அருணோதயம் பதிப்பக உரிமையாளர் அருணன் பதிப்புத் துறையில் பழுத்த அனுபவம் கொண்டவர். ரமணி சந்திரனின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர். ஒருமுறை அவர் மனம் விட்டுப் பேசியபோது...
"தேவக்கோட்டையில் 1924-இல் நான் பிறந்தேன். விடுதலைப் போராட்டங்களில் வீர முழக்கமிட்டுவந்த சின்ன அண்ணாமலை எனது பக்கத்து வீட்டுக்காரராக இருந்ததால், என் பள்ளிப் பருவத்திலேயே விடுதலைத் தீ அவரிடமிருந்து என்னையும் பற்றிக் கொண்டது. அவரது தலைமையில் அணி வகுத்துச் சென்ற மாணவர்களின் தலைவர்களில் நானும் ஒருவன். 1943-இல் சின்ன அண்ணாமலையின் "தமிழ்ப் பண்ணை'யில் நூலகராக வேலையில் சேர்ந்தேன்.
"புத்தகாலயம்' என்ற பதிப்பகம் தொடங்கினேன். முல்லை முத்தையாவிடம் சேர்ந்தேன். பல பத்திரிகைகளில் கதை எழுதினேன். ரூ.750 முதலீட்டில் நண்பர்கள் உதவியோடு "தென்றல்' தொடங்கினேன். இதன் முதல் இதழில் "பீலிவளை' என்ற கதையை கண்ணதாசன் எழுதினார். பின்னர், பல பத்திரிகைகளில் ஆசிரியப் பணி.
கண்ணதாசனின் எழுத்துக்களை வெளியிடவேண்டும் என்பதற்காகவே, என் மனைவியின் பங்குப் பத்திரங்களை அடமானம் வைத்து ரூ.500 முதலீட்டில் "அருணோதயம்' பதிப்பகம் தொடங்கினேன்.
ஒருமுறை, எனக்கிருந்த பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க கவிஞரின் "ராஜ தண்டனை' என்ற நாடக நூலைக் கொடுத்து வெளிடச் செய்தார். கவிஞருக்கு ஒரு வெள்ளித்தட்டும், 4பவுன் தங்கமும் ராயல்டியாகக் கொடுத்தேன். எங்களுக்கிடையில் நெருக்கமான நட்பு எப்போதும் இருந்துவந்தது'' என்றார்.
பதிப்பகத்துறையில் 70 ஆண்டுகளைக் கடந்த அருணனுக்கு கடந்த வாரம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
தகவல்: ராம்குமார்