முகப்பு
தினமணி கதிர்

குட்டிக் குட்டிக் கதைகள்...

வழக்குரைஞர் தொழிலுக்கு அவர் புதுசு. எதிரே வந்தவருக்குத் தம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் வரவேண்டும் என்பதற்காக, பொய்யாக அவர் போனில் பேசுகிறார்.

Updated On : 15 மார்ச், 2026 at 10:16 AM
பகிர்:

புதுசு...

வழக்குரைஞர் தொழிலுக்கு அவர் புதுசு. எதிரே வந்தவருக்குத் தம்மைப் பற்றி நல்ல அபிப்ராயம் வரவேண்டும் என்பதற்காக, பொய்யாக அவர் போனில் பேசுகிறார்.

'ஹலோ... வெரி சாரி... எனக்கு நிறைய கேஸ் இருக்கு... உங்க கேஸை கவனிக்கறதுக்கு குறைஞ்சது ஒரு மாசம் ஆகும்..!'

போனை வைத்துவிட்டு, எதிரில் இருந்தவரிடம் பார்த்து, 'ம்... சொல்லுங்க... உங்களுக்கு நான் என்ன செய்யணும்?'

'நான் உங்க போனை ரிப்பேர் பார்க்க வந்தவன் சார்.'

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

இது எப்படி?

நீண்ட நாள் சிறையில் இருக்கும் தனது கணவருக்கு மனைவி கடிதம் எழுதினாள்.

அதில், 'வருமானமின்றித் தவிக்கிறோம். வீட்டில் பின்புறமுள்ள நிலத்தைப் பயன்படுத்தி தோட்டம் அமைத்துப் பயிரிடலாம் என எண்ணுகிறேன். நிலத்தைச் சரிபார்ப்பது எப்படி என்று தெரியவில்லை' என்றாள்.

இதற்கு கணவர், 'குடும்பச் செலவுக்கு வேறு ஏதாவது வழியைச் செய்துகொள். நிலத்தைக் கை வைக்காதே! அங்கு நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்துவைத்துள்ளேன்' என்று பதில் கடிதம் எழுதினார்.

ஒரு வாரத்துக்குப் பின்னர் மனைவியிடம் வந்த கடிதத்தில், 'யாரோ ஒரு கூட்டத்தினர் நம் நிலத்தைத் தோண்டி பாறைகளை அகற்றி ஏதோ தேடினர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. நிலம் சீராகிவிட்டது' என்று கூறினார்.

கைதியான கணவரோ சிறைத்துறையினர் மூலம் காவல்துறையினருக்குத் தகவல்போய், நிலத்தைத் தோண்டி சரிபார்த்து சீரமைத்துவிட்டார்களே என்று மனதுக்குள் நினைத்து மகிழ்ச்சியுற்றார்.

-ஜே.மகரூப், குலசேகரப்பட்டினம்.

ஏமாற்றம்

சதாசிவம் தனது மகனுக்குத் திருமணம் செய்துவைக்க நினைத்தார். அப்போது, பக்கத்து ஊரில் தேவராஜன் தனது மகளுக்குத் திருமணம் செய்துவிக்க மாப்பிள்ளை தேடுவதை அறிந்தார். உறவினர் சிலருடன் தேவராஜனின் வீட்டுக்குச் சென்றார் சதாசிவம்.

அங்கு, 'பத்து லட்சம் ரூபாய் வரதட்சிணை அளிக்க வேண்டும்' என்று சதாசிவம் கேட்டார்.

இதைக் கேட்ட தேவராஜன், 'என் மகள் அரசுப் பணியில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதை எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் அளிப்பதோடு, உறுதிமொழிப் பத்திரமும் கொடுக்க வேண்டும். சரியென்றால், வரதட்சிணையைக் கொடுக்கத் தயக்கமில்லை' என்றார்.

'திருமணமாகிவிட்டால் பெண் வாங்கும் சம்பளம் கணவனுக்கே... உங்களுக்கு எப்படி?' என்று சதாசிவம் கேட்டார்.

இதற்கு தேவராஜன், 'நீங்கள் எங்கள் பெண்ணைத் திருமணம் செய்ய வந்தீர்களா? பணத்தாசைப் பிடித்து வந்தீர்களா? உங்கள் மகனுக்கு என் பெண்ணை தரமுடியாது' என்று ஆவேசமாகக் கூறிவிட்டார்.

வரதட்சிணையால் ஒரு லட்சம் மாதம் ஊதியம் பெறும் பெண்ணை மருமகளாக அடைய முடியாமல் போனதே என்று நினைத்து சதாசிவம் வேதனையுடன் கிளம்பினார்.

-க.வை.ராமகிருஷ்ணன், நாமக்கல்.

முழு கட்டுரையைப் படிக்க →