காவல்பணி செய்யும் ட்ரோன்கள்!
மனிதர்களின் அன்றாடப் பணிகளைக் குறைக்க விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. இதன் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக ஆளில்லா குட்டி விமானங்கள் எனப்படும் ட்ரோன்கள்
மனிதர்களின் அன்றாடப் பணிகளைக் குறைக்க விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் ரோபோக்கள் உருவாக்கப்பட்டன. இதன் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியாக ஆளில்லா குட்டி விமானங்கள் எனப்படும் ட்ரோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
முதலில் விளையாட்டுப் பொருளாக வலம்வந்த இந்த ட்ரோன்கள் தற்போது பறந்து பறந்து மனிதர்களுக்குப் பணியாற்றத் தொடங்கிவிட்டன.
ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள், பின்னர் திரைப்படங்களில் "ஏரியல் வீவ்' காட்சிகள் முதல் பறந்து பின்தொடரும் காட்சிகள் வரை எடுக்க பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது இந்த ட்ரோன்கள் வீட்டின் பாதுகாவலராகவும் பணியாற்றத் தொடங்கிவிட்டன. சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டார்ட் ஆப் நிறுவனமான சன்பிளவர், வீட்டிற்கு வெளியே இந்த ட்ரோனை மறைந்திருக்கும் பாதுகாவலர்களாக உருவாக்கியுள்ளது.
வீட்டின் கேட்டைத் திறந்து யாராவது உள்ளே நுழைந்துவிட்டால், அவரின் அசைவு, சப்தத்தைக் கேட்டவுடன் இந்த ட்ரோன் விழித்துக் கொள்ளும். வீட்டின் வளாகத்தில் நுழைந்தது மனிதரா அல்லது விலங்கா என்பதை சென்சார்கள் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்து, வீட்டின் முதலாளியின் செல்லிடப்பேசி ஆப்பிற்கு எச்சரிக்கையை அனுப்பும். பின்னர் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்த நபரைத் துரத்திச் சென்று 20 அடி உயரத்தில் வட்டமிட்டு அவரது அசைவுகளை நேரடியாக படம்பிடித்து முதலாளிக்கு காண்பிக்கும்.
வீட்டில் நுழைந்தவர் நண்பரா, பகைவரா என்பதை வெளியே இருந்தபடியே வீட்டின் முதலாளி தெரிந்து கொள்ளலாம். வீட்டிற்கு இந்த ட்ரோன் பாதுகாப்புக்கு அளிக்க அந்த நிறுவனம் மாதம் சுமார் ரூ. 21 ஆயிரத்தை ஊதியமாக நிர்ணயம் செய்துள்ளது. வீட்டின் பாதுகாப்புக்காக நாய் வளர்த்த காலம்போய், மறைந்திருக்கும் பாதுகாவலாளியான ட்ரோனை நியமிக்கும் காலத்துக்கு நாம் வந்துள்ளோம். வீட்டிற்குள் நுழைய முதலாளியின் அனுமதியைப் பெறுவதற்கு முன் ட்ரோன்களின் அனுமதியைப் பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.