தினமணி கதிர்

திரைக் கதிர்

தினமணி

• எஸ் பிக்சர்ஸ் தயாரித்து, சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் "இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி'.  பெரும் வெற்றி பெற்ற இப்படம், வடிவேலுக்கு மிகப் பெரும் மைல் கல்லாகவும் அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், "இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' என்ற பெயரில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஷங்கர் - சிம்புதேவன் - வடிவேலு என அதே கூட்டணி இதில் இணைந்தது. சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. வடிவேலு பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து விசாரித்தால்...  வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் தொடங்குவதற்கு வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியதில், எவ்வித முன்னேற்றமும் இல்லை. படத்திற்கான அரங்குகள் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதால் படம் கைவிடப்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறது படக்குழு.  முன்பாக, வடிவேலுவுடன் சம்பளப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்கள் நடைபெற்றதால், படப்பிடிப்பும் தாமதமாகத்  தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

• "விவேகம்'  படத்தையடுத்து அஜித் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது பூரண ஓய்வில் இருந்து வரும் அஜித், தனது அடுத்த  படம் குறித்த பேச்சுவார்த்தைகளைத்  தொடங்கியுள்ளார். அஜித்தை இந்த முறை இயக்கப் போவது யார் என்ற கேள்வி பரவலாக இருந்து வந்த நிலையில், மீண்டும் அந்த வாய்ப்பு சிறுத்தை சிவாவுக்கே சென்றுள்ளது.  "வீரம்',"வேதாளம்',   "விவேகம்'  படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித்தை இயக்கப் போகிறார் சிவா. இப்படத்தை "விவேகம்'   படத்தைத் தயாரித்த சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிவாவிடம் முழுக்கதையையும் கேட்டு முடிவு செய்யவுள்ளார் அஜித். பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படம் வெளியாகவுள்ளது. அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.  மற்ற கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

• பாபாஜி  மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ரஜினிகாந்த், படப்பிடிப்பு இல்லா நாள்களில் நெருக்கமான நண்பர்களை அழைத்துக் கொண்டு இமயமலைக்குச் சென்று விடுவார்.  ஆண்டில் ஒரு முறையாவது இப்படியான பயணங்களில் இருப்பார் ரஜினி. ஒரு வாரக் காலத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்து தியானத்தில் ஈடுபடுவார்.       பாபாஜியை  தரிசிக்க  வரும்  பக்தர்களுக்காக ஸ்ரீ பாபாஜி  தியான மண்டபத்தை தனது நண்பர்களுடன் சேர்ந்து ரஜினி  இமயமலையில் கட்டியுள்ளார். பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த தியான மண்டபம், வரும் நவம்பர் 10-ஆம் தேதி பொதுப் பயன்பாட்டுக்கு வருகிறது. இதில் தனது நண்பர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.  அந்த மண்டபத்திலேயே அவர் சில நாட்கள் தங்கியிருப்பார் என தெரிகிறது. இமயமலை பயணத்துக்கு பிறகு சென்னை திரும்பும் ரஜினிகாந்த் ரசிகர்களை இரண்டாம் கட்டமாக சந்திக்கிறார்.

• பா.ரஞ்ஜித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "காலா'. மும்பை வாழ் தமிழர்களின் வாழ்க்கைப் பின்னணியைக்  கதைக் களமாக கொண்ட இப்படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு  முடிவுக்கு  வந்துள்ளது. மும்பை, சென்னை என இரு கட்டங்களாக நடைபெற்ற இப்படப்பிடிப்பில், ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதம் உள்ளன. ஜனவரியில் இப்படத்தின் வெளியீடு உறுதி என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட் தயாரிப்பாக உருவாகியுள்ள "பேடுமேன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதையொட்டி ரஜினியின் "2.0' படத்தின் வெளியீட்டு தேதியும் தள்ளிப்  போகிறது. பொங்கல் பண்டிகையைக் குறி வைத்து வெளியீட்டு வேலைகள் நடந்து வந்த நிலையில், கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.   ஆனால், "2.0'  வெளியீட்டுக்கு பின்பே "காலா' படத்தை விளம்பரப்படுத்தி  வெளியிட தனுஷ்  முடிவு  செய்திருப்பது தெளிவாகியுள்ளது.

• செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு உறுதியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்திசுரேஷ் நடித்துவரும் "தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் கவனம்  செலுத்தவுள்ளது படக்குழு. இதைத்  தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா படங்களில் ஒரே சமயத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. சந்தானம் நாயகனாக நடித்துவரும் "மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறாத நிலையில், செல்வராகவன் - சூர்யா இணையும் படத்தின் நிலை குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சுட்டுரைப் பக்கத்தில், "செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும். தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விஷயங்களையும் விரைவில் அறிவிப்போம்' என்று தெரிவித்துள்ளார்.  
- ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT