சதா
சர்வகாலமும்
மக்கள் பக்கம் தான்
மன்னா! உன் சிந்தையே
என்ன செய்யும்?
ஏது செய்யும்?
சிலர்
வாய்புளிக்கச் சொல்லுவார்
"வந்த பின் பார்ப்போம்' என்று;
வள்ளலே! நீ தான் சொன்னாய்
"வருமுன் காப்போம்' என்று!
சாதிக்கும் சாதிக்கும்
சண்டைகள் வராமல்
சாதிக்கும்-நீ கட்டிய
சமத்துவபுரங்கள்; அவை
வன்பகை தீர மன்பதைக்கு-நீ
வழங்கிய வரங்கள்.
இனி
இங்கு
கூன்பிறையும் கோதண்டமும்
கைகுலுக்கும்;
சிலுவையும் அவற்றை
சினேகிக்கும்!
ஏசுதேவனும்,
வாசுதேவனும் கூடுவர்; இது காறும்
"டூ' விட்டிருந்தவர்
டூயட் பாடுவர்!
நாடாளும் நல்லவனே
நீ சாதித்திருக்கிறாய்
சமயப்பொதுமறை;
இது சாதரணமானதல்ல
இமயப்பொறை!
அன்பின் மேன்மை
அறிந்தவன் நீ;
"அன்பின் வழியது உயிர்நிலை!' என
அய்யன் வள்ளுவன்-
செப்பிய ஞானம்-
செறிந்தவன் நீ!
உன்னைப் பற்றி... நான்
ஓர்ந்ததைச் சொல்வேன்!
நீ
தாடியில்லாத பெரியார்;
பொடியில்லாத அண்ணா... அவ்
இருவரும் உன்வடிவில்
இருக்கின்றார் ஒண்ணா!
நீ
வாலறிவன்; உன்னில் நான்
காலறிவன்
எனினும் என்
எழுத்துக்களை ஏற்று
"நன்று! நன்று'
எனக்களித்தாய்; இன்று
நல்விருதும்
எனக்களித்தாய்!