முகப்பு
இளைஞர்மணி

பின்புலங்களோடு செய்திகளைத் தொகுக்க வேண்டும்! நாளை நான் ஐஏஎஸ்!

குடிமைப்பணித் தேர்வுகளில் ஒரு நடப்பு நிகழ்வினை மையப்படுத்தி எவ்வாறு வினாக்கள் கேட்கப்படுகின்றன. அந்நிகழ்வுடன் தொடர்புடைய மரபு சார்ந்த (CONVENTIONAL) பின்னணியில் எவ்வாறு வினாக்களுக்கான வாய்ப்புகள் உள்ளன?

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:45 AM
பகிர்:

குடிமைப்பணித் தேர்வுகளில் ஒரு நடப்பு நிகழ்வினை மையப்படுத்தி எவ்வாறு வினாக்கள் கேட்கப்படுகின்றன. அந்நிகழ்வுடன் தொடர்புடைய மரபு சார்ந்த (CONVENTIONAL) பின்னணியில் எவ்வாறு வினாக்களுக்கான வாய்ப்புகள் உள்ளன? முதல்நிலைத் தேர்வுகளில் வினாக்கள் எவ்வாறு அமையும்? முதன்மைத் தேர்வுகளில் வினாக்கள் எவ்வாறு அமையும் என்பதை இத்தொடர் கட்டுரையில் நாம் பார்த்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர வேண்டும் என்ற இலட்சியத்துடன் உள்ள மாணவர்கள் இத்தொடரை விருப்பத்துடன் படித்து வருகின்றீர்கள்.

குடிமைப்பணித் தேர்வுகளைப் பொறுத்தவரை அதனை எழுதி வெற்றி பெற விரும்பும் மாணவர்கள் முயற்சியையும், உழைப்பையும் தமதாக்கிக் கொள்ள வேண்டும்.

தம் தாய்மொழி அறிவோடு ஆங்கில மொழியறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்று நம்பிக்கை வார்த்தைகள் ஒரு போதும் வெற்றியைத் தருவதில்லை.

மேலோட்டமாக ஒரு செய்தியை அல்லது தகவலைத் தெரிந்து கொள்வதைத் தவிர்த்தல் வேண்டும். எனவே, செய்திகளை அதற்கான பின்புலங்களோடு தொகுத்திட வேண்டும். எடுத்துக்காட்டாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் (MGNREGS) முறைகேடு என்ற நடப்புச் செய்தியைப் படிக்கின்றீர்கள். இச்செய்தி வினாவாக வருவதில்லை. ஆனால், மேற்கண்ட திட்டம் எப்போது உருவாக்கப்பட்டது? ஏன் உருவாக்கப்பட்டது? அதற்கான நோக்கம் (OBJECTIVE) என்ன? பயனாளிகள் யார்? என்பன போன்ற பின்புலங்களே நீங்கள் அறிய வேண்டியவை.

சமீபத்தில் பிருத்வி-2 ரக ஏவுகணை ஒடிஸô மாநிலத்தின் பலாசோர், சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இச்சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது என்ற செய்தியை நீங்கள் பார்க்கிறீர்கள். இது அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பான நடப்பு நிகழ்வு.

இதன் பின்புலத்தில் கீழ்க்கண்ட வினாக்களை நீங்கள் உருவாக்கி தகவல்களைத் தொகுக்க வேண்டும்.

இந்த ஏவுகணைக்கான தொலைவு இலக்கு என்ன? இதில் பயன்படும் தொழில்நுட்பம் யாது? இது எவ்வகை ஏவுகணை? அதாவது நிலத்திலிருந்து நிலமா? (SURFACE TO SURFACE) நிலத்திலிருந்து ஆகாயமா? (SURFACE TO AIR) ஆகாயத்திலிருந்து ஆகாயமா? (AIR TO AIR) இதில் பயன்படும் எரிபொருள் என்ன? இந்த ஏவுகணை எத்தனை கிலோ வரையிலான ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும்? இதனை உருவாக்கி மேலாண்மை செய்யும் அமைப்பு எது?

இவ்வாறெல்லாம் வினாக்களை உருவாக்கி அதன் பதில்களைத் தொகுக்கும் போது அதில் துணை வினாக்களும் உருவாகிவிடும்.

