சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) 2030-ஆம் ஆண்டு வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2031-ஆம் ஆண்டு அதன் செயல்பாட்டை நிறுத்தப் போவதாக நாசா அறிவித்துள்ளது.
1998-ஆம் ஆண்டுமுதல் பல கட்டங்களாக கட்டமைக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டை நிறுத்துவது என்பதும் ஒரு விஞ்ஞான அதிசயம்தான்.
அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தை பசிபிக் பெருங்கடலில் மூழ்கடிக்கவுள்ளது நாசா. அது மூழ்கடிக்கப்படும் இடம் "பாயின்ட் நெமோ' எனவும், "விண்கல கல்லறை எனவும் அழைக்கப்படுகிறது.
ஆரம்பத்தில் 15 ஆண்டுகள் செயல்படுத்தும் நோக்கத்தில்தான் ஐஎஸ்எஸ் நிறுவப்பட்டது. ஆனால், 21 ஆண்டுகளையும் கடந்து செயல்பட்டு வருகிறது. மேலும் 10 ஆண்டுகள் அதைச் செயல்படுத்தவும் நாசா திட்டமிட்டுள்ளது.
ஒரு கால்பந்து மைதானத்தின் நீளம் கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) விண்வெளியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மாபெரும் கட்டமைப்பாகும். பூமியிலிருந்து 400 கி.மீ. உயரத்தில் உள்ள ஐஎஸ்எஸ், பூமியை தினமும் 16 முறை சுற்றி வருகிறது.
அத்தனை பெரிய கட்டமைப்பை செயலிழக்கச் செய்யும்போது அதனால் ஆபத்தும் இருக்கிறது. ஒருவேளை கட்டுப்பாட்டை இழந்து பெருநகரப் பகுதிகளில் அது விழுந்தால், அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலால் ஏற்பட்ட சேதத்தை விட அதிக சேதம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
ஆதலால், அதைச் செயலிழக்கச் செய்யும் பணி முக்கியமானது. திட்டமிட்டபடி, ஐஎஸ்எஸ்-இல் புதிதாக இணைக்கப்பட்ட தொகுதிகள் பிரதான கட்டமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு சுற்றுவட்டப் பாதையிலேயே விடப்படும். எதிர்கால விண்வெளி நிலையத் திட்டங்களுக்கு அதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பின்னர், அதன் வேகம் குறைக்கப்பட்டு சில மாதங்களில் அது சுற்றிவரும் உயரமும் குறைக்கப்படும். அதைத் தொடர்ந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது அதன் பெரும்பாலான பகுதிகள் எரிந்துவிடும். எஞ்சியிருக்கும் பகுதிகள் பசிபிக் பெருங்கடலின் ஆழ்கடல் பகுதிக்குள் மூழ்கடிக்கப்படும்.
இதற்கு முன்பாக ஒரு ரஷிய விண்வெளி நிலையம் பாதுகாப்பாக தரையிறக்கப்
பட்டுள்ளது. ஆனால், ஐஎஸ்எஸ் அதை விட நான்கு மடங்கு பெரியது. ஆதலால் சவால் காத்திருக்கிறது.