சித்தரிக்கப்பட்டது 
தினமணி கதிர்

விடுமுறை

பாத்திரங்கள் மோதும் சத்தம் கேட்டு, படுக்கையில் இருந்து எழுந்த சரத் சந்திரன் தனது கண்களைக் கசக்கிக் கொண்டே சமையல் அறையை நோக்கிச் சென்றான்.

இள.அழகிரி

பாத்திரங்கள் மோதும் சத்தம் கேட்டு, படுக்கையில் இருந்து எழுந்த சரத் சந்திரன் தனது கண்களைக் கசக்கிக் கொண்டே சமையல் அறையை நோக்கிச் சென்றான். முந்தைய நாள்தான் எட்டாம் வகுப்பு முழுப் பரீட்சை எழுதி முடித்திருந்தான்.

வாஷ்பேஷனில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த அம்மா, 'என்னப்பா சரத்.. அதுக்குள்ள எழுந்துட்டே இன்னும் கொஞ்சம் நேரம் துôங்கி இருக்கலாம் இல்லை. லீவு தானே..''

'அம்மா.. அப்பா என்னம்மா சொன்னாங்க?''

'நான் இன்னும் பேசலைடா?''

சரத் ஏமாற்றமாக பால் காய்ச்சிக் கொண்டிருக்கும் அம்மாவையே பார்த்தான்.

'அப்பாவுக்கு காபி கொடுகிறப்பயாவது பேசறீயாம்மா?''

'பார்ப்போம்டா...?''

தனது கோடை விடுமுறையில் கிரிக்கெட் பயிற்சியில் சேருவதற்கு மிகுந்த ஆசையில் இருக்கும் சரத் தனது, அம்மாவின் பதிலால் எரிச்சல் அடைந்து, வெறுப்பாக பல் துலக்க ஆரம்பித்தான்.

சரத்தின் நண்பர்கள் ஆளுக்கொரு பயனுள்ள குறிக்கோள்களை வைத்து இருந்ததாக அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஒருவன் கீ போர்டு கற்றுக் கொள்ள இன்ஸ்ட்ருமென்ட்டே வாங்கி விட்டதாகப் பெருமையடித்தான். மற்றவன் பிரபல பாடகரிடம் பாட்டு கிளாஸ் போக இருக்கிறான். சுரேஷ் அபாகஸ் கிளாஸ் சேர்ந்து விட்டதாகச் சொன்னான். கிரிஷ் டூரிஸ்ட் விசாவில் கனடா சென்று வர இருக்கிறான். சரத் சந்திரனுக்கு கிரிக்கெட் மீது பிரியம். இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் விளையாடி விராத் கோலி விக்கெட்டை எல்லாம் எடுத்து பிரபலமான சக்கரவர்த்தி சிதம்பரம் ஸ்டேடியத்தில் அண்டர் சிக்ஸ்டீன் பசங்களுக்கு கோச்சிங் தருவதாக இருப்பதை அறிந்து படிவம் எல்லாம் எழுதி கொடுத்து விட்டான்.

பள்ளியின் ஆண்டு விழா மலரில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்பதே அவர்களது ஆசை. விளையாட்டு, ஓவியம், இசைத் திறமை உள்ளவர்கள் பள்ளி அளவில் அல்லது மாவட்ட அளவில் பரிசு பெற்றால் கேடயத்துடன் புகைப்படம் வெளியிடுவார்கள். பள்ளி முழுவதும் அது பெருமையாகப் பேசும் விஷயமாக மாறும். வெளிநாடு போய் வருவதைக் கூட செய்தியாகப் போட்டு கெளரவப்படுத்துவார்கள். கிரிஷ் ஆண்டுதோறும் அந்தச் செய்திக்குச் சொந்தக்காரனாக இருப்பான்.

"அப்பா மணிவண்ணனிடம் சம்மதம் கிடைக்குமா?' என்று தெரியவில்லை. அப்பாவுக்கு கிரிக்கெட் என்றால் ஏனோ கசப்புக் காயைத் தவறி மென்றது போல முகம் சுளிப்பார். அவருக்கு தெரியாமல் தான் டி.வி.யில் கிரிக்கெட் பார்ப்பான் சரத். இத்தனைக்கும் சின்ன வயதில் தான் விளையாட்டு வீரர் என்று பெருமைப்

பட்டுக் கொள்வார் அவனது அப்பா.

