திண்டுக்கல் மாவட்டம், செந்துறையில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. 180 மாணவ, மாணவிகள். தலைமையாசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள். ம.விவேகானந்தன் தலைமையாசிரியர்.
பெயருக்கு ஏற்றாற் போல், புதிய சிந்தனைகளையும், அதனைச் செயல் வடிவமாக மாற்றுவதிலும் சிறந்து விளங்குகிறார். தன் பள்ளியில் உள்ள கட்டடங்களுக்கும், வகுப்பறைகளுக்கும், தமிழ் சான்றோர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களைச் சூட்டியுள்ளார். அதன் மூலம், இளம் குழந்தைகளின் மனதில் அந்த சான்றோர்களின் சிந்தனைகளும், தலைவர்களின் சாதனைகளும் நினைவில் நிற்கும் படியான பணிகளைச் செய்துள்ளார்.
பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 3 கட்டடங்களுக்கு பாரதியார் அரங்கம், திருவள்ளுவர் கலையரங்கம், தந்தை பெரியார் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வகுப்பறைகளுக்கு அவ்வையார் குடில், இளங்கோவடிகள் குடில், காமராஜர் குடில், டாக்டர் ராதாகிருஷ்ணன் குடில் என பெயரிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள கணினி அறைக்கு, சார்ல்ஸ் பாப்பேஜ் என பெயரிட்டுள்ளனர்.
பள்ளியின் முகப்பு தோற்றத்தை பார்த்தவுடன், தனியார் பள்ளி என எண்ணத் தோற்றும் அளவுக்கு புதுமையாகக் காட்சி அளிக்கிறது. இதுகுறித்து தலைமையாசிரியர் ம.விவேகானந்தனிடம் கேட்டபோது...
""அரசுப் பள்ளி கட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியுடன், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கூடுதல் நிதியை வழங்கி முகப்புகளை மாற்றி அமைத்துள்ளோம். அதில், சமூகத்தின் உயர்வுக்காக நல்ல கருத்துக்களைச் சொன்ன சான்றோர்களின் பெயர்களைப் பொறித்து வைத்துள்ளோம். பள்ளி வளாகத்திற்குள் நுழையும் மாணவனுக்கு, சான்றோர்களின் பெயர்களை வாசிக்கும்போதே, அவர்களின் நல் கருத்துக்களும் நினைவில் வரும். இந்தச் சிந்தனையை, இளம் வயதிலேயே வளர்க்கும்போது எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக அவர்களை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே இதனைச் செய்துள்ளோம்.'' என்றார்.
செந்துறை பிள்ளையார்நத்தம் சாலையில் பயணிக்கும் ஒவ்வொருவரின் கவனத்தையும், சான்றோர்களின் பெயர்களைத் தங்கி நிற்கும் இந்த ஊராட்சி ஒன்றியப் பள்ளி கட்டடங்கள் ஈர்த்து வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.