மனித வாழ்க்கையின் பலவீனங்களை வெளிப்படுத்தும் 'கனத்த கவிதையை ஒத்த உரைநடை'க்காக தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங், இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளார்.
1901-இலிருந்து நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்தாலும், பரிசு பெறும் முதல் ஆசியப் பெண், முதல் தென் கொரியர் என்ற பெருமைக்குரியவராகியிருக்கிறார் ஹான் காங்.
காலம், காலமாகப் பெண்களின் மனதின் அடிமனதில் மூடி மறைக்கப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் வெடித்துப் புறப்படக் காத்திருக்கும் சுதந்திர வேட்கையைப் பற்றியதுதான் 'தி வெஜிடேரியன்' நாவல். குடும்பம், கணவர், சமுதாயம் தரும் அழுத்தத்துக்கு எதிராக, நாயகி 'இயாங் ஹை' காட்டும் எதிர்ப்பை விவரிப்பதுதான் இந்த நாவல். இந்த நாவல் 2020-இல் தமிழிலும், பின்னர் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டது.
இந்த நாவலை 'மரக்கறி' என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கும்'தமிழ்வெளி'பதிப்பகத்தின் பதிப்பாளர் வசந்தி கலாபனிடம் பேசியபோது:
'ஹான் காங்கின் தந்தையும் எழுத்தாளர். 1993-இல் கவிதைகளை வெளியிடத் தொடங்கினார். 1995-இல் 'லவ் ஆஃப் யோசு' என்ற சிறுகதைத் தொகுப்பை ஹான் காங் வெளியிட்டார். தொடர்ந்து நாவல்கள், சிறுகதைகள் என பல படைப்புகளை வெளியிட்டுள்ளார்.
மூன்று பாகமுள்ள மூல நாவலை 'க்கேசைஜுயிஜா'(காய்கறி உணவு உண்பவர்- தி வெஜிடேரியன்) என்ற தலைப்பில் கொரிய மொழியில் அவர் 2007-இல் வெளியிட்டார். அவர் முதலில் எழுதிய சிறுகதையின் தொடர்ச்சிதான் இந்த நாவல். இது கொரிய மொழியில் திரைப்படமாகி, 2010-இல் வெளியிடப்பட்டது. இதை ஆங்கிலத்தில் 2015-இல் மொழி பெயர்த்தார் டெபோரா ஸ்மித். இதனால் இவர்கள் இருவருக்கும் புக்கர் பரிசு 2016-இல் கிடைத்தது.
மொழிபெயர்ப்பாளர் சமயவேல் நாவலை வாசித்துவிட்டு, 'தமிழில் மொழிபெயர்க்கலாம்'என பரிந்துரைத்தார். ஹான் காங் குறித்த விவரங்களை இணையத்தில் தேடி பேசி, மொழிபெயர்க்கும் உரிமையை முறையாக 2018-இல் பெற்றோம். பின்னர், 'மரக்கறி'யை 2020-இல் வெளியிட்டோம்.
ஆங்கில மொழிபெயர்ப்பில் விட்டுப் போன சில பகுதிகளை ஆங்கிலத்தில் ஹான் காங் எங்களுக்கு அனுப்பிவைத்தார். அதையும் சேர்த்து தமிழ் மொழிபெயர்ப்பை மேம்படுத்தியுள்ளோம்.
அவருக்கு நோபல் விருது, பரிசின் இன்றைய மதிப்பானது இந்திய மதிப்பில் சுமார் எட்டு கோடி ரூபாயாகும். 53 வயதாகும் ஹான் காங் சியோலில் கல்வி நிறுவனத்தில் படைப்பு இலக்கியத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பிரபலங்கள் ஹான் காங்கைப் பாராட்டி, சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
நோபல் பரிசு அறிவிப்பு வெளியானவுடன் தென் கொரியாவில் 'ஹான் காங்' எழுதிய 'க்கேசைஜுயிஜா'விற்றுத் தீர்ந்து விட்டது. அவர் எழுதிய இதர நூல்களும் அமோகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் 'தி வெஜிடேரியன்'நாவல் விற்பனை அதிகரித்துள்ளது.
ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், லெபனான்-ஈரான் போர்களால் தினமும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதால், கொண்டாடங்களை ஹான் காங் தவிர்த்துவிட்டார். கொரிய திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், கொரிய உணவுகள் இந்தியாவில் இளைய தலைமுறையினரிடையே பிரபலமாகிவிட்டன'என்கிறார் வசந்தி கலாபன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.