நிலவுக்கு மனிதர்களை, குறிப்பாக முதல் பெண்ணை அனுப்பும் "ஆர்ட்டெமிஸ்' எனும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2025-இல் செயல்படுத்தவுள்ளது. அதற்கு முன்னோடியாக நிலவைச் சுற்றி வரும் ஆளில்லா விண்கலத் திட்டமான "ஆர்ட்டெமிஸ் 1' திட்டத்தை நாசா இறுதி செய்து வருகிறது.
இத்திட்டம் மார்ச் மாதம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், சில தொழில்நுட்ப பிரச்னைகளால் தாமதமானது. இப்போது "ஆர்ட்டெமிஸ் 1' திட்டம் வரும் மே கடைசி அல்லது ஜூன் மாதம் செயல்படுத்தப்படும் எனத் தெரியவந்துள்ளது.
"ஆர்ட்டெமிஸ் 1' என்பது ஆளில்லா விண்கலம் நிலவைச் சுற்றி வரும் சோதனை ஓட்ட திட்டமாகும். இது மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. நாசாவின் ராக்கெட், அதன் ஓரியன் விண்கலம், ஐரோப்பிய சேவைத் தொகுதி (இஎஸ்எம்) ஆகியவை ஆகும்.
முதலில் நாசா ராக்கெட் செலுத்தப்பட்டு பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும். பின்னர், ஓரியன் விண்கலத்தையும், இஎஸ்எம்-ஐயும் நிலவின் நீள்வட்டப் பாதையில் செலுத்தும். இது சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 62 மைல்களும், அதற்கு அப்பால் 40,000 மைல்களும் செல்லும். மூன்று வாரங்கள் கழித்து ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியாவின் சான் டியாகோ கடல் பகுதியில் இறங்கும்.
இப்போது ஃப்ளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் ராக்கெட்டும், ஓரியன் விண்கலமும் இறுதிக் கட்ட சோதனையில் உள்ளன.
"ஆர்ட்டெமிஸ் 1' சோதனைத் திட்டம் வெற்றி பெற்றால் "ஆர்ட்டெமிஸ் 2' திட்டத்தை நாசா தொடங்கும். இதில் ஓரியன் விண்கலம் மூலம் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு நிலவைச் சுற்றி வருவார்கள். அதன் பின்னர், "ஆர்ட்டெமிஸ் 3' திட்டத்தில் நிலவுக்கு முதல் பெண்ணும், வெள்ளையர் அல்லாத முதல் ஆணும் அனுப்பப்படுவார்கள்.
ஆர்ட்டெமிஸ் திட்டமானது விண்வெளித் திட்டத்துக்கான புதிய
யுகமாகக் கருதப்படுகிறது. இது நிலவில் ஒரு நிலையான இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், 2030-இல் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கும் உதவிகரமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.