"ஐம்பதிலும் ஆசை வரும்' என்பது பழமொழி. "ஐம்பதுக்கும் மேல் தங்கப் பதக்கமும் வரும்' என்பது புது மொழி'' என்கிறார்கள் ஆசிய போட்டியில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிட்ஜ் எனப்படும் சீட்டாட்டத்தில், இந்திய அணியினருக்கான தங்கப் பதக்கத்தைப் பெற்றிருக்கும் பிரணாப் பரதன் மற்றும் சிவநாத் டே சர்க்கார்.
இது மூத்தவர்களுக்காக நடந்த போட்டியில்லை. எல்லா வயதினருக்கும் நடந்த போட்டி. தங்கப் பதக்கம் பெற்ற பிரணாப்பிற்கு வயது அறுபது. சர்க்காருக்கு ஐம்பத்தாறு. ஆசிய போட்டியில் ஒரு தங்கப் பதக்கமும், இரண்டு வெண்கலப் பதக்கமும் பெற்றுத் தந்திருக்கும் இந்திய பிரிட்ஜ் அணியினர் போட்டியில் கலந்து கொள்வது கடைசிவரை இழுபறியாக இருந்ததாம்.
"இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் இந்திய பிரிட்ஜ் அணியினர் ஜாகர்த்தா போக ஆரம்பத்தில் இசைவு தரவில்லை. புறப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்தான் அந்த இசைவு கிடைத்தது. அதுவும் தொழில் அதிபர் சிவ நாடார் தலையிட்ட பிறகுதான் இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் தந்து அசைவினைத் தந்தது'' என்கிறார் பிரணாப்.
ஆசிய போட்டியில் இந்தியாவின் சார்பாக மூன்று இரட்டையர் அணிகள் களத்தில் இறங்கின. 384 புள்ளிகள் பெற்று, பிரணாப் - சிவநாத் சர்க்கார் அணி தங்கப் பதக்கம் பெற்றது. பிரணாப் கட்டிடங்கள் நிர்மாணிப்பவர். ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிபவர் சிவநாத் சர்க்கார். ஆசிய போட்டியில் தங்கப் பதக்கம் பெறுபவர்களின் வயதில் மூத்தவர் பிரணாப் மட்டுமே.
"டோக்கியோவில் 2020-இல் நடக்கவிருக்கும் WORLD MIND SPORTS போட்டிகளில் இந்திய பிரிட்ஜ் அணி பங்கு பெற தேவையான நடவடிக்கைகளையும் இப்போதே எடுக்க வேண்டும். பயிற்சிகளும் தரப்பட வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் சிவநாத் சர்க்கார்.
- சுதந்திரன்