என் வயது 34. கரோனா பெரும் தொற்று ஏற்பட்டு மிக மோசமான நிலைக்குச் சென்று எப்படியோ ஒருவாறாக அதிலிருந்து விடுபட்டுவிட்டேன். ஆனால் உடல் மெலிந்து கறுத்துவிட்டேன். இருமல், விக்கல், சிறிது படி ஏறினாலே மூச்சுத்திணறல், தண்ணீர் தாகம், மயக்கம் போன்ற பலவீன நிலை மாறவில்லை. இதற்கு ஏதேனும் ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
சிவராம், சென்னை.
இதுபோன்ற நிலை மாற பல மூலிகைகளைக் கஷ்டப்பட்டுச் சேகரித்து, நெய் மருந்தை உருவாக்கி நம் முன்னோர் சாப்பிட்டுக் குணமடைந்ததாக ஆயுர்வேத நூல்களில் காணப்படுகிறது. சுமார் 3 கிலோ நெய்யில், திரவமாக நெல்லிக்காய்ச்சாறு, தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு, பால்முதுக்கன் சாறு, கரும்புச்சாறு, ஆட்டு மாமிச ரசம், பசுவின் பால் ஆகியவற்றை வகைக்கு 1.6 லிட்டர் கலந்து, நன்கு அரைத்து கல்கமாக ஜீவகம் (பால்முதுக்கன்) ருஷபகம், அடபதியன், சுக்கு, பூலாங்கிழங்கு, காட்டு உளுந்துவேர், காட்டுப் பயறு வேர், ஓரிலை வேர், மூவிலை வேர், மேதா, மஹாமேதா, காகோலீ, க்ஷீரகாகோலீ, முள்ளுக்கத்திரி வேர், கண்டங்கத்திரிவேர், வெள்ளை மூக்கரட்டை, சிகப்புச்சாரணை, அதிமதுரம், பூனைக்காலிவிதை, தண்ணீர்விட்டான் கிழங்கு, ருத்தி (நிலப்பனைக்கிழங்கு), ஈச்சங்காய், சிறுதேக்கு, திராட்சை, நெருஞ்சில் (ஸமூலம்), திப்பிலி, சிருங்காடகம் (ஜர்தால்), கீழாநெல்லி, சிறுபுள்ளடி, பதிமுகம் (பத்மகாஷ்டம்), சிற்றாமுட்டி, பேராமுட்டி, இலந்தை, அக்ரோடு பழம், பேரீச்சங்காய், வாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றை வகைக்கு 25 கிராம் என சேர்த்து, நெய் தயாராக்கி இறக்கியதும், தேன் 800 கிராம், சர்க்கரை 1.6 கிலோகிராம், லவங்கப்பத்திரி, ஏலரிசி, லவங்கம், மூங்கிலுப்பு 400 கிராம், லவங்கப்பட்டை, மிளகு வகைக்கு 50 கிராம் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த நெய்மருந்திற்கு "அமிருதப்ராச கிருதம்' என்று பெயர். தற்சமயம் இந்த நெய் மருந்து விற்பனையில் உள்ளது.
தன்னுடைய உடல் பலம், பசியின் தன்மை ஆகியவற்றிற்கு ஏற்ப, தகுந்த அளவில் இந்த மருந்தை நக்கிச் சாப்பிட வேண்டும். மனிதர்களுக்கு அமுதத்துக்கு ஒப்பான செயலை இது ஆற்றும் என்பதால் அமிருதப்ராசம் என்ற பெயரிலேயே இது வழங்கப்படுகிறது. பாலும், மாமிச சூப்பும் சேர்த்து உணவை எடுத்துக் கொண்டு இம்மருந்தைச் சாப்பிட வேண்டும்.
தொடர் வறட்டு இருமலால் உடல் சோர்வுற்றவர், பலவீனமானவர், நோயின் தாக்கத்தினால் உடல் இளைத்தவர், உபாதையினால் உடல் நிறம் குன்றியவர், பேசும்போது த்வனி குறைந்தவர்ஆகியோருக்கு உடலைப் போஷிப்பித்து, ஊட்டமடையச் செய்யும். மேலும் இருமல், விக்கல், காய்ச்சல், மூச்சிரைப்பு, உடல் எரிச்சல், தண்ணீர் தாகம், ரத்தபித்தம் எனும் ரத்தக் கசிவு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.
குழந்தை பிறப்பிற்காக ஏங்குபவர்களுக்கு உதவிடக் கூடியது. வாந்தி, மூர்ச்சை, இதய உபாதை, சிறுநீர் உபாதைகள் போன்றவற்றையும் குணப்படுத்தக் கூடியது.
நோயினால் உடல் வாடி மெலிந்தவர்களுக்கும், இந்த நெய் மருந்தில் கூகை நீரும், திப்பிலியும், நெல்பொரியைப் பொடித்தும் கலந்து, கெட்டியாக உருட்டி, தகுந்த அளவு தேனும் சேர்த்து நம் முன்னோர் பயன்படுத்தி உடல் வாட்டத்தையும் மெலிந்த உடலையும் குணப்படுத்தினர். "சர்ப்பிர்குடம்' என்ற பெயரில் இதைப் பயன்படுத்தி, மருந்தை உண்டவுடன் மேலே சிறிது பாலும் பருகுவர். உடல் பலத்தையும், புஷ்டியையும் வெகு விரைவில் இது ஏற்படுத்தித் தரும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.