கமலின் "விஸ்வரூபம்' டி.டி.எச்.சில் ஒளிபரப்பாவது உறுதியாகி விட்டதால் அதே வழியில் மற்ற பெரிய படங்களையும் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. கார்த்தியின் "அலெக்ஸ்பாண்டியன்' படத்தை ரூ.28 கோடிக்கு பேசி வருகின்றனர். "கடல்', "ஆதிபகவன்', "பரதேசி' உள்ளிட்ட படங்களுக்கும் பேச்சு நடக்கிறது. 3 டி முறையில் உருவாக்கப்பட்டுள்ள "கோச்சடையான்' படத்தை இந்த வழியில் வெளியிடுவது சாத்தியமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, ரஜினியின் படத்தை முதல் நாளில் பார்க்க அனைவரும் ஆசைப்படுவார்கள் என்பதால், பெரிய தொகைக்கு வாங்க டி.டி.எச். நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றனவாம்.
டொன்ல்டு ஈ வெஸ்லேக் என்பவர் எழுதிய பிரபல நாவல் "ஃப்ளாஷ்ஃபயர்'. ஊரை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் சாக்கடையில் இறங்கித்தான் ஆக வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து வெளிவந்து, அரசியல் மையங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்நாவல் "பார்க்கர்' என்ற பெயரில் ஹாலிவுட் படமாக உருவெடுத்துள்ளது. பிரபலமான ஆல்பங்கள் பலவற்றை இயக்கி புகழ் பெற்ற டெய்லர் ஷாக் ஃபோர்டு இப்படத்தை இயக்கியுள்ளார். "தி டிரான்ஸ்போர்ட்டர்' பட ஹீரோ ஜேசன் ஸ்டேத்தம் முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க, படம் முழுவதும் சாகசங்கள் செய்யும் நாயகியாக வருகிறார் ஜெனிபர் லோபஸ். ஜனவரி 25-ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளிவருகிறது.
கோலிவுட், பாலிவுட் என எல்லா சினிமாக்களிலும் வாய்ப்புகள் இருந்த போதும், நடிப்பிலிருந்து ஒதுங்கி ஆன்மிகத்தில் ஈடுபட்டு மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தனுஸ்ரீ தத்தா. ஆனால் இப்போது மீண்டும் மாடர்ன் உலகுக்குத் திரும்பிவிட்டார். துபாயில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் பங்கேற்று படு கிளாமராக நடனம் ஆடியிருக்கிறார். விழா முடிந்ததும், இனி ஆன்மிகமா? சினிமாவா? என கேட்ட மீடியாக்களுக்கு ""யோகா பற்றிய ஆன்மிக புத்தகம்தான் என்னை ஆன்மிகவாதியாக்கி விட்டது. ஆனால் அதை தீவிரமாகக் கடைப்பிடிக்கவில்லை. விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்'' என அறிவித்திருக்கிறார் தனுஸ்ரீ தத்தா.
34 படங்களில் 103 பாடல்கள் எழுதி தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக பாடலாசிரியர்களில் முன் வரிசையில் இருக்கிறார் நா.முத்துக்குமார். இதில் பத்து படங்களுக்கு முழுப் பாடல் எழுதியிருக்கிறார். எந்தப் படத்துக்கு பாடல் எழுதியது மறக்க முடியாதது என்ற போது, ""நிறைய இருக்கிறது. இளையராஜாவின் இசையில் "நீதானே என் பொன்வசந்தம்' படத்துக்கு முழுப்பாடல்களையும் எழுதியது முக்கியமானது. ""ஒரு பாதிக் கதவு நீயடி.... மறு பாதி கதவு நானடி...'' என்ற என் பழைய கவிதை ஒன்று "தாண்டவம்' படத்துக்காக பாடலானதும் மறக்க முடியாதது'' என்கிறார் நா.முத்துக்குமார்.
"உ' என்ற பிள்ளையார் சுழியைத் தலைப்பாகக் கொண்டு உருவாகி வருகிறது ஒரு படம். தம்பி ராமையா ஹீரோவாக நடிக்க, வருண், மதன்கோபால், சௌந்தரராஜா, காளி உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிக்கிறார்கள். திரைப்படக்கல்லூரி மாணவர் ஆஷிக் இப்படத்தை எழுதி இயக்குகிறார். ""பரமார்த்த குருவும், பதினாறு சீடர்களும் என்ற பிரபலமான கதையை தழுவி இப்படம் உருவாகிறது. தம்பி ராமையா தன்னை ஹீரோவாக குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஆனால் அவருக்கு 70 சதவீதம் படத்தில் பங்கு இருக்கிறது. "உ' என்றால் முதன்மை என்று அர்த்தம். முழுக்க முழுக்க காமெடிதான் கதையின் இலக்கு'' என்கிறார் ஆஷிக்.
வாரிசுகளின் வரிசையில் அடுத்ததாக களம் இறங்குகிறார் நடிகை ரூபினியின் மகள். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கோமல் என்ற இயற்பெயர் கொண்ட ரூபினி, ரஜினிகாந்துடன் "மனிதன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ரூபினி, சினிமாவை விட்டு ஒதுங்கி மும்பையில் தங்கியிருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்த தன் மகளை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த சில இயக்குநர்களிடம் பேசி வருகிறாராம். ராதா தன் இரு மகள்களையும் அறிமுகப்படுத்தி விட்டார். கமல், சரத்குமார், அர்ஜூன் ஆகியோரது மகள்களும் சினிமாவுக்கு வந்து விட்டனர்.
விஜய்யுடன் நடித்த "துப்பாக்கி' மெகா ஹிட்டானதால் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தியிருக்கும் காஜல் அகர்வாலுக்கு, இப்போது எழுத்து மீது ஆர்வம் வந்திருக்கிறது. ஏற்கெனவே அனுஷ்கா, பூமிகா உள்ளிட்டோர் கவிதை எழுதும் வழக்கம் உடையவர்கள். அந்த வகையில் காஜல் அகர்வால் பயணக் கட்டுரை ஒன்றை எழுதப் போவதாக அறிவித்துள்ளார். ""உலக நாடுகள் அனைத்தையும் சுற்றி வந்து விட்டேன். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு முகம் இருக்கிறது. அவற்றைப் பற்றி எழுதப் போகிறேன். சில நாடுகளின் மலை, ஆறு, ஏரிகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன. அதைப் பற்றியும் அதில் எழுத உள்ளேன்'' என தன் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார் காஜல்.
புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் "பனி விழும் நிலவு'. பல சீரியல்களில் நடித்திருக்கும் கவுசிக் இப்படத்தை எழுதி இயக்குகிறார். படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் பெயர் ஈடன். பெயர் காரணம் தருக? என்றால், அது சும்மா மாடர்னுக்குதான். சரி பட அனுபவம் பற்றி சொல்லுங்கள் என்றால்..."" ஆடிஷன் வைத்துதான் இந்தப் படத்துக்கு என்னைத் தேர்வு செய்தார்கள். நிறைய நடிகைகள் வந்திருந்தார்கள். நடிக்க வைத்து, பேச வைத்து, அழ வைத்து அதன் பின்புதான் என்னைத் தேர்வு செய்தார்கள். எந்த இடத்திலாவது ஓவர் ஆக்டிங் செய்தால் அதையும் கண்டுபிடித்து சொல்லி விடுவார் இயக்குநர். அவர் நடிகர் என்பதால் நடிப்பதற்கு வசதியாக இருந்தது'' என்கிறார் ஈடன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.