'உங்களுக்கு எந்த விளையாட்டுப்பா பிடிக்கும்'' என்ற சரத் தனதுஅப்பாவை கேட்பான்.

'எல்லா விளையாட்டுகளும்தான். சீசனுக்கு தகுந்த மாதிரி விளையாடுவோம். அப்பாவுக்குத் தெரியாத கேமே இல்லை. எல்லா கேம் ரூல்ஸூம் தெரியும்'' என பெருமைப்பட்டுக் கொள்வார்.

'என்ன நமச்சி.. சோகமாக இருக்கே..''

'அம்மா உனக்கு எத்தனை தடவை சொல்றது என்னை நமச்சின்னு கூப்பிடாதேம்மா.. கோபம் கோபமா வருது..''

'உன் செல்லப் பேருடா... .நமச்சிவாயம் சின்ன வயசுல இருந்து அப்படிதான் கூப்பிடுறோம்...''

'அப்ப எனக்கு விவரம் புரியாது.. மாடர்னா கூப்பிடுங்க..''

வீட்டு பாட நோட்டை ஒருமுறை நண்பன் வாங்க வந்தபோது, ,வீட்டில் கூப்பிடும் பெயரை தெரிந்துக் கொண்டு ஏனைய நண்பர்களிடம் சொல்லி விட்டான். அவ்வளவு அன்று முதல் சரத்தை "நமச்சி.. நமச்சி' என கேலி பேச ஆரம்பித்து விட்டனர். யாரும் அப்படி கூப்பிடக் கூடாது என்பதற்காகவே அடுத்தவரிடம் அடங்கியும் போக வேண்டியதாகி விட்டது. வாத்தியாரும் கேள்விப்பட்டு அப்படியே கூப்பிட கிளாஸ் ரூமே கொல்'லென சிரித்தது. அந்தகோபம் அவனுக்கு.

'இந்த ஆண்டு சரத்தோட லீவை நாம வித்தியாசமாகக் கொண்டாடப் போறோம்.. என்ன ஓ.கே.வா?'' என்று மணிவண்ணன் அலுவலகத்தில் இருந்து வந்ததும் வராததுமாக பீடிகை போட அம்மாவுகே புரியவில்லை. சரத்துக்கு புரிய வந்தபோது மேலும் கவலையில் ஆழ்ந்தான். இது கொண்டாட்டம் இல்லை; திண்டாட்டம்.

'நாம நம்ம சொந்த ஊருக்கு போகப் போறோம். என்ன ஜாலியா பையா?''

அவனது அம்மாவுக்குதான் ஆச்சரியம். கடந்த ஏழெட்டு வருடத்தில் சென்னை நெருக்கடியில் சிக்கி இயந்திரமாக மாறிவிட்டவளுக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி. கணவர் மணிவண்ணன் கணினிப் பொறியாளர். கை நிறைய வருமானம். வீடு, கார் என இருந்தும் வாழ்க்கையில் நிம்மதி இருக்கிறதா?, இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாது.

'ஒரு மாதமாகவே லீவு கேட்டுக்கிட்டு இருந்தேன். இன்னைக்கு தான் சம்மதிச்சாங்க? ரெண்டு வாரம் நம்ம ஊருக்கு போயி நம்மள புத்தாக்கம் பண்ணிக்கப் போறோம்'' என்று அப்பா குதூகலிக்க, சரத் வெறுப்பின் உச்சத்துக்கே போய் விட்டான்.

கிரிக்கெட்டில் சேர்த்து விடவில்லை என்றாலும் பரவாயில்லை. கிராமத்தில் போய் என்ன பண்ணுவது? இன்டர்நெட் , பீட்சா, ஏ.சி. என எதுவும் இல்லாமல் அவனது புலன்கள் சரிவர இயங்காதே? நண்பர்கள் போன் மேல் போன் போட்டு தாங்கள் நினைத்த மாதிரி சேர்ந்து விட்டதாகத் தம்பட்டம் அடித்து வெறுப்பேற்றினார்கள். அம்மா வேறு ஒரு மாதத்துக்கான துணிமணிகளை பெட்டி, பெட்டியாக அடுக்கிக் கொண்டிருப்பது மகா அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.

