10 வருடங்களுக்கு முன்பாக Mitral Valve பொருத்தும் அறுவைச் சிகிச்சையை இதயப்பகுதியில் செய்து கொண்ட பெண்மணி ஒருவருக்கு மூக்கிலிருந்து தற்சமயம் இரத்த ஒழுக்கு ஏற்படுகிறது. பொருத்தப்பட்ட மிட்ரல் வால்வு செயற்கைக் கருவியைச் சுற்றிலும், இரத்தம் உறையாமல் இருப்பதற்காகவும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காகவும் கட்டாயம் உட்கொள்ள வேண்டிய மாத்திரையின் பக்கவிளைவினால்தான் இவ்வாறு ஏற்படுகிறது என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அதை நிறுத்தினால் இரத்த உறைவு ஏற்படும் அபாயம் இருப்பதால் இதற்கான தீர்வை ஆயுர்வேதம் மூலமாக அறிந்து கொள்ளலாமா?
- எஸ்.அனந்தராமன், பிரசாந்தி நிலையம்.
இரத்தபித்தம் என்ற ஓர் உபாதையைப் பற்றி குறிப்பிடுகையில் உடலின் மேற்பகுதியிலிருந்து ஏற்படக்கூடிய இரத்தக் கசிவிற்கு ஊர்த்வக இரத்தபித்தம் என்றும், உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து ஏற்படும் இரத்த கசிவிற்கு அதோக இரத்தபித்தம் என்றும் வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய அஷ்டாங்கஹ்ருதயம் எனும் ஆயுர்வேதநூலில் குறிப்பிடுகிறார். மூக்கிலிருந்து கசியும் இரத்தமானது பலவீனம், மூச்சிரைப்பு, இருமல், காய்ச்சல், வாந்தி, சோகை, எரிச்சல், மயக்கம், நெஞ்சு எரிச்சல், உறுதியின்மை, நெஞ்சுவலி, விடாய், வயிற்றில் வலி, தலையில் காந்தல், துர்நாற்றத்துடன் துப்புதல், உணவில் வெறுப்பு, அஜீரணம், இயற்கைநிலை மாறுபாடு போன்ற உபத்திரவங்களுடன் அவருக்கு இல்லாதிருந்தால் இந்த உபாதையை ஆயுர்வேத சிகிச்சையின் மூலம் குணப்படுத்த இயலும்.
10 கிராம் நெற்பொறி மாவை 300 மில்லி லிட்டர் தண்ணீருடன் கரைத்து அதில் அரை ஸ்பூன் நெய், கால் ஸ்பூன் தேன், நான்கு தாமரை இதழ்கள் ஆகியவற்றைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, இரத்தக்கசிவு நிற்பதற்கான ஒரு வழியாகும். கசியும் இரத்தத்தை நிறுத்துவதற்கு கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்ட உணவு உதவும். அதற்குக் காரணம் கசப்பிலுள்ள வாயு மற்றும் ஆகாயத்தினுடைய பெüதிக ஆதிக்கங்களும் காற்று மற்றும் நிலத்தினுடைய ஆதிக்கமானது துவர்ப்புச் சுவையில் மேம்பட்டிருப்பதால் தான். கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், விலாமிச்சைவேர் ஆகியவை வகைக்கு 5 கிராம் வீதமெடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை லிட்டராகக் குறுக்கி வடி கட்டிய குளிர்ந்த நீரைச் சிறுகச் சிறுகப் பருகுவதினால் வயிற்றிலுள்ள மப்புநிலை மாறும், இரத்தக் கசிவு மற்றும் பித்தத்தினால் ஏற்படும் காய்ச்சலை உடனடியாக நிறுத்தும். பித்தத்தினால் ஏற்படும் பல உபாதைகளுக்கும் இது ஒரு சிறந்த குடிநீராகும்.
நாககேசரம் 20 கிராம், உலர வைத்த வில்வப்பிஞ்சு 10 கிராம், மாதுளம்பிஞ்சு 10 கிராம், கசகசா 10 கிராம், இலவம் பிசின் 10 கிராம், ரோஜாமொக்கு 10 கிராம், ஏலக்காய், சந்தனம், மாசிக்காய் ஆகியவை வகைக்கு ஒரு கிராம் எடுத்து நன்றாகப் பொடித்து துணியால் சலித்து 3 கிராம் முதல் 5 கிராம் அளவில் நாளொன்றுக்கு நான்கு முறை இரண்டு ஸ்பூன் சுத்தமான தேனுடன் குழைத்து உணவிற்கு முன் சாப்பிட்டு வருவது, உடலிலிருந்து கசியும் இரத்தத்தை உடனடியாக நிறுத்தக்கூடியது.
ஆடாதோடை இலைச் சாறு 10 மில்லி லிட்டர் அளவில் எடுத்து தேன் ஒரு ஸ்பூன் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மூக்கிலிருந்து வரும் இரத்தக்கசிவு நிற்கும். ஆங்கில மருந்துக்கு நிகரான ஒரு சிறந்த மூலிகையாக இவ்விஷயத்தில் ஆடாதோடையைக் குறிப்பிடலாம். தேன், பேரீச்சை, திராட்சை, சிற்றீச்சை, சர்க்கரை கலந்த தண்ணீர் என்னும் பஞ்சஸôரப்பொருட்களுடன் பொரிமாவு, நெய் ஆகியவற்றையும் சேர்த்து பொரிமா நீர் சேர்த்து உபயோகித்தால், இரத்தக்கசிவைத் தடுக்கலாம். இதில் மாதுளை, நெல்லி இவற்றால் புளிப்பு உண்டாக்கி பசியில்லாத நிலையில் சாப்பிட பசியின்மை நீங்குவதுடன் புளிப்புச் சுவை விரும்புகிறவருக்கும் கொடுக்கலாம்.
தாமரைப்பூ, நெய்தல் பூக்கள், ஓரிலை, ஞாழல், விளாமிச்சை வேர், வெள்ளிலோத்தி, இஞ்சி, செஞ்சந்தனம், வெட்டிவேர், காட்டாத்திப்பூ, வில்வபழச்சத்து, காஞ்சொறி, நிலவேம்பு, கோரைக்கிழங்கு, காராமணி, பச்சைப்பயறு, சிற்றாமுட்டி, நெய், அரேணுகம் ஆகியவற்றில் முடிந்தவரை கிடைக்கும் பொருட்களைச் சேகரித்துத் தண்ணீர் காய்ச்சி அதில் அரிசியைப் போட்டு வேக வைத்து கஞ்சி தயாரித்துக் குடித்தால், அது இரத்தக்கசிவு உபாதைக்கான ஒரு சிறந்த மூலிகைக் கஞ்சியாகும்.
ஆயுர்வேத மூலிகை மருந்துகளான வாஸôகுடூச்யாதி கஷாயம், திராக்ஷôதி கஷாயம், குடூச்யாதி கஷாயம் போன்றவை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டிய தரமான மருந்துகள். சிறுபஞ்சமூலம் எனப்படும் சிறுவழுதுணை வேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், கண்டங்கத்தரி வேர் ஆகியவை சேர்த்துக் காய்ச்சப்பட்ட நீரைக் குளிரச்செய்து அதில் சிறிது தேன் கலந்து சாப்பிடுவதும் நலமே.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.