முகப்பு
தினமணி கதிர்

இணையத்தை கலக்கும் பாடல்...!

இந்த ஆண்டு நவம்பரில்  வெளியாகியிருக்கும்  இலங்கைத் தமிழ்ப் பாடலான "ஐயோ சாமி  நீ எனக்கு வேணாம்!  பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது   போதும்'   என்ற பாடல் உலகத்  தமிழர்களிடையே டிரெண்டிங் ஆகியுள்ளது.

Updated On : 25 டிசம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:41 PM

இந்த ஆண்டு நவம்பரில் வெளியாகியிருக்கும் இலங்கைத் தமிழ்ப் பாடலான "ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்! பொய் பொய்யாய் சொல்லி ஏமாத்தினது போதும்' என்ற பாடல் உலகத் தமிழர்களிடையே டிரெண்டிங் ஆகியுள்ளது. கடந்த ஆண்டில் "மணிகே மகே ஹிதே' என்ற சிங்களப் பாடல் பிரபலமான நிலையில், இந்த ஆண்டு தமிழ்ப் பாடல் பிரபலமாகியுள்ளது.

பொதுவாக, தமிழையும் தமிழர்கûளையும் சிங்களவர்களுக்குப் பிடிக்காது. அவர்களையும் ரசிக்கச் செய்து பாடவும் செய்திருக்கிறது "ஐயோ சாமி' பாடல்.

"ஹே மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே' என்ற பாடல் விரகதாபத்தின் எதிரொலி என்றால், தன்னை ஏமாற்றிய கணவன் அல்லது காதலனை ஒதுக்கி கண்ணியமாக விமர்சிக்கும் விசனப்பாடலாக அமைந்துள்ளது.

Advertisement

இந்தப் பாடலை எழுதிய இலங்கையைச் சேர்ந்த கவிஞரான "பொத்துவில்' அஸ்மின் கூறியதாவது:

""எனது சொந்த ஊர் இலங்கை மட்டக்களப்பு அருகேயுள்ள பொத்துவில் கிராமம். எனது மூதாதையர்கள் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்தை அடுத்துள்ள தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர்கள்.

இலங்கையில் வட்டாரத்து தமிழ் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எனக்கு யாப்பிலக்கணம் நன்றாகவே வரும். சிறுவயதிலிருந்து வாசிப்பு எனக்கு சுவாசம் மாதிரி அமைந்துவிட்டது. 4 கவிதை நூல்களை எழுதியுள்ளேன்.

அச்சு ஊடகத் துறையில் கிடைத்த அனுபவம், தொலைக்காட்சித் துறைக்கு அழைத்துச் சென்றது. இலங்கை தேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் பணிபுரிந்தேன்.

நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தேன். விஜய் ஆண்டனி நடித்த "நான்' என்ற படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை' என்ற பாடலையும் பாடியுள்ளேன். சுமார் 25 படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன்.

"ஐயோ சாமி' பாடலை நான் எழுதினாலும், பாடியவர் சிங்களப் பாடகி விண்டி குணதிலக்க. சனுக்க விக்ரமசிங்க என்பவர் இசை அமைத்தார்.

"தன்னை வஞ்சித்த காதலனை வெறுத்து ..' காதலி பாடும் பாடலை சிங்களத்தில் சனுக்க எழுதி, விண்டி பாட தயாரானது. சனுக்கவுக்கு இந்தப் பாடல் தமிழில் வெளியானால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, தமிழில் மொழி பெயர்த்து எழுத என்னிடம் சொன்னார்.

"மொழிபெயர்ப்பு வேண்டாம். அதே மெட்டில் ஒரிஜினல் தமிழ்ப் பாடலை எழுதித் தருகிறேன்' என்று சொல்லி எழுதியும் கொடுத்தேன். விண்டி தமிழில் தெளிவாகப் பாட கைப்பேசி மூலம் வழிகாட்டினேன். நானோ, சனுக்கவோ, விண்டியோ பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளவில்லை. தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக இந்த முயற்சி சாத்தியமாகியுள்ளது.

55 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். சிங்கள ஊடகங்களும் இந்தப் பாடலை கொண்டாடி வருகின்றன. இதைத் தொடர்ந்து, சிங்கள இசை அமைப்பாளர்கள் தமிழ்ப் பாடலைத் தயாரிக்க முன்வர ஆரம்பித்துள்ளனர்.

உலக அளவில் பெண்களுக்கு இந்தப் பாடல் பிடித்துப்போயுள்ளது. தமிழகத்திலும் பல பெண்கள் இந்தப் பாடலைப் பாடுவதாக, காணொளிகளை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது, எனது நண்பரான வர்சனைத் தொடர்பு கொண்டு பாடல்வரிகளை சொல்லி சில மணிநேரத்தில் வர்சன் பாட "வானே இடிந்ததம்மா..." பாடலை இணையத்தில் அஞ்சலிப் பாடலாக வெளியிட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போதும் அஞ்சலிக் கவிதையை வெளியிட்டேன்.

எஸ்.பி.பி. மறைந்தபோது, இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்களுடன் இணைந்து "இசையே எழுந்து வா" அஞ்சலிப் பாடலை நான் எழுத அரங்
கேறியது. இதை விஜய டி.ராஜேந்தர் என்னைப் பாராட்டினார்.'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.