மணிவண்ணனின் சொந்த ஊர் சிதம்பரம் அருகே பெருமாத்துôர் என்கிற கிராமம். வயதான அவனது தாய், தந்தை இருக்கிறார்கள். புவனகிரி, கீரப்பாளையம் என சுற்றுப்பட்டு கிராமம் எங்கும் அவனது உறவினர்களே நிறைந்திருக்கிறார்கள். மணிவண்ணன் தனி ஆளாக இருந்தபோது, காவிரி ஆறு போல, கோயில் திருவிழா, ஊர் விசேஷம் என ஓடோடி போய்க் கொண்டு இருந்தான். திருமணமும், பொறுப்புடன் கூடிய பதவி உயர்வு வேலையும் ஆற்றின் குறுக்கே அணை கட்டியது போல அனைத்தையும் தடைப்படுத்தி விட்டது.

கிராமத்துக்கு வந்த மறுநொடியே சரத் சந்திரனுக்கு "ஓ' வென அழ வேண்டும் போல இருந்தது. ஊர் மட்டுமல்ல வயதாகிய தாத்தா, பாட்டியை கூட பிடிக்கவில்லை. அப்பாவைப் போல தாத்தா உயரமாகவும் கறுப்பாகவும் அடர்ந்த தலைமுடியுமாக இருந்தார். இரண்டு நாளாக பார்த்த வரையில் இடுப்பில் வேட்டியும் நேரத்துக்கு தகுந்த மாதிரி தோளிலும் கழுத்திலும் துண்டு போட்டிருந்தார்.

அந்தக் காலத்து வீடு இப்படி தான் இருக்கும் போல என நினைத்துக் கொண்ட சரத் சுவரைப் பார்த்தான். கறை படிந்து ஒருவித சிகப்புக் கலராக இருந்தது. நல்ல காற்றும் வெளிச்சமுமாக திடமான வடிவமைப்பான இதுபோன்ற வீட்டை அவன் சென்னையில் பார்த்தது இல்லை. கலைநயத்துடன் கூடிய கனமான மரக்கதவு, வீட்டின் வெளியே நீண்ட திண்ணைகள். அதில் சில சமயம் தாத்தா துண்டு விரித்து படுத்திருப்பார். யாராவது வந்தால் உட்கார வைத்து அன்பாக பேசி மோர் கொடுத்து உபசரிப்பார். உச்சி வெயிலிலும் சூடு தெரியாத வீட்டு சூழல்.

'நமச்சிவாயத்தை பாக்கிறப்ப என் அப்பாவை பாக்கிற மாதிரி இருக்கு..'' என தாத்தா சிதம்பர

நாதன் சொல்ல, பொக்கை வாய் பாட்டியும் ஆமோதிப்பது போல சிரித்தது சரத்தை வெறுப்பேற்றியது.

'பேராண்டி.. போன வருஷமே உன்னை எதிர்பார்த்தேன்.. நீ வரலை.. நான் கொடுத்து வச்சவ.. இப்பயாவது உன்னைப் பார்த்தேனே. எப்ப வேணாலும் சந்தோஷமா கண்ணை மூடுவேன்.''

'நீ கொஞ்சம் வாயை மூடேன். போயி வேலையை பாரு..''

'ஆமா நெருப்புன்னு சொன்னா வாயை சுட்டுடுமாக்கும்..''

'சுடாதுதான். எதுக்கு நெருப்பை ஞாபகப்படுத்துறே..'' என தாத்தா கோபித்துக் கொண்டார்.

கீரப்பாளையத்தில் இருந்து வந்த அத்தையோ, 'ஆமா பொண்டாட்டி நுôறு வயசு வரைக்கும் கூட இருக்கனும்னு கிழவருக்கு ஆசையை பாரேன்..'' என்று கூற, காதில் வாங்கிய அனைவரும் சிரித்தனர். அந்த ஒல்லியான அத்தை சரத்தின் கன்னத்தை கிள்ளி சிறுபிள்ளையாகப் பாவித்து துôக்கி ஒரு சுற்று சுற்றுவாள் என யாரும் எதிர்பாரக்கவில்லை.

'அடேய் ... யம்மா.. செண்பகம்.. என் பேரனை கீழே போட்டுடாதேடி..'' என்று பாட்டி பதட்டமாய் ஓடி வந்து, கீழே இறக்கி விட்டதும் தான் அமைதியானாள்.

