தினமணி கதிர்

ஸ்வீட் செய்யப் போறீங்களா?

சுசியன் செய்யும்போது கடலைப் பருப்பை வேக வைத்து, பின் அரைத்து நன்றாக வதக்கிவிட வேண்டும். தேங்காய்ப் பூவையும் நன்றாக வதக்கி விட்டால் கெடவே

ஆர். ஜெயலட்சுமி

சுசியன் செய்யும்போது கடலைப் பருப்பை வேக வைத்து, பின் அரைத்து நன்றாக வதக்கிவிட வேண்டும். தேங்காய்ப் பூவையும் நன்றாக வதக்கி விட்டால் கெடவே கெடாது.

நெய்விட்டு ரவா லட்டு செய்த பின் தூய வெள்ளை நிறம் கிடைக்க சீனியை நைசாக அரைத்து அதில் புரட்டி எடுக்க வேண்டும்.

ரவா லட்டு பிடிக்கும்போது அதில் சிறிதளவு பச்சைக் கற்பூரம் கலந்தால் லட்டு மணமாக இருக்கும்.

பாகு காய்ச்சும்போது முறுகாமல் இருக்க சில துளி எலுமிச்சைச் சாறு சேர்த்தால் போதுமானது.

தீபாவளிக்கு செய்த பட்சணங்கள் மிகுதியாக இருந்தால், அது கெடாமல் இருக்க ஒரு கைப்பிடி உப்பை சிறு மூட்டையாகத் துணியில் கட்டி, பட்சணம் உள்ள பாத்திரத்தில் போட்டு வைத்தால் புதிதாகச் செய்ததுபோல் மணம் மாறாமல் இருக்கும்.

மிக்சர் செய்யும்போது கடைசியில் ஒரு கைப்பிடி சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மிக்சர் ருசியாக இருக்கும்.

எந்த ஸ்வீட் செய்தாலும் கால் டீ ஸ்பூன் உப்பு சேர்த்துக் கொண்டால் இனிப்பு தூக்கலாக இருக்காது.

தேங்காய் பர்பிக்கு ஏலக்காயுடன் ஒரு கிராம்பும் சேர்த்துப் பொடித்துப் போட்டால் வாசனை தூக்கலாக இருக்கும்.

ரவை கேசரி செய்து இறக்கும்போது இரண்டு ஸ்பூன் கடலை மாவை நெய்யில் வறுத்துப் போட்டுக் கலந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

மைதாவில் செய்யும் பாதுஷா போன்ற இனிப்புகளை எண்ணெய்யில் பொரித்து எடுத்து ஆறவிட்ட பிறகுதான் ஜீராவில் போட்டு எடுக்க வேண்டும். சூட்டுடன் போட்டால் பாகின் சூடும் பாதுஷாவின் சூடும் சேர்ந்து பட்சணம் குறைந்துவிடும்.

கடலை மாவுடன் முந்திரியை வறுத்துப் பொடி செய்து கலந்தால் மைசூர் பாகு வித்தியாசமாய் சூப்பராக வரும்.

மைசூர் பாகு செய்யும்போது தாம்பளத்தில் கொட்டியவுடன் அதன் மேல் சீனியைத் தூவினால் மிகவும் எடுப்பாக இருக்கும்.

தேங்காய் பர்பி வெள்ளை வெளேரென இருக்க வேண்டுமானால் தேங்காயை உடைத்து முழு அளவாக தேங்காய் ஓட்டிலிருந்து வெளியே தோண்டி எடுத்து, பின்பு தேங்காயின் மேல் பகுதியில் உள்ள சிவப்புத் தோல் பகுதியை சீவி விட வேண்டும். பின்பு கேரட் துருவியினால் துருவினால் பூ மட்டும் வெள்ளையாக வரும். இப்படிச் செய்தால் பர்பி பளிச்சென்று இருக்கும்.

அதிரசம் நைசாக வர ஒரு கிலோ அரிசிக்கு ஒரு கரண்டி உளுந்தம் பருப்பை வறுத்துச் சேர்த்து அரைத்தால் தொட்டாலே மெல்லியதாக பஞ்சுபோல் வரும்.

தீபாவளிக்குத் தேங்காய் எண்ணெய்யில் பட்சணங்கள் செய்ய முடியாதவர்கள் தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யோடு சிறிதளவு தேங்காய் எண்ணெய்யைச் சேர்த்தாலே போதும், அப்படியே தேங்காய் எண்ணெய்யில் செய்ததைப் போல இருக்கும்.

ஜாங்கிரி தயாரிக்கும்போது உளுந்தம் பருப்பை அரைத்து  முடித்ததும் மூன்று கப் மாவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு அரிசி மாவு என்கிற விகிதத்தில் கலந்து ஜாங்கிரி பிழிந்தால் உடையாமல் வரும்.

ஜீரா காய்ச்சும்போது கொதி வந்ததும் ஒரு கரண்டி பாலைச் சேர்த்தால் ஜீராவிலுள்ள அழுக்கெல்லாம் திரண்டு மேலாக வந்துவிடும். அதைக் கரண்டியினால் அரித்தெடுத்து அகற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT