வாழ்வில் வறுமை, காதலில் தோல்வி, வேண்டுதல் நிறைவேறாமை இது போன்ற காரணங்களில் ஏதாவது ஒன்றின் பாதிப்பினால் தாடி வளர்ப்பார்கள்.
தாடி வளர்ப்பதன் நோக்கம் குறித்து பலரும் சொல்லிவிடுவார்கள். ஒரு சிலர் சொல்லமாட்டார்கள். சொல்லாதவரிடம் கேட்டுக்கூட தெரிந்து கொள்ளலாம். சிலரிடம் கேட்கவே பயமாகயிருக்கும். அவர்களில் ஒருவர் தான் அறிஞர் பெர்னாட்ஷா.
"நாடகத்திற்கும் தாடிக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கா?' என்று பெர்னாட்ஷாவிடம் ஓர் நிருபர் கேட்டார்.
"சம்பந்தமிருக்கு' என்றார் ஷா.
"சொல்லுங்களேன்'.
"ஒரு நாடகத்தை பல முறை யோசித்து ஒரு முறை எழுதுவேன். அவ்விதம் பலமுறை யோசிக்கும் போது தாடியைப் பற்றிய நினைவு வராது.'
"நினைவு வராதது தான் காரணமா?'
"அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்'. கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்.
"நிருபர் தம்பி! நான் தினமும் அல்லது வாரம் இருமுறையோ முகச்சவரம் செய்து கொள்ள உட்கார்ந்தால் எவ்வளவு நேரம் செலவாகும் தெரியுமா?'
"அது உங்களுக்குத்தான் தெரியும்.'
"தினம் கால் மணி நேரம் வீதம் - வாரத்திற்கு ஒண்ணே முக்கால் மணி நேரமாகிறது. அந்த நேரத்தில் ஒரு நாடகத்தை நிச்சயமாக என்னால் எழுதி முடிக்க முடியும். நான் முகச்சவரத்திற்கென செலவழிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதன் மூலம் நாடகம் எழுதுவது எனக்கொரு லாபம் தான்.'
"மிஸ்டர் ஷா! நீங்கள் கூறிய விஷயங்களிலிருந்து மூன்று காரணங்கள் எனக்கு தெரிய வருகிறது. முதலாவது காலத்தை பொன்னாக மதிக்கிறீர். இரண்டாவது சோம்பலில்லாமல் உழைக்கிறீர். மூன்றாவது பணச் செலவு இல்லை அப்படித்தானே'
" ஆமாம்' .
"நன்றி ஷா. நான் வருகிறேன்' என்று நிருபர் ஷாவிடம் விடைபெற்றுக் கிளம்பினார்.