முகப்பு
இளைஞர்மணி

மூளை... நரம்பு... கரோனா!

​கடந்த ஆறு மாதங்களாக உலகத்தையே  உலுக்கிக் கொண்டிருக்கிறது கரோனா.

Updated On : 14 ஜூலை, 2020 at 6:00 AM
பகிர்:


கடந்த ஆறு மாதங்களாக உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது கரோனா. அது மனித வாழ்க்கையில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை அளவிட முடியாது. ஏற்கெனவே இருந்த வாழ்கையைத் தொலைத்துவிட்ட மனிதர்கள்... அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணியும் உலகம் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையை ஆராய்ந்து பல ஆராய்ச்சிகளும் செய்யப்படுகின்றன. அந்த ஆராய்ச்சிகள் கரோனாவைப் புரிந்து கொள்வதற்கும், அதை எதிர்கொள்வதற்கும் உதவுபவையாக இருக்கின்றன.

Advertisement

இன்னொருபுறத்தில் இந்த ஆராய்ச்சி முடிவுகள் அதிர்ச்சியூட்டு பவையாகவும் இருக்கின்றன.

அண்மையில் கரோனா தொற்றினால் மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளைப் பற்றிய தகவல்கள், கரோனா ஒழிந்தாலும் அதன் பாதிப்புகள் ஒழிய நீண்ட நாட்கள் ஆகுமே என்ற கவலையை ஏற்படுத்தி இருக்கின்றன.

லண்டனில் உள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழகமான "யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டன்' -இன் ஆராய்ச்சியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூளை தற்காலிகமாக செயல்படாமல் போனவர்கள், பக்கவாதம் வந்தவர்கள், நரம்புகளில் சேதம் ஏற்பட்டவர்கள் என 43 நோயாளிகளை ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்ந்து பார்த்தபோது, பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதையும், அவர்களுக்கு குறைந்த அளவில் நுரையீரலில் பாதிப்பு இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். என்றாலும் நுரையீரல் பாதிப்பு உள்ள அனைவருக்கும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கரோனா தொற்றால் மூளையிலும் நரம்பு மண்டலத்திலும் நான்குவிதமான பாதிப்புகள் ஏற்படக் கூடும் என்கிறார்கள்.

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு குழப்பமான மனநிலைஏற்படும். மயக்கம் வரும். சிலருக்கு மனநோய் ஏற்படும். மூளையில் அழற்சி ஏற்படும். புண்கள் ஏற்படும். மூளைக்குச் செல்லக் கூடிய ஆக்சிஜனின் அளவு இதனால் குறையும்.

ரத்த உறைந்து போகும். அது பக்கவாதத்தில் கொண்டு போய்விட வாய்ப்புண்டு. இது இளம் வயதினருக்கும் ஏற்படக்கூடும்.

உடலின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும். இதனால் உடலில் கடுமையான வலி ஏற்படும். அல்லது உடலின் சில பகுதிகள் மரத்துப் போகும்.

இந்தப் பாதிப்புகள் உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டவர்களில் சிலர் இறந்து போய்விடுகிறார்கள். சிலருக்கு நீண்டகால விளைவுகள் ஏற்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கரோனா தொற்றைப் போலவே முதல் உலகப்போரின்போது இன்ஃபுளுயென்சா நோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது நிறையப் பேர் தூக்கவியாதியால் பாதிக்கப்பட்டனர்.

கரோனா தொற்று ஏற்பட்ட ஒருவருக்கு அது மூளையில், நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினால், அவர் குழப்பமான மனநிலையோடு இருப்பார். எதையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்க முடியாமல் தவிப்பார். ஆனால் இந்த நிலை நீண்ட காலம் நீடிப்பதில்லை.

கரோனா தொற்று நேரடியாக மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்புத்திறன் வைரஸ்களை எதிர்த்துப் போராடுகிறது. அப்படிப் போராடும்போது நமது உடலில் உள்ள செல்களையும் தாக்கத் தொடங்குகிறது. மூளையின் செல்களையும் நரம்பு செல்களையும் தாக்குகிறது. இதை "சைட்டோகைன் புயல்' என்கிறார்கள்.

ரத்த கட்டி அல்லது ரத்தம் உறைந்து போதல் நிகழ்கிறது. இது ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவைக் குறைக்கிறது. இதனால் அதிக உடல் எடை உள்ளவர்கள், அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்குப் பக்கவாத நோய் ஏற்படக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

கரோனா மூளையைத் தாக்கினால் அது பல நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள், கரோனா தொற்று ஏற்படாமல் மிகவும் பாதுகாப்பாக நாம் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.