உதாரணமாக பிருத்வி ஏவுகணையை உருவாக்கி, மேலாண்மை செய்யும் அமைப்பு இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (DEFENCE RESEARCH AND DEVELOPMENT ORGANIZATION - DRDO) ஆகும். எனவே, இந்த அமைப்பு எப்போது உருவாக்கப்பட்டது? நோக்கங்கள் எவை? பணிகள் எவை? சாதனை என்ன? என்பன போன்ற துணைக்கேள்விகள் உருவாகும். இவற்றிற்கும் பதில்களைத் தொகுக்க வேண்டும்.

மேலும் சில நடப்பு நிகழ்வுகளைக் கவனியுங்கள். பராக்-8 (BARAK-8) என்பது நிலத்திருந்து ஆகாயத்திற்குப் பாயும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணை இந்தியா-இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பாகும். சமீபத்தில் பாலஸ்தீனத்தில் நடந்த பராக்-8 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளது.

ஐ.என்.எஸ்.குர்சுரா (INS KURSURA) இந்தியாவின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பல் ஆகும். 1969 ஆம் ஆண்டு இக்கப்பல் இந்திய கப்பற்

படையில் இணைக்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது.

தற்போது இந்நீர்மூழ்கிக்கப்பல் விசாகப்பட்டிணம் கடற்கரையில் (@RAMAKRISHNA MISSION BEACH) ஆசியாவின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ்.விராட் (INS VIRAAT) எனப்படுவது விமானம் தாங்கி போர்க்கப்பல் (AIRCRAFT CARRIER WARSHIP) ஆகும்.

இந்தியாவிடம் ஐ.என்.எஸ்.விராட், ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா, ஐ.என்.எஸ்.விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ்.விஷால் ஆகிய விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.

இதில் ஐ.என்.எஸ்.விக்ராந்த் 2017ஆம் ஆண்டும், ஐ.என்.எஸ்.விஷால் 2025ஆம் ஆண்டும் கப்பற்படை பயன்பாட்டிற்கு வரும்.

ஐ.என்.எஸ்.விராட் 1987ஆம் ஆண்டு முதல் கப்பற்படையில் பங்காற்றி வருகின்றது. தற்போது இக்கப்பலுக்கு ஓய்வு தரப்பட்டு ஆந்திரப்பிரதேசம் காக்கிநாடா கடற்கரை அருகே 2016ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் அருங்காட்சியகமாக மாற்றப்படுகின்றது.

இவ்வாறாக ஒரு நிகழ்வை பல்வேறு கூறுகளில் ஆர்வத்தோடு நோக்கி வினாக்களை எழுப்பி விடைகளைத் தொகுக்க வேண்டும்.

அவ்வாறு தொகுத்தால் உங்களுக்கு முதல்நிலைத்தேர்வுகளில் கேட்கப்படும் கொள்குறி வினாக்களுக்கும் (OBJECTIVE TYPE QUESTIONS) விடை கிடைக்கும். முதன்மைத் தேர்வுகளில் விரிவாக எழுத கேட்கப்படும் வினாக்களுக்கும் (DESCRIPTIVE TYPE QUESTIONS) விடை கிடைக்கும்.

உங்களுடைய தேடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலுடன் தான் இத்தொடர் செல்கின்றது.

சாதாரணமாக நாளிதழ்களை வாசித்து நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வது எதார்த்தநிலை. ஒரு குடிமைப்பணித் தேர்வராக நாளிதழ்களையும், நிகழ்வுகளையும் நோக்குவது மேம்பட்ட நிலை. இந்நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

உங்களை சிறப்பான அளவில் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தயார் செய்யும் நோக்கத்துடன்தான் தெளிவான விளக்கங்களுடன் எடுத்துக்காட்டுகள் தரப்படுகின்றன. குடிமைப்பணித்தேர்வுகளின் தற்போதைய போக்குகளை (TRENDS) கூர்ந்து நோக்கி தகவல்கள் தரப்படுகின்றன.

எதிர்வரும் மாற்றங்களையும் அனுமானித்து (ASSUMING) செய்திகளும் பின்புலங்களும் கொடுக்கப்படுகின்றன.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.