தமிழ் சினிமாவின் இரட்டை இசையமைப்பாளர்கள் வரிசையில் இந்தத் தலைமுறையில் தனிக் கவனம் பெறுகிறார்கள் விவேக் மெர்வின். "சங்கத்தமிழன்', "பட்டாஸ்' என தொடர்ந்து சினிமாக்களில் இயங்கி வரும் இவர்கள் அவ்வப்போது தனி ஆல்பங்களையும் வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியிட்ட "ஒரசாதே' ஆல்பத்தை இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் பார்த்த நிலையில், அடுத்து "காண்டு கண்ணம்மா' எனும் தனிப்பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் பேசும் போது... ""பள்ளி காலத்தில் இருந்தே இருவரும் ஒன்றாகப் பயணித்து வருகிறோம். தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குநர்களாகப் பயணிப்பது பெரும் சவால். எங்களுக்கு முன் பெரும் ஜாம்பவான்கள் இருந்த இடம் இது. அதை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. ஆனால், அதற்காக முயற்சிப்போம். ஹாலிவுட்டில் வருவது போன்று இங்கே தனி ஆல்பங்கள் இல்லை. அதற்கான களங்களை நாங்கள் உருவாக்குகிறோம். ஒரசாதே ஆல்பத்தைத் தொடர்ந்து இப்போது காண்டு கண்ணம்மா. காதலியின் கோபங்களை அவளுக்கே சாதகமாக்கி காதலன் பாடுவது போன்ற பாடல். வரவேற்பை பெரும் என நம்புகிறோம். பாங்காங்கில் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. ஒரசாதே ஆல்பத்துக்கு எழுதிய கு. கார்த்தி இந்தப் பாடலையும் எழுதியுள்ளார்'' என்றனர்.