தாய்ப் பாலில் தாய்ப் பாசம்
அன்றும் வழக்கம்போல் 10 நிமிடம் தாமதமாக சென்னை சென்ட்ரலில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. முன்பதிவுப் பெட்டி என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
தினமணி கதிர்தாய்ப் பாலில் தாய்ப் பாசம்
அன்றும் வழக்கம்போல் 10 நிமிடம் தாமதமாக சென்னை சென்ட்ரலில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. முன்பதிவுப் பெட்டி என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது.
அன்றும் வழக்கம்போல் 10 நிமிடம் தாமதமாக சென்னை சென்ட்ரலில் இருந்து சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. முன்பதிவுப் பெட்டி என்பதால் கூட்டம் சற்று குறைவாகவே இருந்தது. நானும் என் மனைவியும், கீழ்தள இருக்கையில் இருந்து வந்தோம்.
ஜோலார்பேட்டை வந்ததும் எங்கள் இருக்கைக்கு எதிர்புறமாக ஒரு தம்பதி கைக் குழந்தையுடன் ஏறினார்கள். அவர்களின் இருக்கைகள் மேலே ஒதுக்கப்பட்டிருந்தது.
சற்று தயங்கியவாறே அந்தப் பெண்மணி என் மனைவியிடம் குழந்தையுடன் இருப்பதால், "" உங்கள் இருக்கையைத் தர முடியுமா?'' என்றார். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் இருந்து வருவதாகவும், கோயம்புத்தூர் செல்வதாகவும் சொன்னார்.
கைக் குழந்தையுடன் இருப்பதால் நான் எனது இருக்கையை அவருக்குக் கொடுத்துவிட்டு, என் மனைவி இருக்கையிலேயே அமர்ந்து வந்தேன். எங்கள் இருக்கையிலிருந்து பின்புற இருக்கையில் வடநாட்டு தம்பதி இரண்டு வயது பெண் குழந்தையுடன் பயணித்தனர். அந்தக் குழந்தையின் அழுகுரல் மிகவும் கோரமாக இருந்தது.
சற்றுப் பொறுத்து பார்த்த நான் குழந்தையின் அழுகை தாங்காமல் அவர்கள் அருகில் சென்றேன். அவர்களுக்குத் தமிழ் மொழி தெரியாததால் ஹிந்தியில் பேசினர். எனக்கு ஹிந்தி தெரிந்ததால், அவர்களிடம் விவரம் கேட்டறிந்தேன்.
மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றும், காய்ச்சல் அடிப்பதால் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை என்றும். புட்டிப்பால் குடிக்காமல் பசியில் அழுகின்றாள் என்றும் கூறினார்கள்.
என்ன செய்வதென்று தெரியாமல் எனது இருக்கைக்குத் திரும்பி வந்து நான் கொண்டு வந்த சில்வர் டம்ளரை எடுத்து என் மனைவியிடம் கொடுத்தேன். குழந்தை அழுத காரணத்தைக் கூறினேன்.
மனைவி தெலுங்குகாரப் பெண்ணிடம் கொஞ்சம் தாய்ப்பால் தரும்படி கேட்டுக் கொண்டார். ஏன் எதற்கென்று புரிந்துகொண்ட அந்தப் பெண்மணி தன் கணவனிடம் தன் குழந்தையை ஒப்படைத்து விட்டு, என்னைக் கூப்பிட்டு அழும் குழந்தையிடம் கூட்டிப் போகச் சொன்னார்.
குழந்தைக்குத்தான் பால் கேட்டேன் என்று என் மனைவி கூறவும் அழுகின்ற குழந்தையை ஹிந்தி பெண்ணிடம் இருந்து வாங்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஆண்களை விலகச் சொல்லிவிட்டு தன் தாய்ப்பாலை அந்த அழுகின்ற குழந்தைக்குக் கொடுத்தார்.
சற்று நேரத்தில் அந்தக் குழந்தையின் அழுகை நின்றுவிட்டது. பாலை நன்றாகக் குடித்துவிட்டு அந்தத் தாயின் முகத்தைப் பார்த்து மழலை சிரிப்பு பொழிந்தது.
குழந்தையை அவரிடம் கொடுத்துவிட்டு தனது இருக்கைக்குத் திரும்பி வந்தார். ""புட்டிப்பாலை குடிக்காத குழந்தை எப்படி டம்ளரில் குடிக்கும்'' என்று தெலுங்கில் என்னிடம் கேட்டார்.
""அதனால்தான் நான் நேரடியாகச் சென்று கொடுத்தேன்'' என்றார். ஹிந்திகாரர் எழுந்துநின்று பாலை கொடுத்த அம்மாவிடம் அவர் மொழியில், "" மிக்க நன்றி. மிக்க நன்றி'' என்று கூறி இரு கைகளையும் மேலே தூக்கினார்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த எங்கள் கண்கள் ஈரமாச்சு!
ஜாதியிலோ மதத்திலோ மொழியிலோ தாய் பாசம் இல்லை என்பதையும் தாய்ப்பாலில் மட்டும்தான் தாய்ப்பாசம் இருக்கிறது என்பதையும் எங்கள் அனைவருக்கும் புரியவைத்தது.
வாழ்க தாயுள்ளம்.