திரைக்கதிர்
"துணிவு' படத்தை அடுத்து அஜித், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார்.
"துணிவு' படத்தை அடுத்து அஜித், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நடிகர்களிடம் தேதிகள் கேட்டு பேச்சு வார்த்தையும் பரபரக்கிறது. இதில்தான் காமெடியனாக சந்தானம் நடிக்கப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது. அஜித்துடன் "வீரம்' படத்தில் நடித்திருந்தார் சந்தானம். அதன்பிறகு சந்தானம் ஹீரோவாக பல படங்களில் நடித்து வந்தார்.
---------------------------------------------
"விஜய் 67' படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மனோபாலா ஆகியோர் தொடர்பான காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். முன்னதாக, சென்ற வாரத்தில் இப்படம் குறித்த டெஸ்ட் ஷூட் ஒன்றையும் நடத்தியிருந்தார் லோகேஷ். இப்போது, சத்தமே இல்லாமல் படப்பிடிப்பைத் தொடங்கியிருக்கிறார்கள். சென்னையில் நடக்கும் படப்பிடிப்பு பின்னர் வட இந்திய மாநிலங்களுக்கு செல்ல இருக்கிறது.
Advertisement
---------------------------------------------
சமூக பிரச்னைகள் குறித்து அவ்வப்போது பேசி வரும் நடிகர் கிஷோர் தனது கருத்துகளை சுட்டுரை பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தில்லியில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசை விமர்சித்தும் பல பதிவுகளைப் பதிவிட்டிருக்கிறார். நடிகை சாய்பல்லவி காஷ்மீர் பண்டிட்கள் குறித்துப் பேசியபோது அதற்கு ஆதரவு தெரிவித்து விமர்சனத்துக்கு உள்ளானார். சமீபத்தில் தொழிலதிபர் அதானி பிரபல மீடியாவை வாங்கியதைக் குறிப்பிட்டு "கறுப்பு தினம்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் சுட்டுரை விதிமுறைகளை மீறியதால் அவரது கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------
"ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சென்னை, கடலூர் பகுதிகளிலும் பின்னர், ஆதித்யா ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்தும் படப்பிடிப்பு நடந்தது. படத்தில் வில்லனாக வசந்த் ரவி அவரின் மனைவியாக ரவீணா ரவியும் நடித்து வருகின்றனர். ஒரு நாள் இரவில் நடக்கும் கதை இது. முத்துவேல் பாண்டியனாக அசத்தவிருக்கிறார் ரஜினி. பக்கா ஆக்ஷன் காமெடி ஜானர். இதுவரை 65 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது.