ஜெயலலிதாவுக்குப் பின்.. அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களால் உதயமான கட்சிகள்!
ஜெயலலிதாவுக்குப் பின் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களால் உதயமான கட்சிகளின் பட்டியல்
அதிமுக முன்னாள் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகவிலிருந்து வெளியேறி புதிய கட்சித் தொடங்கியவர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி வருகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே. சசிகலா, அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று, தன்னுடைய கட்சிக்கு இன்று பெயர் சூட்டி அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை அதிமுகவில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சித் தொடங்கியவர்களில், இப்போதுவரை கட்சியாகத் தொடர்வது அமமுக மட்டுமே என்று கூறப்படுகிறது.
இன்று, சசிகலா தன்னுடைய புதிய கட்சிக்கு பெயர் அறிவித்திருக்கும் நிலையில், இதுவரை அதிமுகவிலிருந்து பிரிந்துச் சென்றவர்கள் உருவாக்கிய அரசியல் கட்சிகள் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பது என்று கூறலாம்.
அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் கட்சித் தொண்டர்களாக நீடிக்காமல், கட்சியில் உள்ள அவர்களது ஆதரவாளர்களால் தூண்டப்பட்டு, புதிய கட்சியைத் தொடங்கி, அதற்குத் தலைவர்களாக ஆகிவிடுகிறார்கள். இந்த டிரெண்ட் பல காலணமாக நீடிக்கிறது.
அமமுக: சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கினார். அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலால், கட்சியிலிருந்து வெளியேறி, புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சியின் பொதுச் செயலராக தினகரன் செயல்படுகிறார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். வரும் 2026 தேர்தலை, அதிமுக அங்கம் வகிக்கும் பாஜக தலைமையிலான கூட்டணியில் பங்கேற்றுள்ளார்.
தீபாவின் கட்சி: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் - அம்மா - தீபா பேரவை என்று 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசியல் அமைப்பு. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, சில ஆதரவாளர்கள், தீபா வீட்டு வாயில் முன்பு நின்றுகொண்டு அவருக்கு கொடுத்த ஆதரவின் விளைவாக 2017, பிப். 24ஆம் தேதி இந்தப் பேரவையை அறிவித்தார். பிறகு இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார். அரசியல் வாழ்க்கையோடு, வாழ்க்கைப் பிரச்னையும் இணைய கடந்த 2019ஆம் ஆண்டு பேரவையைக் கலைத்துவிட்டு அரசியல் வாழ்வை முடித்துக் கொண்டு, அதிமுகவில் இணைவதாக அறிவித்திருந்தார்.
தீபா கணவர் மாதவன் கட்சி: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், மனைவிக்குப் போட்டியாக எம்ஜிஆர் - ஜெஜெ திராவிட முன்னேற்றக் கழகம் என்ற (எம்ஜேடிஎம்கே) என்ற கட்சியைத் தொடங்கினார். மனைவி பிப்ரவரியில் தொடங்கிய பேரவையில் கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் வந்த கருத்து வேறுபாடு காரணமாக, 2017 ஏப்ரல் மாதம் மாதவன் புதிய கட்சியை அறிவித்திருந்தார்.