முகப்பு
இளைஞர்மணி

ஆங்கில இலக்கியம் கற்றால் அளவில்லா வேலைவாய்ப்புகள்!

""மத்திய அரசு நடத்தும் பல்வகைத் தேர்வுகளிலும் எளிதாக வெற்றி கொள்ள ஆங்கிலப் புலமை அவசியம்'' என்கிறார் பாராளுமன்ற செயலக ஓய்வு பெற்ற இயக்குநர் என்.எம்.பெருமாள். அவர் நம்மிடம் கூறியது: 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:


""மத்திய அரசு நடத்தும் பல்வகைத் தேர்வுகளிலும் எளிதாக வெற்றி கொள்ள ஆங்கிலப் புலமை அவசியம்'' என்கிறார் பாராளுமன்றசெயலக ஓய்வு பெற்ற இயக்குநர் என்.எம்.பெருமாள். அவர் நம்மிடம் கூறியது:

மத்திய அரசின் அமைப்புகளான மத்திய தேர்வாணையமும் (UPSC), மத்திய பணியாளர் தேர்வாணையமும் (SSC), பட்டதாரிகள் நிலையில் தேர்வுகளை நடத்துகிறது. இதைப் போன்று வங்கிகள், ரெயில்வே, IB, ESI, EPF, போன்ற பல்வேறு நிறுவனங்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன.

பல தனிப்பட்ட பாடப்பிரிவுகளைக் கொண்ட கலை , அறிவியல் , வணிகவியல் , பொறியியல் பட்டதாரிகள் இத்தேர்வுகளை எழுதலாம். சில தேர்வுகள் +2 நிலையிலோ அல்லது 10- ஆம் வகுப்பு நிலையிலோ இருக்கும். அவற்றையும் இப்பட்டதாரிகள் எழுதலாம். பொறியியல், தொழிற்துறை மற்றும் குறிப்பிட்ட பாடத்துறைகள் - இவற்றைச் சாராத பொதுவான போட்டித் தேர்வுகளில் அனைத்து பட்டதாரிகளுக்கும் சமமான வாய்ப்புஉண்டு. இருந்தபோதிலும் இன்றைய போட்டித் தேர்வுகளின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஆங்கிலம், கணிதம் , பொருளாதாரப் பட்டதாரிகளுக்கு மற்றவர்களை விட வெற்றி பெற சற்று வாய்ப்புகள் அதிகம். அதிலும்ஆங்கிலப் புலமை வாய்ந்தவர்களுக்கும், ஆங்கில இலக்கியப் பட்டதாரிகளுக்கும் மத்திய அரசு வேலை வாய்ப்புகள் சற்று அதிகம் எனக் கூறலாம். 1974 -ஆம் ஆண்டு நான் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு என் ஆங்கிலப்புலமை காரணமாக இருந்தது. பொதுவாக ஐ.ஏ.எஸ் தேர்வில் 50 சதவீத மதிப்பெண் எடுப்பது சற்றுக் கடினமான செயலாகும். நான் தேர்வு எழுதிய காலகட்டத்தில் எல்லோருக்கும் கட்டாயமாக இருந்த கட்டுரை, ஆங்கிலம் , பொது அறிவு மூன்றிலும் 450 மதிப்பெண்களுக்கு 234 மதிப்பெண்கள் பெற்றேன். இது எனது இறுதி வெற்றிக்குப் பாலமாகஅமைந்தது எனலாம்.

இதைக் கூறுவதன் காரணம் என்னவென்றால் இளங்கலை ஆங்கில இலக்கியத்தில் மூன்றாம் வகுப்புத் தேர்ச்சியுடனே நான் உயர் நிலையை அடைய முடியுமென்றால், தமிழக இளைஞர்களில் ஆங்கிலப்புலமை வாய்ந்தவர்களும்,ஆங்கில இலக்கியம் படித்தவர்களும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருக்கும் நிலையில், அவர்கள் சிறிது கணிதம் மற்றும் பொது அறிவுப் பகுதிகளில் தங்களது புலமையை வளர்த்துக் கொண்டால் மத்திய அரசிலும் அதைச் சார்ந்த நிறுவனங்களிலும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் கண்டிப்பாக வெற்றி அடையலாம் என்பதே.

மத்திய பணியாளர் தேர்வாணையம் +2 நிலையில் நடத்தும் தேர்வு ஒருங்கிணைந்த மேல்நிலைப்பள்ளி நிலைத்(CHSL) தேர்வாகும். தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணந்த குரூப்- 4 தேர்வுக்கு இணையானது.

இத்தேர்வில் முதல் நிலையில் (Tier I)ஆங்கிலம், புத்திக்கூர்மை, கணிதம், பொது அறிவு ஆகிய நான்கு பகுதிகளுக்கும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் 200 மதிப்பெண்கள் இருக்கும். இதில் குறிப்பிட்ட கட் ஆஃப் மதிப்பெண்கள் எடுப்பவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வு எழுதலாம். இரண்டாம் நிலைத் தேர்வு ஒரு மணி நேரம் கொண்டதாகும். 100 மதிப்பெண்கள் கொண்ட ஒரு தாளில் ஒரு கட்டுரையும், ஒரு கடிதம், விண்ணப்பம் போன்ற வகைகள் இருக்கும்.கொள்குறியீடு வகையில் (Objective Type) இல்லாமல் விளக்க வடிவில் (Descriptive Type) இத்தாள் இருக்கும். இத்தாளை ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் எழுத வேண்டும்.

