திரைக் கதிர்
இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்திருந்தாலும் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.
தினமணி கதிர்திரைக் கதிர்
இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்திருந்தாலும் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார்.
இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்திருந்தாலும் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இசைக்கச்சேரி நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் இசைக்கச்சேரியை நேரில் பார்த்து மகிழ்ந்திருந்தனர்.
இந்நிலையில் அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை இளையராஜா வெளியிட்டிருக்கிறார். "சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர் உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்!
தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்' என அறிவித்திருக்கிறார். விரைவில் அவர் அறிவித்துள்ள மாவட்டங்களில் எந்தத் தேதிகளில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.
அரசியலுக்கு புதிதாக வந்திருக்கும் விஜய்யின் தற்போதைய நிலையைப் போலவே, "ஜனநாயகன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.
அதாவது வெள்ளை உடை அணிந்திருக்கும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை கோஷமிடும் கூட்டத்தில் விஜய் செல்பி எடுப்பதுப்போல இந்தப் போஸ்டர் அமைந்துள்ளது.
அவர் நடிக்கும் கடைசி படத்தில் அரசியல் இருக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில்...எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தப் போஸ்டர் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பவர் பூஜா ஹெக்டே.
இசையமைப்பாளர் இமான், இப்போது சமூக சேவகராகவும் நற்பணிகள் பலவற்றையும் செய்து வருகிறார். இப்போது விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஷோவின் நடுவராகவும் இருந்து வரும் அவர், பிரபுசாலமன், சுசீந்திரன் உள்பட பலரின் படங்களுக்கு இசைமைத்தும் வருகிறார்.
சமீபத்தில் அவரது இசையில் வெளியான "பேபி பேபி' பட பாடல்களும் வரவேற்பை அள்ளி வருகிறது. இந்நிலையில் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.
இமானுக்கு ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து விட்டு, அவரின் உடல் உறுப்பு தானத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
'நிறைய படங்கள் நடிப்பது எளிமையானதுதான். ஆனால் இதுதான் எனது கடைசி படம் என்று என்னை யோசிக்க வைக்கும் அளவுக்கான படங்களில் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். முக்கியமாக அந்தக் கட்டத்தில்தான் நான் இருப்பதாக உணர்கிறேன்.
இனிமேல் ஒரு நடிகையாக சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே விரும்புகிறேன்.படங்களைத் தேர்ந்தெடுப்பதில் பல விதமாக யோசித்தே முடிவெடுப்பேன். எனக்கு மன நிறைவு தராத படங்களில் எப்போதும் நான் நடிப்பதே கிடையாது.
'ஃபேமிலிமேன் 2 இல் நடித்ததன் மூலம் தன்னை ஒரு நடிகையாக நிரூபிக்க முடிந்தது'' என்று தெரிவித்திருக்கிறார் சமந்தா.