'உனக்கு உன் பேரன் மேல இருக்கிற அக்கறை எனக்கு என் அண்ணன் பையன் மேல இருக்காதா?'' என்ற அத்தை செண்பகம் சென்னையில் இருந்து மணிவண்ணன் குடும்பத்தோடு வந்திருப்பதை அறிந்து பொழுது விடிந்ததும் விடியாததுமாக தனது குடும்பத்துடன் வந்து விட்டாள்.

மாங்காய், எலுமிச்சை பழம் என மூட்டை கட்டிக் கொண்டு வந்தவற்றை நடுக்கூடத்தில் இறக்கினாள். அந்த வாசனை வீடெங்கும் இன்னுமும் நிறைத்திருந்தது.

'மணி ஊருக்கு போறப்ப சொல்லு... புதுசா பறிச்சி மாங்காயும் எலுமிச்சை பழமும் மூட்டைகட்டித் தரேன். என்ன சரியா?'' என்றும் செண்பகம் சொன்னாள்.

வெளித் திண்ணையில் அத்தையின் வீட்டுக்காரருடன் சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த அப்பா "சரி சரி' என்று குரல் கொடுத்தார்.

அக்கம் பக்கம் ஆள்கள் ஆசைஆசையாக பேசினார்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அப்படி ஒரு மதிப்பு அந்த ஊரில் இருந்தது. தாத்தா ஒரு கெளரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் என்பதை தாத்தாவின் நண்பர் சொல்லிவிட்டுப் போனதை நினைத்துப் பார்த்தான்.

'என்ன நமச்சி.. மனசுல எதையோ நினைச்சுக்கிட்டு திருதிருன்னு முழிக்கிறே.. இது யாரு தெரியுமா என் தம்பி பொண்ணு.. உன் அப்பனுக்கு தங்கச்சி முறை. உன் அப்பா கூட பேசிக்கிட்டு இருகிறாறே அவரு உனக்கு மாமா முறை என்ன புரியுதா?'' என்ற தாத்தா வருவோர் போவோரிடம் எல்லாம் பேரனை அறிமுகப்படுத்தி பெருமைஅடித்துக் கொண்டார்.

'என் பேரன் சென்னையில் பெரிய கான்வென்ட் ஸ்கூல்ல படிக்கிறான். தெரியுமா?''

'பேரன் வந்ததுல இருந்து கிழவனுக்கு பாதி வயசு குறைச்ச மாதிரி என்ன ஆட்டம்... கொண்டாட்டம்...'' என்று வீடு தேடி வந்த சொந்தக்காரரிடம் பொறாமையைக் கண்டாள் பாட்டி.

அன்று இரவே தாத்தாவையும், பேரனையும் உட்கார வைத்து திருஷ்டி சுத்தி போட்ட பாட்டி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சுத்திப் போட்டாள்.

தென்னம் துடைப்பக் குச்சிகளைக் கொத்தாக எடுத்து விளக்கில் காட்டி எரிய விட்டாள். திகுதிகுவென எரிந்ததை சுவர் ஓர மூலையில் சாய்த்து வைத்தாள். தீ ஜுவாலை தளம் வரைக்கும் போய் கொஞ்சமாக அடங்கியது.

'நமச்சி என்ன முழிக்கிறே.. ஊரு கண்ணு பூரா உம் மேல தான். என்னா திருஷ்டி.. காத்து கருப்பு எதுவும் இனி உன்னை அண்டாது.. என்ன போயி சமத்தா துôங்கு'' என்றாள் பாட்டி. தாத்தா, பாட்டியிடம் விலகியே இருந்த சரத்சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி நெகிழ்து போயிருந்ததை உணர்ந்தான்.

அம்மாவும் பவிசாக பாட்டிக்கு பயந்து மரியாதையாக இருப்பதும், அப்பா தாத்தாவிடம் மெதுவாகப் பேசுவதும், பணிவாக இருப்பதும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெரியவர்களிடம் நாம் எப்போதும் மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்ற பாடம் படித்திருந்தான்.

