விவசாயத் தொழில் நலிவடைந்து வரும் சூழ்நிலையில் அதனை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். விவசாய விளை பொருட்களைச் சந்தைப்படுத்துவதும், விவசாயத் தொழிலை மேலாண்மை செய்வதும் மிகவும் முக்கியமானதாகும். இன்றைய தலைமுறை இளைஞர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விவசாய விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவது என்றால் அதில் நமது நாட்டு விவசாய விளைபொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் அடங்கும். அதேபோன்று பிறநாடுகளில் இருந்து நமது நாட்டுக்கு இறக்குமதியாகும் விவசாய விளைபொருட்களும் அடங்கும். உலகமயச்சூழலில் விவசாய விளைபொருட்கள் உலகம் முழுக்க சந்தைப்படுத்தப்படுகின்றன. எனவே இத்துறையில் ஆர்வம் இல்லாதவர்களும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு இத்தொழில் ஈடுபட விரும்பினால், இது குறித்த பயிற்சியைப் பெறலாம். படிப்புகளைப் படிக்கலாம்.
மத்திய அரசின் விவசாயத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சௌத்ரி சரண்சிங் நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங் நிறுவனத்தால் இது தொடர்பான சிறப்புப் பயிற்சிகள், முதுநிலை விவசாய தொழில் மேலாண்மைப் படிப்புகள் என பல்வேறு படிப்புகள் நடத்தப்படுகின்றன.
விவசாயிகள், விவசாயம் சார்ந்த தொழில் நடத்துபவர்கள், விவசாய விளை பொருட்களைச் சந்தைப்படுத்துபவர்கள், விவசாயத் துறை அலுவலர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவசாய சந்தைப்படுத்துதல் சம்பந்தமான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது.
மேலும் விவரங்களுக்கு: CH.CHARAN SINGH NATIONAL INSTITUTE OF AGRICULTURAL
MARKETING
Bambala, Kota Road, Jaipur-302033 (Rajasthan)
e-mail : dgniam@hotmail.com
Website : https://ccsniam.gov.in/
- எம்.அருண்குமார்