ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் "2.0' படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவுற்ற நிலையில், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முப்பரிமாண தொழில்நுட்பத்தில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால், கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக வேலை நடந்து வருவதாக சொல்லப்பட்டது. கடந்த ஜனவரி மாதத்திலேயே இந்தப் படம் வெளியாக இருந்தது. பின் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் எனச் சொல்லப்பட்டது. அமெரிக்காவின் முன்னணி கிராபிக்ஸ் நிறுவனத்துக்கு படத்தின் பிரதான காட்சிகள் கொடுக்கப்பட்டு வேலைகள் தொடங்கிய நிலையில், அவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடித்துக் கொடுக்கவில்லை என்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்நிலையில் வரும் நவம்பர் 29-ஆம் படம் தேதி திரைக்கு வர உள்ளது. இத்தகவலை இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு தான் திரைக்கு வரும் என தகவல் பரவியது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் தன்னுடைய சுட்டுரைப் பதிவில் "கிராபிக்ஸ் நிறுவனத்தார் தங்கள் பணி எப்போது முடிவடையும் என்பதை தெரிவித்துவிட்டனர். ஆகவே இந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி "2.0' திரைக்கு வருகிறது' என குறிப்பிட்டுள்ளார்.