முகப்பு
தினமணி கதிர்

பெற்றால்தான் பிள்ளையா?

"தாய்மை' என்பது உறவுச்சொல் மட்டுமல்ல;  அது உணர்வுச்சொல் என்று வாழ்ந்து வாழ்கிறார்கள் சினிமா நாயகிகள். தத்தெடுத்தல்- இன்றளவும் நம் சமூகத்தில் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படாத  விஷயங்களுள் ஒன்று.

Updated On : 13 நவம்பர், 2022 at 6:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:19 PM


"தாய்மை' என்பது உறவுச்சொல் மட்டுமல்ல;  அது உணர்வுச்சொல் என்று வாழ்ந்து வாழ்கிறார்கள் சினிமா நாயகிகள். தத்தெடுத்தல்- இன்றளவும் நம் சமூகத்தில் முழுவதுமாக ஏற்றுக் கொள்ளப்படாத  விஷயங்களுள் ஒன்று. "இதெல்லாம் சரியா வருமா?' என்பதில் தொடங்கி அதை முன்னிறுத்தி எழுப்பப்படும் கேள்விகளும் விமர்சனங்களும் நிறைய உண்டு. சாமானியர்களின் நிலையே இது என்றால், எப்போதும் விமர்சன வளையங்களுக்குள் இருக்கும் சினிமா ஹீரோயின்கள், ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்று முடிவெடுக்கும்போது, பல அதிர்வலைகளை உருவாக்கும். அத்தனையும் தாங்கி நின்று, தங்களின் தத்துப் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் இந்த ரியல் ஹீரோயின்ஸ்!


ஷோபனா

கதாநாயகியாக 400 படங்களுக்கும் மேல் நடித்துள்ள ஷோபனா, நாட்டியத் துறையில் தவிர்க்க முடியாத சாதனையாளர். கேரளாவைச் சேர்ந்த ஆறு மாதப் பெண் குழந்தையை 2014-ஆம் ஆண்டில் தத்தெடுத்து இருக்கிறார் இவர். அதன் மூலம் தனது வாழ்வை மேலும் அழகாக்கிக் கொண்ட ஷோபனா, பலருக்கும் முன் உதாரணமாகத் திகழ்கிறார். குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் தனது மகளுக்கு அமுதூட்டும் (முதல் முறையாக சாதம் ஊட்டும்) சம்பிரதாயத்தை நடத்திய ஷோபனா, அப்போது அந்தக் குழந்தைக்கு "அனந்த நாராயணி' எனப் பெயர் சூட்டினார். இன்று நான்கு வயதாகும் அனந்த நாராயணியின் மழலையிலும் குறும்புகளிலும் மலர்ந்திருக்கிறார் ஷோபனா அம்மா!

Advertisement

சுஷ்மிதா சென்

இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பிரபஞ்ச அழகியான சுஷ்மிதா சென், இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். திருமணம் என்னும் கூட்டுக்குள் இன்று வரை தன்னை அடைத்துக்கொள்ளாத இவர், 2000-ஆம் ஆண்டு, தனது 25-ஆவது வயதில், ஆறு வயதான ரெனியைத் தத்தெடுத்தார். இன்று பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில் இருக்கிறார் ரெனி சென். முதல் குழந்தை போல, இரண்டாவது குழந்தையைத் தத்தெடுப்பது சுலபமாக இல்லை சுஷ்மிதாவுக்கு. 

"இந்து அடாப்ஷன் மெயின்டனன்ஸ் ஆக்ட்'டின்படி, ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரு குழந்தைகளைத் தத்தெடுப்பதை, சட்டம் அனுமதிக்கவில்லை. எனினும் போராடி, மும்பை   உயர்நீதிமன்றத்தில் இருந்து அனுமதி பெற்று, அலிஷாவை 2010-ஆம் ஆண்டில் தத்தெடுத்தார். இன்று 9 வயதாகும் அலிஷா, அப்போது மூன்று மாதக் கைக் குழந்தை. இப்போது தனது மகள்களுடன் ஆனந்தமாக வாழும் 43 வயதாகும் சுஷ்மிதா, அகத்திலும் அழகி!

ரேவதி

தமிழ்நாட்டை வருடிய மெளனராகம், ரேவதி. 1986-ஆம் ஆண்டு மலையாள நடிகர் சுரேஷ் மேனனை திருமணம் செய்துகொண்டார். திரைப்பயணம் சுவையாக அமைந்த இவருக்கு ஏனோ திருமண பந்தம் சுவையாக அமையவில்லை. 2002-ஆம் ஆண்டு முதலே பிரிந்து வாழ ஆரம்பித்த இந்தத் தம்பதி, 2013-ஆம் ஆண்டு சட்டப்படி விவாகரத்தையும் பெற்றனர். 2012-இல் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்த ரேவதி, 2013 ஜூலை 8, தனது 48வது பிறந்தநாள் அன்று அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்புகளுக்காகவே தனது சினிமா, நடிப்பு வேலைகளை குறைத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். ரேவதியின் மகளுக்கு இன்று வயது எட்டு. பெயர் மகீ!

ரவீனா டான்டன்

பாலிவுட்டின் கலக்கல் ஹீரோயினான ரவீணா டான்டன், 1995-ஆம் ஆண்டு தன் 21-ஆவது வயதில் இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தார். அவர்கள் இருவரும் ரவீனாவின் உறவினரின் குழந்தைகள். தாய் இறந்துவிட, தந்தை குடியின் கைகளில் இருக்க, அந்தத் தம்பதியின் பெண் குழந்தைகளான சாயாவும் பூஜாவும் கதியற்று நின்றார்கள். அவர்களுக்கு தான் தாயாகி, அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து வந்தபோது, அந்தச் சிறுமிகளின் வயது 11, 8. இன்று இருவரும் திருமணம் முடிந்து செட்டில் ஆகிவிட்டார்கள். இவர்களைத் தத்தெடுத்த பிறகுதான் 2004-ஆம் ஆண்டில் ரவீணாவின் திருமணம் நடைபெற்றது. ரவீனா - அணில் தந்தானி தம்பதிக்கு ராஷா, ரன்பீர் என ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறார்கள்.

""மூடிக் கிடக்கும் மனங்களின் உள்ளே விரக்தியின் இருட்டும்; திறந்து கிடக்கும் மனங்களின் வெளியே நம்பிக்கையின்  விடியலும் எப்போதும் இருக்கும்.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.