ஹீரோயின் ஸ்பெஷல்!
ஜோதிகா நடிப்பில், 'டப்பா கார்டெல்' என்ற ஹிந்தி வெப் சீரிஸ் அண்மையில் வெளியாகியிருந்தது. ஜோதிகாவுடன், ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
சூர்யாவின் திரைப்படங்களைக் கடுமையாக விமர்சிப்பதா? - ஜோதிகா
ஜோதிகா நடிப்பில், 'டப்பா கார்டெல்' என்ற ஹிந்தி வெப் சீரிஸ் அண்மையில் வெளியாகியிருந்தது. ஜோதிகாவுடன், ஷாலினி பாண்டே, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த சீரிஸின் ரிலீஸ் சமயத்தில் ஜோதிகா நேர்காணல்களில் பேசியிருந்த பல விஷயங்கள் இணையத்தில் வைரலானது.
தற்போது சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள் தொடர்பாக, ஜோதிகா பேட்டி ஒன்றில் பேசிய விஷயமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisement
அந்த நேர்காணலில் ஜோதிகா, 'எனக்கு மோசமான திரைப்படங்களில்தான் பிரச்னை. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றியைப் பெற்ற பல மோசமான கமர்ஷியல் திரைப்படங்களுக்கு நான் பார்த்திருக்கிறேன். அந்தத் திரைப்படங்களுக்கு எல்லாம் பெரிய மனதுடன் விமர்சனம் செய்யப்பட்டிருக்கின்றன.
ஆனால், என்னுடைய கணவர் சூர்யாவின் திரைப்படங்களைப் பொருத்தவரை அது கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதாக நான் உணர்கிறேன். படத்தில் சில பகுதிகள் நன்றாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்தமாக படத்துக்குப் பெரும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்கின்றனர். ஆனால், சில மோசமானப் படங்களைவிட கடுமையான விமர்சனங்களைச் சந்தித்ததைப் பார்த்தபோது அது என்னை பாதித்தது. ஊடகங்கள் இதை அறிந்துக் கொள்ளாததற்காக நான் மிகவும் வருத்தமடைந்தேன்' எனக் கூறியிருக்கிறார்.
சமந்தாவை புகழும் இயக்குநர்!
2023 டிசம்பரில் 'த்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சமந்தா. தற்போது 'ஓ பேபி' படத்தை இயக்கிய இயக்குநர் நந்தினி தேவியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் சமந்தா.
பெங்களூரு சர்வதேச திரைப்பட திருவிழாவில் 'சினிமாவில் பெண்கள்' என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில், நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இடையே உள்ள சம்பள வித்தியாசம் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய இயக்குநர் நந்தினி தேவி, 'நான் என்னுடைய அடுத்த படத்தில் சமந்தாவுடன் கைக்கோர்க்கிறேன்.
த்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் முதல் தயாரிப்பான 'பங்காரம்' படத்தில் ஆண், பெண் என்று பாராமல் அனைவருக்கும் சமமான சம்பளம் வழங்கப்பட்டது என்று சமந்தா என்னிடம் கூறினார். இந்தியாவிலேயே ஆண், பெண் வித்தியாசம் இல்லாத சமமான சம்பளம் வழங்கிய ஒரே தயாரிப்பாளர் சமந்தா.
தங்களது படத்துக்கு நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்க ஆண்களைவிட பெண்கள் இரண்டு மடங்கு தங்களை நிரூபிக்க வேண்டும். ஆண் இயக்குநர் ஒருவர் நான்கு ஆண்டுகளில் சாதிப்பதை ஒரு பெண் இயக்குநர் சாதிக்க எட்டு ஆண்டுகள் பிடிக்கும். இதில் சம்பள வித்தியாசமும் அடங்கும்' என்று பேசியுள்ளார்.
தனுஷுடன் இணைந்து நடிப்பது அற்புதம் - கீர்த்தி சனூன்
தனுஷ் நடிப்பில் உருவாகும் 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பு தில்லியில் நடைபெறுகிறது. 'ராஞ்சனா', படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பாலிவுட் திரைப்படம் 'தேரே இஷ்க் மெயின்'. பாலிவுட் நடிகை கீர்த்தி சனூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜெய்பூரில் நடைபெற்ற 2025-ஆம் ஆண்டுக்கான 'ஐபா டிஜிட்டல்' விருது விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சனூன் பேசுகையில், 'ஆனந்த் எல். ராய், தனுஷுடன் தற்போது 'தேரே இஷ்க் மெயின்' படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறேன். தில்லியில் நடக்கும் படப்பிடிப்பிற்கு நான் மீண்டும் வருவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அது ஓர் அழகான திரைப்படம். அதில், என்னுடைய கதாபாத்திரம் இதற்கு முன் நான் நடித்திராத ஒன்று. எனக்கு காதல் மிகவும் பிடித்தமானது.
இத்திரைப்படமும் காதல் கதை. கதையை வித்தியாசமாகத் தயார் செய்திருக்கிறார்கள். தனுஷ் சாருடன் முதல் முறையாக இணைந்து நடிப்பது அற்புதமான ஒன்று. அதுபோல திரைப்படமும் அற்புதமாக இருக்கும். நான் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்' எனக் கூறியிருக்கிறார்.