சரத் சந்திரனுக்கு நிறைய நண்பர்கள் சேர்ந்தார்கள். பம்பரம் விட்டான். தரையில் கண்ணாடி குண்டு உருட்டி விளையாடினான். மாலையில் தாவணி போட்ட அக்காக்கள் ஸ்கிப்பிங் விளையடினார்கள். பல்லாங்குழி விளையாடினார்கள். அம்மாக்கள் ஒன்று கூடி நோட்டு புத்தகத்தில் புள்ளி வைத்து கோலம் போட்டார்கள். மறுநாள் அந்தக் கோலங்கள் தெருவெங்கும் உயிரோட்ட ஓவியமாய் கலர் கலராக விரிந்து இருந்தது. அம்மா வாசலை நிறைத்து அற்புதமான கோலம் போட்டிருந்ததை சரத் பார்த்து அசந்தே விட்டான். தெரு கோடியில் இருக்கும் முருகன் கோயிலில் " பாலிருக்குது.. பழமிருக்குது' என்ற பாடல் ஒலித்து கூடுதல் அந்த அதிகாலையை ரம்மியப்படுத்தி இருந்தது.

தொண்டையை செருமிக் கொண்டே வந்த தாத்தா முந்தைய நாளைப் போலவே இன்றும் தோள் மீது பேரனை உட்கார வைத்துக் கொண்டு தோட்டம் வழியே நடந்தார். வீட்டுக்குப் பின்னால் கொஞ்சம் துôரத்தில் உப்பனாறு ஓடிக் கொண்டிருந்தது. இரவு சில சமயம் கூர்ந்து கவனித்தால் வீட்டில் படுக்கையில் இருந்தபடியே தண்ணீரின் சப்தம் கேட்கலாம் என்று தாத்தா சொன்னதெல்லாம் நிஜம். பேரனை தண்ணீரில் இறக்கி நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்தார். ஆரம்பத்தில் பயந்த சரத் நான்கைந்து நாளிலேயே நன்றாக பயிற்சி பெற்றவனாய் நீச்சலடித்தான்.

தாத்தா குளிக்கும் முன்பு வேப்பங்குச்சியை வைத்து பல் தேய்த்தார். பேரனுக்கும் அந்தக் கசப்பு பிடித்து இருந்தது.

'தாத்தா வயசானா பல் விழும்னு சொல்வாங்க... உனக்கு எல்லா பல்லும் இருக்கு..''

'உங்க தாத்தாவுக்கு தான் இன்னும் வயசாகலியே'' என்று சிரித்தார் தாத்தா. கையால் உடம்பில் தேய்த்துக் கொண்டே தண்ணீரில் முழுகி எழும் போது பளிச்சென்று இருந்தார். திரும்ப வரும் வழியில் கத்தரிக்காய், தக்காளி, வெண்டைக்காய்களைப் பறித்து துண்டை விரித்து மூட்டையாக கட்டிக் கொண்டு ஒரு பக்க தோளில் போட்டுக் கொண்டார்.

மறுதோளில் உட்கார்ந்து இருந்த சரத், குதிரை சவாரி ஆனந்தம் கொண்டான்.

'பேராண்டி எல்லாம் நம்ம தோட்டம்தான்.. அப்புறம் வந்து இளநீர் பறிச்சு குடிக்கலாம்'' என்றார்.

சமையல் பிரமாதமாக இருந்தது. பாட்டிக்கு மீசை போடுவதும், அவள் துôங்குவது போல பாசாங்கு செய்வதும் சரத் தாத்தாவை மாட்டிவிட , பாட்டி தாத்தாவை விரட்ட சரத்துடன் தந்தையும் சேர்ந்து கை தட்டி ரசித்தார்.

எந்த வீட்டிலும் அழுது வடியும் டி.வி. சீரியல் ஓடவில்லை. அவ்வப்போது கரண்ட் கட் ஆனாலும், வியர்க்க விடாமல் காற்றடித்தது. பகலில் என்ன டிகிரி கோடை வெப்பமாக இருந்தாலும் அடர்ந்த மரங்களுக்கு அடங்கித்தான் போயிருந்தது. "நிலவுக்கு இத்தனை வெளிச்சமா?' என சரத்சந்திரன் வியந்தான். நடுத்தர வயதுகாரர்கள், பெரியவர்கள் என வயது வாரியாக ஒன்று கூடி அரட்டை அடித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பா நடுத்தர வயதுக்காரர்களுடன், வேட்டியை இறுகிக் கட்டிக் கொண்டு கபடி ஆடியதை எல்லாம் சரத் சந்திரனால் நம்ப முடியவில்லை.

