மூளை குழம்பும் என்பது விஞ்ஞானரீதியாகச் சரியல்ல. மனக் கவலை மிகுந்தால்தான் மூளையைப் பாதிக்கும். கவலைதான் கூடாது.

Advertisement

உங்களுடைய மகன் எதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை உற்று அறிந்து, அதில் அவருக்கு ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறக்கூடிய இனிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் பேசச் செய்வது நல்லது. இவ்விஷயத்தில் தொடர்ந்து முயற்சி செய்தால் அவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படக்கூடும்.

உடல்ரீதியாக அவருக்கு ஏதேனும் கோளாறுகள் உள்ளதா? என்பதையும் கண்டறிய வேண்டும். அதற்கு ஒரு மருத்துவரின் உதவி தேவைப்படலாம். வீட்டிலுள்ளவர்களிடம் தெரிவிக்காத பல விஷயங்களை, வெளி மனிதர்களிடம் கூறுவதைப் பலரும் விரும்பக் கூடும். அதற்கான தீர்வையும் அவர்கள் மூலமாகப் பெறுவதால், மனரீதியாக நல்ல முன்னேற்றத்தை அவர் அடையக் கூடும்.

ஆயுர்வேத சிகிச்சைக்கு ஒத்துழைக்க அவர் விருப்பம் தெரிவித்தால், அணு தைலம் எனும் மூலிகைத் தைலத்தை மூக்கினுள் விட்டு உறிஞ்சுவதும், ஏலாதி சூரணத்தை இஞ்சிச் சாறுடன் குழைத்துச் சூடாக்கி, நெற்றியில் பற்று இடுவதும் முதலில் செய்யப்பட வேண்டியவையாகும். இதன் மூலம் மூளையிலுள்ள எல்லையில்லா சக்தியை மறைக்கும் தமோ குணத்தின் சூழலை நீக்க முடியும். மூளைப் பகுதியைச் சுறுசுறுப்பாக்கி, வேலைக்குச் செல்ல வேண்டும், பிறரைப் போல உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு நல்ல மன வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய பிராம்ஹீ, வல்லாரை, திரிபலை, சித்திர மூலம், வசம்பு, சதகுப்பை, தண்ணீர்விட்டான் கிழங்கு, தந்தீமூலம், நாகபலா வேர், சிபதை வேர் போன்றவற்றை நெய்யாகவும், பொடியாகவும், தைலமாகவும் தயாரித்து விற்பனை செய்யக்கூடிய மருந்துகளின் பிரயோகம் மிகவும் சிறந்த சிகிச்சைமுறையாகும்.

கல்யாணகம், மஹாகல்யாணகம், பஞ்சகவ்யம், மஹாபஞ்சகவ்யம், பிராம்ஹீ, சாரஸ்வதம் என்ற பெயரிலிலெல்லாம் விற்பனை செய்யப்பட்டு வரும் பல மூலிகை நெய் மருந்துகளில், அவருக்கு உகந்ததை குடிக்கச் செய்து, உடலுக்கும், மூளைக்கும் தேவையான நெய்ப்பை ஏற்படுத்தி வாந்தி, பேதி, வஸ்தி எனும் எனிமா சிகிச்சைமுறைகளைச் செய்து உடல் மற்றும் மனத்தின் அழுக்குகளைக் களைந்து, உடலையும் மனதையும் புத்துணர்ச்சியூட்டும் ஆயுர்வேத சிகிச்சைமுறைகளும் சிறந்ததே.

மனதைச் சார்ந்த உபாதைகளுக்கு "தலப்பொதிச்சல்' என்ற ஒரு சிகிச்சையை கேரளாவில் சிறப்பாகச் செய்கின்றனர். மனதின் மிகவும்  உயர்ந்த ஸத்வகுண வளர்ச்சிக்காக, மூலிகைகளை அரைத்துத் தலைப்பகுதியில் பற்றுப் போட்டு, அமரச் செய்யும் இந்த வகைச் சிசிச்சையும் எதிர்பார்க்கக் கூடிய நல்ல பலனைத் தருவதாகக் கூறப்படுகிறது. 

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.