முகப்பு
தினமணி கதிர்

இளம் வயதில்  இரட்டையர்கள் சாதனை!

கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஆன்லைனில் கற்பதைப் பற்றி எல்லாரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பகிர்:


கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் சூழ்நிலையில் ஆன்லைனில் கற்பதைப் பற்றி எல்லாரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற டேக்வோண்டோ என்ற தற்காப்பு கலை குறித்த தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள், காரைக்காலிலுள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் படிக்கும் சாதனை சிறார்களான ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீ ஹரிணி.

இவர்கள் பால்ய வயதிலேயே இந்தியாவில் முதன்முறையாக கராத்தே என்ற தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்தவர்கள் என்பதும், கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு இருநூறுக்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் தேசிய விருதுகளையும், பட்டங்களையும் வென்று, இளம் வயதிலேயே அதிக பட்டங்களைப் பெற்ற சாதனையாளர்கள் என்றும் புகழப் பட்டவர்கள். 10 வயதுக்குள்ளே 200 - க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளனர். இதில் மாவட்ட, மாநில, உலக அளவில் பல விருதுகளை வாங்கி உள்ளனர்.

வொண்டர் சாதனையாளர் புத்தகத்தில் இவர்கள் இடம் பிடித்து இருக்கிறார்கள். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான இந்திய சாதனையாளர்களும் இடம் பெற்றிருக்கும் புத்தகம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இது தொடர்பாக சிறுவன் ஸ்ரீவிசாகன் கூறுகையில்,"" கரோனா தொற்றால் ஏற்பட்டிருக்கும் இந்த அச்சம் இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கும் என்று மருத்துவ உலகம் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். அத்துடன் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையிலும், வளர்ச்சியடைந்த தகவல் தொழில் நுட்பத்தை கல்விக்கான கருவியாக மாற்றி, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஆன்லைன் கல்வி மற்றும் தொலைக்காட்சி கல்வி ஆகிய வசதிகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.

இரட்டையர்களில் மற்றொருவரான ஸ்ரீஹரிணி பேசுகையில், ""நானும், என்னுடைய சகோதரர் ஸ்ரீ விசாகனும் மூன்று வயதிலிருந்தே தற்காப்புக் கலையை ஆர்வமாகப் பயின்று வருகிறோம். கடின பயிற்சி மற்றும் விடாமுயற்சியினால் ஒன்பது வயதிலேயே கராத்தே கலையில் இரண்டு "பிளாக் பெல்ட்' டை வென்ற இரட்டையர்கள் என்ற உலக சாதனையைப் படைத்திருக்கிறோம். பெற்றோரின் அரவணைப்பும், காரைக்காலில் உள்ள இன்டர்நேஷனல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாதெமி இயக்குநர் மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரின் பயிற்சியும், தற்காப்பு கலையில் சிறப்புமிக்கவர்களாக எங்களை மாற்றி இருக்கிறது. இந்த பயிற்சிகள் தாம் எங்களை உற்சாகமாக இயங்கச் செய்கிறது. கராத்தே என்ற கலையுடன் குங்பூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வாள், வாள் பயிற்சி, நுங்சாக்... என பல்வேறு தற்காப்பு பயிற்சிகளை நாங்கள் பயின்றிருக்கிறோம்'' என்றார்.

வீடு நிறைய பரிசு கோப்பைகளை நிரப்பி வைத்திருக்கும் இந்த சாதனை இரட்டையர்கள், தாங்கள் கற்ற தற்காப்புக் கலையை பயிற்சி வீடியோவாக்கி, www.karatetwins.com. என்ற யு டியூப் தளத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள். இவர்களின் தளத்தைப் பார்வையிடுபவர்கள், இவர்களின் பயிற்சியைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிக்கலாம். இந்த தளத்திலுள்ள பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், சில்லுக்கோடு, தட்டாமலை, பூப்பறிக்க வருகிறோம், பச்சை குதிரை, பம்பரம், கிட்டிப்புல்..போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகளின் வீடியோக்களையும் கண்டு ரசிக்கலாம்.

இந்த கரோனா காலகட்டத்தில் குடும்பத்திலுள்ள அனைவரும் பார்வையிடும் தளமாக இந்த தளம் இருக்கிறது.

இவர்களது பெற்றோர்களான முருகானந்தம்-பிரியா தனது குழந்தைகளை பற்றி குறிப்பிடும்போது, ""இந்தியாவிலேயே முதன் முறையாக இரட்டையர்கள் 6 வயதில் முதல் நிலை பிளாக் பெல்ட் பெற்றது இவர்கள்தான். இது நடந்தது 2017- இல். அடுத்த வருடமே இவர்கள் இருவரும் இரண்டாம் நிலை கருப்பு பெல்ட் பெற்று விட்டார்கள். எங்களைப் பொறுத்த அளவில் நாங்களாக எதையும் அவர்களிடம் திணிக்க மாட்டோம். தற்காப்பு கலை மட்டும் அல்ல, இவர்கள் பள்ளியில் நடக்கும் நாடகம், மற்றும் சதுரங்க ஆட்டத்திலும் பங்கு பெற்று உள்ளார்கள்'' என்கிறார்கள்.

சிறுவன் ஸ்ரீவிசாகன் ஐஏஎஸ் படிக்க விரும்புகிறான். சிறுமி ஸ்ரீஹரிணி தனது தாத்தா இருதய நோயினால் இறந்ததால், தான் மருத்துவப் படிப்பு படித்து இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க விரும்புகிறாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments