முகப்பு
தினமணி கதிர்

திரைக்  கதிர்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் "ஆக்ஸ்போர்டு யூனியன் டிபேட் சொசைட்டி' மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் உரையாடினார்.

Updated On : 21 ஜனவரி 2024, 12:00 am IST
பகிர்:

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் "ஆக்ஸ்போர்டு யூனியன் டிபேட் சொசைட்டி' மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் உரையாடினார். அந்நிகழ்வில் இளம் தலைமுறையினர்களிடம் தற்கொலை எண்ணங்கள் அதிகமாக இருப்பது குறித்து மாணவர்களிடம் பேசினார். அப்போது அவர், "இளம் வயதில் எனக்குத் தற்கொலை எண்ணங்கள் வந்திருக்கின்றன. அந்த நேரத்தில் என் அம்மா என்னிடம், "பிறருக்காக நீ வாழும் போது இது போன்ற எண்ணங்களெல்லாம் தோன்றாது' என்பார். அதுதான் அவர் எனக்குச் சொன்ன அற்புதமான அறிவுரை. பிறருக்காக நீங்கள் வாழும்போது சுயநலமாக இருக்க மாட்டீர்கள். உங்கள் வாழ்வு அர்த்தமுடன் இருக்கும். இசையமைக்கும்போது, எழுதும்போது, உணவு இல்லாதவராகளுக்கு உணவளிக்கும்போது நான் இதை நினைத்துக் கொள்வேன். அதுதான் நம்மை இயக்குகிறது' என நெகிழ்ந்துள்ளார். 

-----------------------------------------

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயார். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள் என இயக்குநர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். நானும், எனது தாயாரும் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். அதன்பின் கேப்டன் இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன். அவர்களின் குடும்பத்தாரோடு பேசும்போது, ""அவர்கள் சொன்ன ஒரு விஷயம் என்னை ரொம்பவே பாதித்தது. "விஜயகாந்த் சாரின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். "திரையுலகைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும்தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்கள். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. அந்த குடும்பத்துக்காக நான் எதையும் செய்வேன்'' என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

-----------------------------------------


மணிரத்னத்தோடு படம் தொடங்குவதற்கு முன்பு தனது 237-ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய  கமல், "நல்ல திறமையாளர்களை இயக்குநர்களாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எழுத்தாளர்களையும் இயக்குநராக மாற்ற வேண்டும் என்றும் ஆசை. ஓடுகிற குதிரை எது என்று பார்த்து அதன் மீது பந்தயம் கட்டுகிறவர்கள் நாங்கள் அல்ல. நல்ல திறமையாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கவே ராஜ்கமல் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினோம். எனது 237-ஆவது படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்குகின்றனர்' என்றார் கமல்.

-----------------------------------------


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் பல்வேறு இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டு இருக்கிறார். சமீபத்தில் கூட 4 அலுவலகங்களை விலைக்கு வாங்கி ஒரே நிறுவனத்திற்கு வாடகைக்குக் கொடுத்தார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவரான அமிதாப் பச்சன் தற்போது அயோத்தியிலேயே வீடு கட்ட முடிவு செய்துள்ளார். அயோத்தியில் நாளை ராமர் கோயில் திறக்கப்பட இருக்கிறது. இதையடுத்து அயோத்திக்கு எப்போதும் இல்லாத அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. நடிகர் அமிதாப் பச்சனும் அயோத்தியில் 10,000 சதுர அடி நிலத்தை வாங்கியிருக்கிறார். 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட சரயு நகரில் இந்த நிலத்தை அமிதாப் பச்சன் வாங்கி இருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.