இறுதித் தகுதி பெற இத்தாளில் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆங்கில இலக்கியப் பட்டதாரிகள் இத்தாளில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்பு உண்டு. தட்டச்சு தேர்ச்சியும் இத்தேர்வில் வெற்றி பெற தேவையான ஒன்றாகும். ஆங்கில இலக்கியப் பட்டதாரிகளுக்கு ஓர் அருமையான வாய்ப்பாக அமைந்துள்ள தேர்வு பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) ஒருங்கிணைந்த பட்டநிலைத் தேர்வு (Combined Graduate Level - CGL Exam) ஆகும். வட்டாட்சியர் மற்றும் அதை விட கூடிய ஊதிய நிலையில் உள்ள பதவிகள் உட்பட பல்வேறு பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.

இத்தேர்வின் முதல் நிலையில் பொது அறிவு, புத்திக் கூர்மை (Intelligence) கணிதம், மற்றும் ஆங்கிலம் என்று நான்கு பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு பகுதியும் 25 கேள்விகளும் 50 மதிப்பெண்களும் கொண்டதாக விளங்கும்.

முதன்மைத் தேர்வில் (Tier - II) கணிதம் மற்றும் ஆங்கிலம் என்ற இரு பகுதிகள் மட்டுமே பெரும்பான்மையான பதவிகளுக்கு இருக்கும். மத்திய கணக்கு அலுவலகங்கள் (Civil Accounts Dept) மத்திய தணிக்கை அலுவலக பதவிகள் (CAG), புள்ளிஇயல் (Statistics) சார்ந்த பதவிகளுக்கு மட்டுமே தாள் மூன்றும், தாள் நான்கும் இருக்கும். இவற்றைத் தவிர விளக்க வழி பகுதியாக (Descriptive type) மூன்றாம் அடுக்கில் ஒரு தாள் இருக்கும். இதில் ஒரு கட்டுரையும் மற்றும் புரிந்துணர்தல் (Comprehension) போன்ற பகுதிகளும் இருக்கும். இதை ஆங்கிலத்தில் அல்லது இந்தியில் எழுத வேண்டும்.

எனவே CGL தேர்வில் பெரும்பாலான பதவிகளுக்கு மூன்று அடுக்குகளிலும் (Tier I , II and III) சேர்ந்து மொத்த மதிப்பெண்கள் 700. இதில் 350 மதிப்பெண்கள் ஆங்கிலத்துக்கு மட்டுமே உள்ளன. ஆங்கில இலக்கியப் பட்டதாரிகள் அதிலும் குறிப்பாக முதுகலை ஆங்கில பட்ட தாரிகள், கணிதம் , பொது அறிவு, புத்திக்கூர்மை போன்ற பகுதிகளில் சற்றுப் புலமையை வளர்த்துக் கொண்டு தேர்வில் கலந்து கொண்டால் கண்டிப்பாக வெற்றி பெறலாம். வருமான வரி ஆய்வாளர், சுங்க, கலால் வரி ஆய்வாளர், அஞ்சல் துறை ஆய்வாளர் போன்ற பல துறைகளில் உள்ள பதவிகளுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஏறக்குறைய பத்தாயிரம் பதவிகள் காலியாக உள்ளன. ஆரம்ப ஊதியமே கிட்டத்தட்ட ரூ 40,000 வரை கிடைக்கும்.

ஆங்கில இலக்கியம் படித்தவர்களுக்கு ஓர் அரும்பெரும் வாய்ப்பாக அமைந்திருப்பது எஸ்.எஸ்.ஸி நடத்தும் சுருக்கெழுத்து தேர்வாகும். இத்தேர்வுக்கு அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பாகும். ஒரு சில மத்திய அரசு நிறுவனங்கள் நடத்தும் சுருக்கெழுத்து தேர்வுக்கு அடிப்படை தகுதி +2 மட்டுமே. எஸ்.எஸ்.ஸி நடத்தும் சுருக்கெழுத்தாளர் தேர்வின் எழுத்துப் பகுதியில் 200 மதிப்பெண்கள் கொண்ட ஒரு தாள் உண்டு. அதில் புத்திக் கூர்மைக்கு 50 மதிப்பெண்களும், பொது அறிவுக்கு 50 மதிப்பெண்களும், ஆங்கிலத்துக்கு 100 மதிப்பெண்களும் உண்டு. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சுருக்கெழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

சுருக்கெழுத்துத் தேர்வில் நிமிடத்திற்கு 80 சொற்கள் விரைவிலும் அல்லது 100 மற்றும் 120 சொற்கள் விரைவுகள் என்ற மூன்று நிலைகளில் இருக்கும். 80 சொற்கள் விரைவுத்தரம் உள்ளவர்களுக்கு வருவாய்த்துறை ஆய்வாளருக்கு இணையான பதவியும் , 100 மற்றும் 120 சொற்கள் விரைவுத்தரம் உள்ளோருக்கு வட்டாட்சியருக்கு இணையான ஊதிய நிலைப் பதவியும் கிடைக்கும். ஆங்கில இலக்கிய மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த உடன் தட்டச்சும் சுருக்கெழுத்தும் படிக்க வேண்டும். 18 வயது நிரம்பியவுடன் SSCயின் பல்வேறு தேர்வுகளை எழுத வேண்டும். இப்படிச் செய்தால் பட்டப்படிப்பு முடியும் முன்போ அல்லது ஓரிரண்டு ஆண்டுகளிலோ நிரந்தரமான மத்திய அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

(அடுத்த இதழில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.