'உன் அப்பா உன் வயசுல எல்லாம் வீட்டிலேயே தங்க மாட்டான். சதா பிரண்ட்ஸ், விளையாட்டுன்னு கெடப்பான். எல்லாரும் சமத்தான நல்லப் பசங்க. அதுல அருள்மொழின்னு ஒருத்தன் இருக்கான் பாரு.. இங்க ஸ்கூல்ல இப்ப வாத்தியாரா இருக்கான்.அவனும் உன் அப்பாவும் ரொம்ப சிநேதிதங்க.. அருள்மொழி கிரிக்கெட் பிரமாதமா விளையாடுவான். அரசியல் பண்ணி அவன் ஸ்டேட் பிளேயர் ஆவறத கெடுத்துட்டானுங்க? அதுல பெரிதும் மனசு உடைந்துப் போனது உன் அப்பாதான் பிறகு எந்த விளையாட்டு மேலயும் அவனுக்கு ஆர்வம் இல்லாம போயிடுச்சு'' என பழைய சோகக் கதையை போகிற போக்கில் தாத்தா சொல்ல, ஆதலால்தான் தன் கிரிக்கெட் ஆர்வத்தை அப்பா பெரிதாக கண்டுக் கொள்ளவில்லையோ என சரத் சந்திரன் நினைத்தான்.

அதே சகாக்களுடன் சீட்டுக்கட்டு விளையாடிக் கொண்டிருந்த அப்பாவை தாத்தா அருகே போய் நோட்டம் பார்த்தார். "காசு ஏதும் வைத்து விளையாடவில்லை' என்ற நிம்மதியில் சந்தோஷமாக திரும்ப வந்து பலாப்பழம் வெட்டி காயம் படாமல் எடுத்த சுளை, மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

'யாரு வீட்டு பலா..'' என பாட்டி குரல் கொடுத்தாள்.

'நம்ம நடேசன் வீட்டு தோட்டத்துல இருந்து பறிச்சுட்டு வந்தேன். தேன் மாதிரி இருக்கும்...'' என்ற தாத்தா மதியம் போல தோளில் தூக்கி வந்த பலாப்பழ காம்பை அறுத்து சாக்கு பையில் சாய்த்து வைத்திருந்தார். பாலெல்லாம் வடிந்து காய்ந்து பிசின் போன்று ஆனதும் கையில் நல்லெண்ணெய் தேய்த்துக் கொண்டு கத்தியை லாவகமாய் பிடித்து அறுத்ததை அருகே அமர்ந்து சரத் பார்த்தான். சீட்டு விளையாடுபவர்களுக்கு ஒரு தட்டில் வைத்து கொடுத்து வரச் சொன்னார். பாட்டி அக்கம் பக்கம் எல்லாம் கொண்டு போய் கொடுத்து வந்தாள். சரத் நிறைய சாப்பிட்டான்.

'டேய் சரத் வயிறு வலிக்கப் போவுது..'' என அம்மா எச்சரிக்க தொடுக்க, தாத்தா அண்ணாந்துப் பார்த்தார்.

'அதெல்லாம் ஒண்ணும் ஆகாதும்மா? தாத்தா... முழுப் பழத்தை ஒத்த ஆளா சாப்பிடுவேன் . கடைசியா பலாக் கொட்டை சாப்பிட்டா? எந்த வலியும் வராது..'' என்ற தாத்தா ஒரு பலாக் கொட்டை எடுத்து தோல் நீக்கி சாப்பிட்டு சரத்துக்கும் கொடுத்தார். துவர்ப்பாக இருந்தது .

'மருந்து இனிக்கவா செய்யும்'' என சத்தமாக சிரித்த தாத்தா, அப்பாவின் குரலைக் கேட்டு திடீரென சீரியஸானார்.

'அப்பா.. நாங்க நாளைக்கு ஊருக்கு போகலாம்னு இருக்கோம்.. லீவு முடியப் போகுது..''

'அட ஆமாம்பா.. நீங்க வந்து ரெண்டு வாரத்துக்கும் மேல ஆச்சு இல்லை..'' என்று தாத்தா அமைதியாய் ஆமோதித்தார்.

சரத் சந்திரன் பார்த்த கம்பீரமான தாத்தா காற்று போன பலூன் மாதிரி ஆகிவிட்டார். மறுநாள் குளிக்கப் போனபோது கூட தோள் குறுகிப் போயிருந்தார்.

