விரல்களே தூரிகை!
தங்கள் கைவிரல்களால் அழகான வண்ண ஓவியங்களை வரைந்து பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவியர் தங்கள்
தங்கள் கைவிரல்களால் அழகான வண்ண ஓவியங்களை வரைந்து பாரதியார் பல்கலைக்கூட மாணவ, மாணவியர் தங்கள் திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.
பாரதியார் பல்கலைக்கூடம், கடந்த 1987-ம் ஆண்டில், அரியாங்குப்பத்தில் புதுச்சேரி அரசால் துவக்கப்பட்டது. இந்த கல்லூரியில், பெயிண்டிங், சிற்பம், பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம், வாய்ப்பாட்டு போன்ற பல்வேறு கலைகளில் இளங்கலை பட்டம் வழங்கப்படுகிறது.
பாரதியார் பல்கலைக் கூடத்தில் வண்ணக் கட்டிகளைக் கொண்டு கை விரல்களால் விலங்குகளின் தத்ரூப ஓவியங்களை மாணவர்கள் தீட்டியுள்ளனர்.
இங்கு நுண்கலைத்துறை பேராசிரியர் ராஜராஜன் வழிகாட்டுதலின் பேரில், நான்காமாண்டு ஓவியப் பட்டப்படிப்பு மாணவர்கள் வேல் குமரன், ராஜலட்சுமி, மணிகண்டன், பிரதீபா, சிந்துஜா, விஜயநிர்மலா, மைதிலி, துர்கா, ரம்யா, விஜயலட்சுமி ஆகியோர் அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், இருக்கின்ற விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் 6 அடி நீளம் 5 அடி அகலத்தில் வண்ணக் கட்டிகள் கொண்டு (டிரை பேஸ்டல்) பிரஷ் இல்லாமல் கை விரல்களால் விலங்குகளின் உருவ படங்களைத் தீட்டியுள்ளனர்.
இதில் சிங்கம், புலி, குதிரை, சிறுத்தைப் புலி, வரிக்குதிரை, மான், காண்டாமிருகம், கரடி, நரி உள்ளிட்ட வன விலங்குகளின் உருவங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன.
அக்ரிலிக், வாட்டர் கலர், ஆயில் கலர் உள்ளிட்டவை கொண்டு ஓவியங்கள் தீட்டும் பட்சத்தில், அதில் தவறுகள், உருவ மாற்றம் ஆகியவற்றைச் செய்ய முடியும். ஆனால், இந்த வண்ணக்கட்டி பயன்படுத்தி தீட்டப்படும் ஓவியங்களை ஒரு முறை மட்டுமே தீட்ட முடியும்.
இது குறித்து பேராசிரியர் ராஜராஜன் கூறியதாவது:
""மாணவ, மாணவியர் வண்ணக் கட்டிகள் கொண்டு தங்கள் கை விரல்களால் ஓவியங்கள் தீட்டியுள்ளனர். இந்த வகை நடைமுறையில் இருந்தாலும் பெரிய அளவில் மாணவர்கள் வண்ணக் கட்டிகளைக் கொண்டு ஓவியங்கள் தீட்டுவது புதிய முயற்சியாகும். இந்த வகையான ஓவியங்களை வரைய மாணவர்கள் பயிற்சி மேற்கொண்டால், அனிமேஷன் உள்ளிட்ட உயர் துறைகளுக்குச் செல்லும் போது மாணவர்கள் பயற்சி மேற்கொள்ள வேண்டியது என்பது குறைவாகவே இருக்கும். 10 மாணவர்கள் இதில் பயிற்சி பெற்று வருகின்றனர்'' என்றார்.
நுண்கலைத் துறை மாணவர் வேல் குமரன் கூறியதாவது:
""வாட்டர் கலர், ஆயில் கலர் உள்ளிட்டவை கொண்டு பல்வேறு ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. தற்போது புதிய முயற்சியாக வண்ணக்கட்டிகள் வைத்து கை விரல்களால் ஓவியங்கள் வரைந்துள்ளோம். இது பிரஷ், எண்ணெய், தண்ணீர் ஆகியவை இல்லாமல் வரையப்பட்டுள்ளது. இது கடினமான ஒன்றாகும்.
அழிந்து வரும் விலங்குகளைக் காக்கும் பொருட்டும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும் இது போன்ற வன விலங்குகளின் ஓவியங்களைக் கடந்த ஒரு மாதமாக முயற்சித்து வரைந்துள்ளோம். இது புதிய அனுபவமாக இருந்தது'' என்றார்.