முகப்பு
தினமணி கதிர்

பிராயச்சித்தம்

வாரியார் நண்பர்களுடன் கொல்லூர் மூகாம்பிகையின் திருத்தலம் சென்றார்கள். அத்தலம் மைசூர் மாநிலத்தில் துங்கா

Updated On : 8 மார்ச், 2015 at 4:43 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 10:24 AM

வாரியார் நண்பர்களுடன் கொல்லூர் மூகாம்பிகையின் திருத்தலம் சென்றார்கள். அத்தலம் மைசூர் மாநிலத்தில் துங்கா நதிக்கரையில் விளங்குகின்றது. செழிப்பான வனம். செழுமையான பாக்கு மரங்கள். குளிர்ந்த காற்று.

கோயில் வெளிப்பிராகாரத்தில் அவருடன் வந்த தேவகோட்டை இராமநாதன் செட்டியாருடைய நான்கு வயது மகன் பாலசுப்பிரமணியன் என்னும் சிறுவன் சிறுநீர் கழித்துவிட்டான். உடனே கோயில் அர்ச்சகர்கள் கோயிலைப் பூட்டி விட்டார்கள். ""ஏன் கதவை அடைத்து விட்டீர்கள்?''

என்று வாரியார் கேட்கிறார். ""இந்தக் குழந்தை ஒன்றுக்குப் போய்விட்டான். பிராயச்சித்தம் செய்ய வேண்டும்'' என்றார்கள். ""எங்கள் பக்கத்தில் உள்பிராகாரத்திலேயே ஒன்றுக்குப் போவார்களே'' என்று வாரியார் கேட்டிருக்கிறார். அவர்கள் ""இந்தக் கோயில் புனிதமானது. பிராயச்சித்தம் செய்வதற்கு 24 ரூபாய் கொடுக்க வேண்டும்'' என்றார்கள். ""தண்டச்செலவு'' என்று செட்டியார் வருத்தப்பட்டுக் கொண்டே பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

Advertisement

ஆறு பிராமணர்கள் மூன்று மணி நேரம் வேத மந்திரங்களைச் சொல்லி முழக்கினார்கள். வாஸ்து சாந்தி செய்தார்கள். இதைக் கண்ட செட்டியார் தான் கொடுத்த சிறிய தொகைக்கு இத்தனை பெரிய சடங்கு செய்கிறார்களே என்று எண்ணி மகிழ்ந்தார்.

கோயில் நிர்வாக அதிகாரி எங்களைப் பார்த்து, ""32 ரூபாய் கொடுத்தால் கருவூலத்திலிருந்து திருவாபரணங்கள் எல்லாவற்றையும் எடுத்து அம்பிகைக்கு சாத்தி கற்கண்டு அன்னம் நிவேதனம் செய்து சகஸ்ரநாம அர்ச்சனை செய்வோம்'' என்றார். உடனே வாரியார் ரூ.32 எடுத்துக் கொடுத்தார். கருவூலத்திலிருந்து திருவாபரணங்களை எடுத்து வந்தார்கள். அவற்றுள் ஒரு பெரிய மரகதத்தை அவர் கையில் கொடுத்தார்கள். இதன் விலை எட்டு லட்சம் என்றார்கள். அந்த மரகத அணிகலத்தின் பின்புறம் தங்கத் தகட்டில் "நளச்சக்ரவர்த்தி' என்று தேவநாகரியில் எழுதியிருந்தது. அதைக் கண்டு வாரியார் அதிசயம் அடைந்தார். நளச்சக்ரவர்த்தி அம்பிகைக்கு அதனைப் பரிசாக அளித்தார் என்று அறிந்தார். இப்போது நளச்சக்ரவர்த்தி இல்லை. அவருடைய அணிகலன்கள், அரண்மனை முதலிய சின்னங்கள் யாதொன்றும் இல்லை. தேவிக்குத் தந்த திருவாபரணம் மட்டும் நிலைத்திருக்கின்றன. இதனால் அறம் செய்த பொருள் நிலைத்திருக்கும் என்பது தெளிவாகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.