'தாத்தா. கவலைப்படாதே.. கால் பரீட்சை, அரை பரீட்சை லீவுக்கெல்லாம் நான் அப்பாவையும் அம்மாவையும் அடம் புடிச்சு கூட்டிட்டு வர்றேன். நான் கேரண்டி'' என்ற போது தாத்தா ஆர்ப்பரிக்கும் தண்ணீரைவிட சத்தமாக சிரித்தார். பேரனை இறுகக் கட்டிக் கொண்டார்.

விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறோம் என பயந்த நமச்சிவாயத்தை இந்தக் கிராமம், பிரிய மனசில்லாதவனாக மாற்றி விட்டது. ஆதலால் தான் பிழைப்புக்காக ஊரு விட்டு ஊரு போன அனைவரும் , 'எனக்கு சொந்த ஊரு'' என்று ஒரு கதை வைத்து இருக்கிறார்களோ? என்று வியந்தான்.

ஊருக்கு திரும்புகிற செய்தியறிந்து தெருவே ஒன்று கூடி பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்த, அடுத்த வாரமே சரத் சந்திரனுக்கு பள்ளி திறந்து விட்டது. பாடப்புத்தகம், பள்ளிச் சீருடை என வாங்கப் போனப்போது நல்லவேளையாக எந்த நண்பனையும் அவன் பார்க்கவில்லை.

ஆனாலும் பள்ளித் திறந்ததும் அவர்கள் முகத்தில் விழித்து தானே ஆக வேண்டும்? விடுமுறையில் கிராமத்துக்கு போய் வந்ததை சொன்னால், ஒரு மாத்துக்கு ரவுண்டு கட்டி கிண்டலடிப்பார்களே?

வகுப்பு தொடங்கிய முதல் நாளிலேயே, பசங்க ஜாலியா இருக்கட்டுமே, என கணக்கு டீச்சர் பாடம் நடத்தவில்லை. வருகைப் பதிவேடு வாசித்து குறிப்பெடுத்ததும் 'வெரிகுட் ஃபுல் பிரஸண்ட்'' என்றார்.

'டியர் ஸ்டுடெண்ட்ஸ் லீவுல ஜாலியா இருந்திங்களா?''

'ஆமாம் மிஸ்...'' என்றனர் ஒரே குரலில்.

'வெரிகுட்.. சத்தம் போடக் கூடாது..''

'ஓ.கே. மிஸ்..'' கரம் குறைந்தவாறு மாணவர்கள்.

'லீவுல என்ன செஞ்சீங்க? எங்க போனீங்க?''

ஆளாளுக்கு ஆர்வத்துடன் சொல்ல, சத்தத்தில் காதை பொத்திக் கொண்ட டீச்சர் டேபிளை தட்டி அமைதிப்படுத்தினார்.

'அமைதி அமைதி...'' என்றுகூறிவிட்டு, 'வரிசையா ஒருத்தர் ஒருத்தரா சொல்லுங்க'' என்றதும் , வகுப்பு நிசப்தமானது.

முதல் மாணவனாக உட்கார்ந்து இருந்த சுரேஷ் எழுந்து கையை கட்டிக் கொண்டு, 'அபாகஸ் கிளாஸ் போனேன் மிஸ்.. அப்புறம் டைப்பிங் கிளாஸ் போனேன் மிஸ்.,''

'வெரிகுட்...''

'நான் கனடா போனேன் மிஸ். அங்க கம்ப்யூட்டர் கிளாஸ் போனேன்'' என்றான் கிரீஷ்.

சரத் அருகே அமர்ந்து இருந்த வருண், மியூசிக் கிளாஸ் போனதாக சொல்லி அமர, மெல்ல சரத்சந்திரன் எழுந்தான். கையை கட்டிக் கொண்டான். எதைப்பற்றி சொல்லுவது என தடுமாறினான். முகம் மாறிப் போனவனாக அக்கம் பக்கம் பார்த்தான். மாணவர்கள் அவனது பரிதாப நிலையை பார்த்து கைத்தட்டி கிண்டலடித்தார்கள்.

'என்ன சரத். நீ எங்கேயும் போகலை'' என்ற டீச்சரிடம் கண்டிப்பு தெறித்தது.

