முகப்பு
தினமணி கதிர்

நாள்காட்டி மூலம் ஒரு பரிசு!

உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ பிறந்த நாள் வந்தால் என்ன பரிசு கொடுப்பது என்று ஒவ்வொருவரும் தலையைப் பிய்த்துக் கொள்வார்கள். இளைஞர் கன்னிக்கோயில் ராஜாவுக்கு அந்த பிரச்னையே இல்லை.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ பிறந்த நாள் வந்தால் என்ன பரிசு கொடுப்பது என்று ஒவ்வொருவரும் தலையைப் பிய்த்துக் கொள்வார்கள்.  இளைஞர் கன்னிக்கோயில் ராஜாவுக்கு அந்த பிரச்னையே இல்லை.

பி.பி.ஓ ஒன்றில் பணி புரியும் ராஜாவுக்கு கம்ப்யூட்டர் ஜீபூம்பா பூதம் மாதிரி.  என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் அனாயாசமாகச் செய்வதில் வல்லவர்.

பிறந்த நாள் அன்று, அந்த வருட காலண்டரில் பிறந்த நாள் காண்பவரின் புகைப்படத்தை அச்சிட்டுப் பரிசாக அளிப்பது என்ற ஐடியா ராஜாவுக்கு எப்படித் தோன்றிற்று?

""குழந்தைக் கதைகள் எழுதுவதில் பெயர் பெற்ற  பி. வெங்கட்ராமனின் 80ஆவது பிறந்த தினத்தன்று சிறப்பாக என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்தேன். அது மற்றவர்களின் பரிசைப் போல் அல்லாமல், வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆண்டு முழுதும் அவர் நம்மை நினைக்க வேண்டும் என்றால், காலண்டரில் அவர் படத்தை அச்சிட்டுக் கொடுத்து விடுவதுதான் நல்லது என்று தீர்மானித்தேன்'' என்கிறார் கன்னிகோயில் ராஜா. 

புதுக்கோட்டையில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இலக்கியப் பேரவை தலைவர்  முத்துசீனிவாசன், ""இந்தப் புதிய முயற்சி வரவேற்புக்குரியது'' என்று பாராட்டினாராம்.  ராஜாவின் உற்சாகத்தைத் தூண்டிவிட அது போதாதா?

டாக்டர் நல்லி குப்புசாமி, குழந்தை இலக்கிய முன்னோடி அழ. வள்ளியப்பா,  மூத்த எழுத்தாளர் விக்கிரமன், எதிரொலி விசுவநாதன், கவிஞர்கள் இளையவன்,  ஓவியர் அமுதோன், நந்தலாலா நிறுவனர் மதி ஒளிசரசுவதி, கவிஞர்  கார்முகிலோன் என்று இவர் காலண்டரில் இடம் பிடித்த பிரமுகர்களின் பட்டியல் நீள்கிறது.  காலண்டரின் இடது அல்லது வலது மூலையில் அந்த பிரமுகர் பெரிதும் மதிக்கும் நபரின் படத்தையும் அச்சிட்டுவிடுகிறார் ராஜா.

""பரிசு பெறுகிறவர்கள் தவிர, விழாவுக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் பாராட்டுவதும், முக நூலில் பல்வேறு நண்பர்களிடமிருந்து வாழ்த்துகள் வந்திருப்பதும் எனக்குக் கிடைத்த ஆசிகளாக நான் கருதுகிறேன்'' என்கிறார் கன்னிக்கோயில் ராஜா அடக்கமாக.

கன்னிக்கோயில் ராஜாவுக்குக் கவிதை எழுத வரும்.  அஞ்சல் அட்டையில் ஒரு ஹைக்கூ கவிதைத் தொகுப்பும், பிளாஸ்ட்டிக் விசிறியில் ஹைக்கூ கவிதைகளும், இன்லன்ட் லெட்டரில் பெண்கள் ஹைக்கூ தொகுப்பும், விசிட்டிங் கார்டில் ஹைக்கூ தொகுப்பும் ஆக வித்தியாசமாகச் செயல்பட்டு வருகிறார் ராஜா.   குழந்தை இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  "கிலுகிலுப்பை', "மே மே ஆட்டுக்குட்டி', "கொக்கு பற, பற' , "மியாவ் மியாவ் பூனைக்குட்டி' என்று சிறார்க்கான பாடல் தொகுப்புகளும், அணில் கடித்த கொய்யா, ஒரு ஊர்ல ஒரு ராஜா ராணி போன்ற சிறார்க்கான சிறுகதைத் தொகுதிகளும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

ராஜாவுக்குக் கிடைத்திருக்கும் விருதுகள் கொஞ்ச நஞ்சமல்ல.  பாவேந்தர் பாரதிதாசன் விருது, சக்தி டி.கே. கிருஷ்ணசாமி விருது, ஈரோடு தமிழன்பன் விருது, கோவை வசந்த வாசல் கவி மன்றத்தின் சார்பில் அலைபேசியில் நடத்தும் குறுஞ்செய்தி இதழின் துளிப்பா பாரதி விருது என்று ஏராளமான பரிசுகளை வாங்கி வைத்திருக்கிறார்.  குழந்தைக் கவிஞர் பேரவையின் செயலாளரும் கூட.  தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.  ""அடுத்து என்ன ராஜா?'' என்ற கேள்விக்கு, ""நான்கு நூல்கள்  வெளிவர இருக்கின்றன'' என்கிறார் அமைதியாக.

முழு கட்டுரையைப் படிக்க →