திரைக் கதிர்
லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு 'பாரத் சேவா' என்ற அமைப்பைத் தொடங்கினார்.
லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு 'பாரத் சேவா' என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் 'மக்கள் மேடை' என்ற திட்டத்தையும் அவர் தொடங்கினார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் ''இந்தச் சேவையை அரசியலுக்குப் பயன்படுத்துவீர்களா?'' என்று லதா ரஜினிகாந்த்திடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், ''அரசியலையே எல்லாரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நம் ஊரில் ஜனநாயகம் என்பது ஒரு பக்கம் ராஜ்ஜியம்; இன்னொரு பக்கம் மக்கள். மக்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால் நாடு சுபிட்சம் அடையும். நாங்கள் மக்கள் பக்கம் நிற்கிறோம்!'' என்றிருக்கிறார்.
இயக்குநராக 'டேக் ஆஃப்' ஆகிவிட்டார் ரவி மோகன். யோகிபாபுவை வைத்து அவர் இயக்கும் 'அன் ஆர்னடரி மேன்' படத்தின் அறிவிப்பும், முன்னோட்ட விடியோவும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது.
ரவி மோகன் - யோகிபாபுவின் நட்பு 'கோமாளி' படத்தின் போதே நெருக்கமானது. 'கோமாளி' படத்தின் ஷூட்டிங்கில் தான் ரவி மோகனுக்கு யோகிபாபுவை இயக்கும் ஐடியாவும், கதையும் உருவாகியிருக்கிறது. அதன் படப்பிடிப்பின் போதே கதை லைனையும் சொல்லி விட்டார்.
கதையைக் கேட்டு நெகிழ்ந்த யோகிபாபு, ''ஷூட்டிங் எப்போன்னு சொல்லுங்க... உடனே கால்ஷீட் தர்றேன், சார்!' என நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார். அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.
சூர்யா, த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருக்கும் 'கருப்பு' படத்தின் ரிலீஸூக்காகத்தான் சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆர்.ஜே.பாலாஜி எங்குச் சென்றாலும், அவரை 'கருப்பு' படத்தின் அப்டேட் தொடர்பான கேள்வியும் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'கருப்பு' படத்தின் முதற்கட்டப் பணி, படப்பிடிப்பு, இறுதிக்கட்டப் பணி என இயக்குநர் ஆர்.ஜே.பி. பிஸியாக இருந்ததனால், சமீப வாரங்களில் கிரிக்கெட் வர்ணனையில் பெரிய அளவில் பங்கேற்கவில்லை. பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் கமென்ட்ரி பக்கம் வந்திருந்தார். இப்போது இறுதிப் போட்டியின் வர்ணனைப் பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார். இப்போது 'கருப்பு' திரைப்படம் தொடர்பாகப் பேசி, ஒரு காணொலியையும் வெளியிட்டிருக்கிறார்.
நடிகை ஹன்சிகா மோத்வானி, சோஹேல் கதுரியா என்ற தொழிலதிபரை 2022 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஹன்சிகா-சோஹேல் திருமண வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியிருந்தார். இந்நிலையில் மும்பை பந்தாரா குடும்பநல நீதிமன்றம் இந்த தம்பதிக்கு பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்தை வழங்கியிருக்கிறது.