'கிரிக்கெட் பயிற்சிக்கு போகலை டீச்சர்... எங்க அப்பா என்னை சொந்த ஊருக்கு அழைச்சுக்கிட்டு போயிட்டார்'' என மெலிதான குரலில் சொல்ல, நண்பர்கள் டேபிளை தட்டி சத்தம் எழுப்பி பரிகாசம் செய்தார்கள். சுரேஷோ, 'மிஸ் இவன் இன்னுமும் நமச்சிவாயமாகவே இருக்கான்'' என்றதும் அனைவரும் கொல்'லென சிரித்து சரத்சந்திரனை அழவே வைத்து விட்டார்கள். தேம்பி தேம்பி அழ..!

'ஸ்டாப்பிட்..'' என்று டீச்சரின் குரலுக்கு ஊசி விழுந்த சப்தம் கூட எழவில்லை. தலைகுனிந்து இருந்த சரத் கண்ணை துடைத்துக் கொண்டே இருந்தான். உடல் அதிர்வு தொடர்ந்து தந்தியடித்துக் கொண்டே இருந்தது.

'உண்மையா கோடை விடுமுறையை சிறப்பா பயன்படுத்திக் கொண்டது நம்ம சரத் சந்திரன்தான். எல்லோரும் ஜோரா கைத்தட்டுங்க?'' என டீச்சர் சொல்ல சுரேஷ் உள்பட அனைவரும் கைத்தட்டினார்கள். சரத் கண்ணைத் துடைத்து ஆச்சரியமாக டீச்சரை பார்த்தான்.

'நாம எல்லாம் நாகரிகம் அடைஞ்சுட்டதா நினைச்சு.. செயற்கையா ஒரு வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டு நம்பளை நாமே ஏமாத்திக்கிட்டு இருக்கோம். நம்ம குடும்பத்துல யார் யார் இருக்காங்க? அவங்க எப்படி பட்டவங்க? தாத்தா, பாட்டி பாசம்னா என்னா? அத்தை, மாமா அரவணைப்பு என்னன்னு அனுபவப்பூர்வமா சரத்துக்கு தெரிஞ்சிருக்கும். பாசம் இல்லாம தனித் தனி தீவு மாதிரி வாழுறது தான் வாழ்க்கையா? பசங்களா.. மியூசிக்.. பாட்டு.. விளையாட்டு எல்லாம் எப்ப வேணாலும் கத்துக்கலாம். இனிமையான இயல்பான வாழ்க்கையை அது போகிற போக்கில்தான் வாழ கத்துக்கனும்.. பேமிலி ட்ரீ படம் உறவினர் பெயரோட வரையச் சொன்னா நம்ம சரத் டக்கு டக்குன்னு வரைஞ்சுடுவான். எனக்கு தெரிஞ்சு நிறைய இந்தக் கால மாணவர்களுக்கு தாத்தா, பாட்டியோட பேரே தெரியலை... சரி.. சுரேஷ்.. உங்க அப்பாவோட அப்பா அம்மா பேரைச் சொல்லேன்.'' என்றார் டீச்சர்.

டக்கென எழுந்த சுரேஷ்.. 'எஸ் மிஸ்'' என்றான்.

'உன்னோட கிரான்ட் ஃபாதர், மதரோட பேரைச் சொல்லேன்.''

'தாத்தா பேரு.. தாத்தா.. பேரு...'' என ராகம் போட்டு தெரியாமல் தவிக்க, மாணவர்கள் ஓ'வென கத்தினார்கள். இருமுனைக் கத்தி தன்னையே பதம் பார்த்து விடும் என பாவம் சுரேஷ் நினைத்திருக்க மாட்டான்.

'சரத் சந்திரன்.. உங்க தாத்தா பேரு என்ன?''

'மிஸ்... சிதம்பரநாதன்.. கடலுர் மாவட்டம் புவனகிரி பக்கத்துல இருக்கிற பெருமாத்துôர் கிராமத்துல இருக்காங்க?''

'ஓ.கே . உங்க தாத்வோட அப்பா பேரு என்ன?''

'நமச்சிவாயம் மிஸ்..'' என்றான்.

மாணவர்களிடம் எழுந்த கைத்தட்டல். பீரியட் மணிஅடிக்கும் வரை நீண்ட பின்குறிப்பாக அந்த வருட நீச்சல் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த" நமச்சிவாயம் என்கிற சரத் சந்திரன் கேடயம் துôக்கி பிடித்தப்படி பள்ளி ஆண்டு விழா மலரில் இடம் பிடித்திருந்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT