தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கல்லீரல் உபாதை நீங்க...

கல்லீரல் சிரோஸிஸ் எனும் உபாதையால் பாதிக்கப்பட்ட ஒருவர், உடல் சோர்வு, பசியின்மை, மயக்கம் என்ற மோசமான நிலையை அடைந்து, அவருடைய மகளின் ஒரு பகுதி கல்லீரல் தானத்தால் அறுவைச் சிகிச்சை மூலம்

எஸ். சுவாமிநாதன்


கல்லீரல் சிரோஸிஸ் எனும் உபாதையால் பாதிக்கப்பட்ட ஒருவர், உடல் சோர்வு, பசியின்மை, மயக்கம் என்ற மோசமான நிலையை அடைந்து, அவருடைய மகளின் ஒரு பகுதி கல்லீரல் தானத்தால் அறுவைச் சிகிச்சை மூலம் நலமடைந்ததாக சமீபத்தில் நாளிதழில் படித்தேன். எனக்கும் இந்த உபாதை, அதாவது தலைசுற்றல், மயக்கம் போன்ற கல்லீரல் உபாதையால் அவதிப்படுகிறேன். அறுவைச் சிகிச்சையின்றி குணமடைய ஆயுர்வேதம்
பலனளிக்குமா?

- சுந்தரேசன்,
புதுச்சேரி.

கொழுப்புச் சத்தை அதிகம் சாப்பிடுவதாலும், வகை கெட்ட உணவுகளை உண்பதாலும் ஈரல் எனும் கல்லீரல் அதாவது "லிவர்' பாதிப்படைகிறது. ஈரலிலிருந்து தான் செரிமானத்துக்கு அவசியமான பித்தநீர் சுரக்கிறது. ரத்தம் உண்டாவதற்கும் ஈரல் பெரிதும் காரணமாகிறது. உடல் உறுப்புகளில் மிக முக்கியமான இந்த ஈரல் கெட்டுவிட்டால், நீங்கள் குறிப்பிடும் வகையில் தலைசுற்றலும், மயக்கமும், பசியின்மையும், சோர்வும் ஏற்படக் கூடும்.

சிலருக்கு கல்லீரல் பாதிப்பினால் சரியாகப் பசி எடுக்காது. சில சமயம் அதிகமாகப் பசி எடுக்கும். உடல் முழுவதும் வெளுத்தும் மலமும் வெளுத்து போய் உடலில் ஒரு ஓய்ச்சலும், தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் உண்டாகும். அல்லது மலம், சிறுநீர், கண், நாக்கு, உடல் முழுவதுமே மஞ்சள் நிறமாகிவிடும். அப்பொழுதும் பசியில்லாமல் தூக்கமுமில்லாமல் தலைசுற்றலும் மயக்கமும் தொடர்ந்து நிற்கும்.

இவ்வகை உபாதைகள் கொஞ்ச நாள் நீடிக்க, நாளாக நாளாக பலஹீனமும் அதிகரித்து கடைசியில் மனிதன் படுத்த படுக்கையாகிவிடுவான்.

இது ஆரம்ப நிலையிலுள்ளபோது உலர் திராட்சையைக் கஷாயமாக்கி, அதில் சிவதை வேர் மேல்தோல் சூரணத்தை அரை முதல் 1 ஸ்பூன் (5 கிராம்) அளவு வரையில் கூட்டி குடித்தால், ஒன்றிரண்டு முறை பேதியாக்கிடல் நலமாகும்.

சுக்கு, திப்பிலி, மிளகு, ஏலரிசி, சீரகம் இவற்றின் சூரணங்களைச் சம எடையில் கூட்டியதில் (பஞ்ச தீபாக்கினி சூரணம்) 2 சிட்டிகை முதல் அரை டீ ஸ்பூன் அளவு வரையில் தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை சிறிது வெந்நீருடன் சாப்பிட்டு வருவது இதில் நலந்தரும்.

இந்த ஐந்து சரக்குகளுக்கும் சம எடையில் கல்கண்டின் சூரணத்தைக் கூட்டிக் கொண்டு சாப்பிட்டால் ஒரு சமயம் பசியின்மை, ஒரு சமயம் அகோரப் பசி என்ற நிலை மாறும். "லிவர்' சரிவர வேலை செய்யும். அதன் ஏற்றத் தாழ்வினால் விளையும் தலைசுற்றல், மயக்கம் இவை அறவே நீங்கும்.

நிலவேம்பு என்று ஒரு கடைச் சரக்கு. இது கடுங்கசப்பு. ஈவிரக்க மற்ற கசப்பு எனப் பொருள் தொனிக்க இதை "கிராததிக்தம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. இதன் கஷாயத்தையோ அல்லது இடித்துச் சலித்த சூரணத்தில் சில சிட்டிகை அளவையோ கொஞ்ச நாள் சாப்பிட்டுவர லிவரை பற்றிய செயல் கேடு யாவும் குணமாகும்.

இந்த நிலை முற்றிலும் மாறியதும் ஓமத்தையோ கஸ்தூரி, மஞ்சளையோ இட்டு காய்ச்சிய எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. உணவில் காரம்- புளி- உப்பு குறைத்து, மிகவும் ஸாத்வீகமான சுவைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவது நல்லது.

கல்லீரலை மேம்படுத்தும் வகையில் பல மூலிகைகளின் ஆராய்ச்சியின் பயனாக, தற்சமயம் சிறந்த ஆயுர்வேத மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளன. பண்டைய ஆயுர்வேத குறிப்புகளில் காணப்படும் தாடிமாதி கிருதம், வாஸாகுடூச்யாதி கஷாயம், திராகஷாதி கஷாயம், திராகஷாதி லேஹியம் போன்றவையும் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிட உகந்தவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

SCROLL FOR NEXT