கடல் விமானம்!
கேரளத்தில் கடல் விமானம் திட்டம் சாத்தியமாகி உள்ளது. மூணாறு மாட்டுப்பெட்டி நீர்த்தேக்கத்திலிருந்து அண்மையில் கிளம்பிய கடல் விமானம் கொச்சி காயலில் (உப்பங்கழி) வந்து இறங்கியது.
கேரளத்தில் கடல் விமானம் திட்டம் சாத்தியமாகி உள்ளது. மூணாறு மாட்டுப்பெட்டி நீர்த்தேக்கத்திலிருந்து அண்மையில் கிளம்பிய கடல் விமானம் கொச்சி காயலில் (உப்பங்கழி) வந்து இறங்கியது. காரில் ஐந்து மணி நேரமும் பிடிக்கும் நிலையில், கடல் விமானத்தில் அரை மணி நேரத்தில் செல்லலாம்.
மத்திய அரசின் 'உதான்' திட்டமானது சுற்றுலா வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதோடு, மருத்துவ வசதிக்காகவும், மக்களை அவசரகால வெளியேற்றம் செய்யவும், முக்கிய பிரமுகர்களின் சுற்றுலாப் பயணங்களை மேம்படுத்தவும் உதவும்.
இந்தப் போக்குவரத்து ஆந்திரப் பிரதேசத்தில் நவம்பர் 9-இல் தொடக்கிவைக்கப்பட்டது. இரண்டாவதாக கேரளத்தில் நவம்பர் 10 -இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.
Advertisement
தரையிலும் நீரிலும் இறங்கும் திறன் கொண்ட இந்தக் கடல் விமானம் உருவ அளவுக்கு ஏற்ப 9 பயணிகள் முதல் 30 பேர் வரை கொண்டு செல்லும். ஜன்னல் வழியாக கேரளத்தின் இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளை, மேற்குத் தொடர்ச்சி மலைகள், வனங்களை மிக்க குறைந்த உயரத்திலிருந்து காணலாம்.
இந்த விமான சேவையை 'ஸ்பைஸ்' விமான நிறுவனம் ஏற்றுள்ளது. நீர்த் தேக்கத்தில் இறங்க, பறக்க சுமார் 7 அடி ஆழமுள்ள, முக்கால் கி.மீ. நீளமுள்ள நீர்ப்பரப்பு தேவை.
அதனால் நீர்த்தேக்கம் உள்ள நகரங்களை, அல்லது பகுதிகளை கடல் விமானம் மூலம் இணைக்கலாம். லட்சத் தீவுகள், அந்தமான் போன்ற பகுதிகளிலும் கடல்விமானம் அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உண்டு.
இதற்கிடையில், கடல் விமானத்தில் பயணிக்கும்போது ஏற்படுத்தும் சத்தம் மூணாறு பகுதியில் யானை உள்பட வனவிலங்குகளை அச்சுறுத்தலாக அமையும் என கேரளா வனத் துறை முன்னறிவிப்பு வழங்கியுள்ளது.