மவுத் வாஷும் பயன்படும்!
கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கைகளைக் கழுவுகிறோம். வாய், கண், மூக்கு பகுதியில் கைகளைக் கொண்டு செல்லாமல் தவிர்க்கிறோம்.
கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கைகளைக் கழுவுகிறோம். வாய், கண், மூக்கு பகுதியில் கைகளைக் கொண்டு செல்லாமல் தவிர்க்கிறோம். கைகளைச் சோப்பு போட்டு நன்றாகக் கழுவினால் கரோனா வைரஸ் சிதைந்து மாண்டு போகிறது. வாயில் உமிழ்நீரில் கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது?
வாயைக் கழுவுவதற்கு ஏற்கெனவே நிறைய மவுத் வாஷ்கள் உள்ளன. இந்த மவுத் வாஷ்களைப் பயன்படுத்துவதனால் கரோனா வைரஸூக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? என்று பிரிட்டனின் தென்மேற்குப் பகுதியின் வேல்ஸ் நகரில் உள்ள கார்டிஃப்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சியின் மூலம் மவுத் வாஷைப் பயன்படுத்துவதனால், கோவிட் -19 வைரஸைக் கொல்ல முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒருவருடைய உமிழ்நீரில் உள்ள கரோனா வைரஸின் மீது மவுத் வாஷ் படும்போது வைரஸின் மேற்பகுதியில் உள்ள சவ்வை மவுத் வாஷ் கிழித்துவிடுவதாகவும், இதனால் வைரஸ் சிதைந்து அழிந்துவிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மவுத் வாஷ்களில் நிறைய வகைகள் உள்ளன. குறைவான எத்தனால் உள்ள மவுத் வாஷ்கள் வைரஸை அழிக்கப் போதுமானவையாக இருக்கின்றன. ஏற்கெனவே அயோடின் கலந்த மவுத் வாஷ்கள் கரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸைக் கொல்லும் திறன் படைத்தவை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதுபோன்று அயோடின் கலந்த மவுத் வாஷ், கரோனா எதிர்ப்புத் திறன் உள்ளவை என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
பிரிட்டனில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆன்ட்டி மைக்ரோபியல் செட்டில்பிரிடினியம் குளோரைடு மவுத் வாஷ்களை 12 வாரங்களாக ஆராய்ச்சி செய்து இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர்.
கரோனா வைரஸ்களை அழிக்கப் பரவலாகப் பயன்படுத்தப்படும் புற ஊதாக்கதிர்களைப் போலவே இந்த மவுத் வாஷ்களும் வைரஸின் மேற்பகுதியில் உள்ள சவ்வு போன்ற பகுதியைச் சிதைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.