(தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில்ஓர் ஆட்டோவில் கண்ட வாசகம்)
அணில் கொறிச்சான் சுவாமி
குலசை நஜிமுத்தீன்,
காயல்பட்டினம்.
(திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
தேதியூர்
மதிராஜா திலகர்,
சின்னபுங்கனேரி.
(புதுச்சேரி திருபுவனையில் ஓர் உரக்கடையின் பெயர்)
உழவனின் நண்பன்
பி.சி.ரகு,
பள்ளிச்சேரி.
(நாகர்கோவிலில் வங்கி ஒன்றில் பெரியவரும் இளைஞரும்)
""தம்பி ... அப்படியே நமக்கும் கொஞ்சம் சானிடைசர் கையில அடிச்சு விடேன்''
""ஏன் நீங்க அடிக்க மாட்டீங்களோ?''
""அடிப்பேன்... நீ கை வெச்ச டப்பாவில் போய்,
கை வைக்கணுமான்னு யோசிக்கிறேன்''
மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான் விளை.
(நாகர்கோவில் மீனாட்சிபுரம் நகைக்கடைபஜாரில் இருவர்)
""மக்கா! பஜார் ஏன் இப்படி ஆளே இல்லாம காத்தாடுது?''
""நகைக்கடை விளம்பரத்துல வந்த நடிகைகளெல்லாம், இப்ப "அடகு நகைகளை மீட்டு விற்க எங்களிடம் வாங்க'ங்கிற விளம்பரங்களில் வர்றதுல இருந்தே நிலைமை மோசம் ன்னு தெரியலையா?''
எ.முகமது ஹுமாயூன்,
நாகர்கோவில்-1
(திருச்சி டோல்கேட் அருகே உள்ளஜோதிட மையத்தில்)
""என்ன ஜோசியரே.. கைரேகை பார்க்க சொன்னா தீர்த்தம்தர்றீங்க?''
""அட! இது சானிட்டைசர்ப்பா! கையில தேய்ச்சிட்டு கையை நீட்டு''
சிவம், திருச்சி.
மட்டம் தட்டப்படுகின்ற மனமும்,
மட்டம் தட்டப்படுகின்ற தரையும்,பலம் பெற்றுவிடும்!
பி.கோபி, கிருஷ்ணகிரி- 1
அலாரம் அடிப்பதை அணைத்து வைத்துவிட்டுப் புரண்டு படுத்த மகளை அம்மா தட்டி எழுப்பினாள்.
""கல்லூரிக்குச் செல்ல நேரமாகிவிட்டது. நீ என்ன சின்னக் குழந்தையா? பொறுப்பு வேணாமா? எழுந்திரு'' என்றாள்.
""அம்மா எனக்கு கல்லூரிக்குச் செல்லவே பிடிக்கவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் சொல்றேன் கேள். ஒன்று கல்லூரியின் ஆசிரியர்கள் ஒருவரையும் எனக்குப் பிடிக்க
வில்லை. ஸ்டூடன்ட்ஸ் சிலரைப் பிடிக்க
வில்லை... நான் காலேஜுக்குப் போகணும்னா நீ பொருத்தமான இரண்டு காரணம் சொல்லேன்'' என்றாள் மகள்.
""நீ காலேஜுக்குப் போக இரண்டு காரணம் என்ன? ஒரு காரணமே போதும்'' என்றாள் அம்மா.
""என்ன காரணம்?''
""ஏன்னா... நீ தான் காலேஜுக்குப் பிரின்சிபால்''
காந்தி நாராயணன், கரந்தை.
தெரிந்து மிதித்தாலும்,
தெரியாமல் மிதித்தாலும்,
மிதிபட்ட எறும்பிற்கு
இரண்டும் ஒன்றுதான்.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகே உள்ளது ஸிபுயா நகரம். இங்குள்ள பூங்கா அருகே ஒரு பொது கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கழிப்பறையை வெளியே இருந்து பார்த்தால், உள்ளே இருப்பதெல்லாம் தெரியும். வண்ண கண்ணாடிச் சுவர்களால் இந்தக் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நகரைச் சுற்றிலும் இதுபோன்ற 5 கழிப்பறைகளை நிப்பான் ஃபவுண்டேஷன் அமைத்திருக்கிறது.
பொதுக் கழிப்பறைகளின் உள்ளே "வேறு வழியில்லாமல்' நுழைபவர்கள், மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நுழைய வேண்டியிருக்கும்.
ஆனால் இந்தக் கழிப்பறைகளின் உள்ளே எந்த அளவுக்குத் தூய்மையாக உள்ளது என்பதை வெளியே இருந்து பார்த்துத் தெரிந்து கொள்ள முடியும். அதற்காகத்தான் இந்த ஒளி ஊடுருவும் கழிப்பறைகளை அமைத்து இருக்கிறார்களாம்.
"எலக்ட்ரோக்ரோமிசம்' என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கழிப்பறை அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கழிப்பறைக்குள் ஒருவர் நுழைந்து கதவைத் தாழிட்டதுமே, இந்தக் கண்ணாடிச் சுவர்கள் நிறம் மாறி, ஒளி புகாதவையாக ஆகிவிடும். வெளியிலிருந்து பார்த்தால் எதுவும் தெரியாது. கதவைத் திறந்து அவர் வெளியேறியதும் பழையபடி ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடிச் சுவர்களாக மாறிவிடும். மக்கள் விரும்பிப் பயன்படுத்தும் கழிப்பறைகளாக இவை உள்ளன.
என்.ஜே., சென்னை-58.