படப்பிடிப்பில் பாக்யராஜைத் திட்டிய ராதிகா! ஏன்?
நடிகை ராதிகா சரத்குமார் தன் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்...
செய்திகள்படப்பிடிப்பில் பாக்யராஜைத் திட்டிய ராதிகா! ஏன்?
நடிகை ராதிகா சரத்குமார் தன் சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்...
நடிகை ராதிகா சரத்குமார் இயக்குநர் பாக்யராஜ் குறித்து சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மிகத் திறமையான நடிகர், தயாரிப்பாளர் எனப் பெயரெடுத்தவர் ராதிகா சரத்குமார். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் மூலம் திரை வாழ்வை ஆரம்பித்த ராதிகா 48 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கிறார்.
பல கதாநாயகர்களுக்கு நாயகியாகவும் அம்மாவாகவும் நடித்தவர் தற்போது தாய் கிழவி என்கிற திரைப்படத்தில் பனுவுத்தாயாக நடித்து அசத்தியதால் பலரும் இவரின் நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ராதிகா சரத்குமார் தன் முதல்படமான கிழக்கே போகும் ரயிலில் தனக்கும் பாக்யராஜுக்கும் இடையே நடந்த சண்டையைப் பகிர்ந்துகொண்டார்.
அதில், “கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிப்பதில் எனக்கு பெரிய ஆர்வம் இல்லை என்பதால் யாராவது ஏதாவது சொன்னால் கோபித்துக்கொள்வேன். அதனால், கவனமாகவே எல்லாரும் கையாள்வார்கள். படப்பிடிப்பில் எனக்கு வசனம் சொல்லித்தர உதவி இயக்குநரான பாக்யராஜ் வருவார். ஒருமுறை அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது, நானும் நடிகை உஷாவும் அவரைக் கிண்டலடித்தபடியே இருந்தோம். ஒருகட்டத்தில் கோபமான பாக்யராஜ், நேராக இயக்குநர் பாரதிராஜாவிடம் சென்று, எங்களை மாட்டிவிட்டார்.
கடும் கோபத்தில் வந்த இயக்குநர், ‘என்ன சொன்னா கேட்க மாட்டீங்களா?’ என உஷாவைப் பயங்கரமாகத் திட்ட ஆரம்பித்துவிட்டார். என்னிடம், திரும்பியதும் நான் வசனத்தை அப்படியே ஒரு வரி விடாமல் கடகடவெனச் சொன்னேன். பாக்யராஜ் அதிர்ச்சியில் என்னைப் பார்த்தார். அப்போது, பாக்யராஜை ஆங்கிலத்தில் கடுமையாகத் திட்டிவிட்டேன். பாரதிராஜா அவரிடம், ‘ராஜா எதுவும் மனதில் வைத்துக்கொள்ளாதே’ என்றார். ஆங்கிலத்தில் திட்டியதால் எனக்குப் புரியவில்லை என பாக்யராஜும் ஜாலியாக எடுத்துக்கொண்டார். அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது.
நானும் பாக்யராஜும் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து சந்தித்தால் சிரித்துவிடுவோம். அவர் கதாநாயகன் ஆனபோது, ‘நீயெல்லாம் ஹீராவா ராஜா’ எனக் கேட்டேன். இன்று போய் நாளை வா திரைப்படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக நடித்தாலும் காட்சிகளில் நாங்கள் அதிகம் ஒருவரை ஒருவர் பார்க்க மாட்டோம். எங்களுக்கு சிரிப்பு வந்துவிடும்.” என்றார்.