முக நூலிலிருந்து....
புதுசா போன் வாங்குனவனையும்...
புதுசா சமைக்கிறவனையும்...
பக்கத்துல வச்சிக்கவே கூடாது.
சும்மா சும்மா இது நல்லாருக்கான்னு
கேட்டே சாவடிக்கான்.
- வால்டர் வெற்றிவேல்
யோசித்து ஒரு செயலைத் தொடங்கும்போது செவிடனாய் மாறிவிடுங்கள்...
ஏனெனில், முதலில் உற்சாகமான சொற்களை விட, கேலி சொற்கள்தான்
அதிகம் இருக்கும்.
- அய்யாதுரை சாம்பசிவம்
முறைக்கிறவன்
என்னைய மாதிரி
உண்மையா இருப்பான்.
சிரிக்கிறவன்
பொய்யா மட்டும் தான் இருப்பான்...
ப்ளீஸ்... புரிஞ்சிக்கோங்க...
- செல்வா வெங்கட்
நீங்க யாரை நம்புறீங்கன்னு கேட்டா...
ஆயிரம் பேரை யோசிச்சு
அதுல ஒரு பேரைச்
சொல்றானுகளே தவிர,
நான் என்னை நம்பறேன்னு
எவனும் சொல்றதில்ல...
முதல்ல
உங்களை நம்புங்க...
அப்புறம் பாருங்க...
- ஆத்தாடி இவனா
குடிக்கிறது நீ... ஆனால் உன் பொண்டாட்டி,
"குடிகார நாயே'ன்னு என்னையும் சேர்த்து திட்டுது.
- சிந்தனை சிற்பி செல்வ.ரமேஷ்
சுட்டுரையிலிருந்து...
ஜன்னலோர இருக்கையில்
யாரையும் அமரவிடாமல்...
எனக்காக இடம் போட்டு
வைத்திருந்தது மழை.
- யாத்திரி
வயலும்
வயல்சார்ந்த இடம்
மருதம் அல்ல...
ப்ளாட்டுகள்.
கடலும்
கடல்சார்ந்த இடம்
நெய்தல் அல்ல...
அமிலக்கழிவுகள்.
- கோமாளி ராஜா
தடுமாறினாலும்
தடம் மாறாமல்
தற்காத்து கொள்ளுவோம்...
வாழ்க்கையை.
- யுவராணி
எல்லாரும் ஒருவிதத்தில்
அன்னப்பறவை தான்...
சிலர் நல்லதை மட்டும்
பிரித்துப் பார்க்கிறார்கள்!
சிலர் கெட்டதை மட்டும்
பிரித்துப் பார்க்கிறார்கள்!
- திவாகரன்
வலைதளத்திலிருந்து...
கொடுக்காபுளியங்காவுக்கு கோணப்புளியங்கா, சீனிப்புளியங்கா, கொருக்கா புளி என ஊருக்கு ஒரு பெயர் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் இன்னும் நிறையபெயர்களால் கொடுக்காபுளி அழைக்கப்படுகிறது. "அண்ணா உங்கூர்ல அப்படியா சொல்வாங்க... எங்கூர்ல சீனிபுளிங்காம்போம்' என்கிற ஆச்சரியத்தை அடிக்கடி சந்திப்பதுண்டு. இந்தியில் இதற்கு பெயர் ஜங்கிள் ஜிலேபியாம்! (பேர் சூப்பரால்ல...)
கிராமத்தில் வளர்ந்தவர்களோ நகரமோ இன்றைக்கு இருபது ப்ளஸ் வயதான யாருமே தங்களுடைய பள்ளிப்பருவத்தில் ஒருமுறையாவது கொடுக்காப்புளியை ருசிக்காமல் கடந்திருக்க முடியாது. என்னுடைய பள்ளிக்காலங்கள் முழுக்க இலவசமாக கிடைத்த ஒரே தின்பண்டம் இதுதான். ஊருக்குள் எங்கு பார்த்தாலும் கொடுக்காப்புளி மரங்கள் நிறைந்திருக்கும். ஒரு நாளும் அதை காசுகொடுத்து வாங்கித் தின்றதில்லை.
கொடுக்காப்புளியை காய்களாக இருக்கும்போதே பார்த்து வைத்து அது பழுக்கும் வரை காத்திருந்து பறித்து தின்றால், நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் அவகாசம் இருக்காது. ஏரியாவில் கொடுக்காப்புளி பறிக்கவே நிறைய புளியங்கா கேங்ஸ் இருக்கும். அதில் ஒன்று நமக்கு முன்பே போய் காயாக இருந்தாலும் பறித்துவிடும். அதனால் கண்களில் சிக்கியதை பிஞ்சோ, காயோ, பழமோ அப்போதே பறித்து அப்போதே தின்றுவிடுவது நல்லது என்பது எங்கள் கேங்ஸின் எழுதப்படாத விதி.
சிகப்பும் பச்சையுமாக சிலது அதிகமாக பழுத்தும் சிலது பச்சைபசேலென காயாகவும் இருக்கும். இதைப் பறிக்கவே ஒவ்வொருவர் வீட்டிலும் ஒரு நீண்ட கழியும் அதன் உச்சியில் ஒரு கொடுக்குமாக வைத்திருப்பார்கள். அதனால்தான் கொடுக்கா புளி என்று பெயர் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு பயனும் தராத தானாக வளரக் கூடிய இவ்வகை மரங்களை யாரும் வெட்டுவதில்லை.
http://www.athishaonline.com