சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கிரகம் வியாழன். அந்தக் கிரகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் மிகவும் அழகான புகைப்படம் ஒன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பகிர்ந்துள்ளது.
அதன் பெரிய சிவப்பு புள்ளிக்காக வியாழன் கிரகம் அறியப்பட்டாலும், நாசா பகிர்ந்துள்ள புகைப்படம் வியாழனில் ஏற்பட்ட புயலைக் காண்பிக்கிறது.வியாழன் கிரகத்தைக் கடந்து சென்ற நாசாவின் ஜூனோ விண்கலம்தான் இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளது. உயர்தரமான தேநீர் கடையின் சுவரில் இடம்பெற்றுள்ள வண்ண ஓவியம் போல காணப்படுகிறது இந்தப் புகைப்படம்.
வியாழன் கிரகத்தின் வளிமண்டலம், காந்த அமைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்வதுதான் ஜூனோவின் பிரதான நோக்கம். இந்தப் பணி 2021- ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்துவிட்டது என்றாலும், 2025 வரை அது தனது பணியைத் தொடரவுள்ளது.
"புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள வெள்ளைப் புயல்கள், மணிக்கு 335 மைல் வேகத்தில் காற்றை உருவாக்கிய புயலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. உதாரணத்துக்கு "பிரிவு 5' வகை சூறாவளி மணிக்கு 157 மைல் காற்றை உருவாக்குகிறது என்றால் அதன் வேகத்தைப் புரிந்துகொள்ள முடியும்' என நாசா தெரிவித்துள்ளது.
வியாழன் கிரகத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற பட்டை வடிவங்கள் நிறைந்துள்ளன. இந்த வடிவங்கள் ஏன் மாறுபடுகின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது. வளிமண்டலத்தில் உள்ள அமோனியா வாயு கிரகத்தின் "ஜெட் ஸ்ட்ரீம்' பகுதியில் மேலும் கீழுமாகப் பயணித்ததால் இந்தப் பட்டை வடிவங்கள் உருவாகியிருக்கலாம் எனவும் நாசா கூறியுள்ளது.
2011-ஆம் ஆண்டு ஜூனோ விண்கலம் செலுத்தப்பட்டது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் வியாழன் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அந்த விண்கலம் நுழைந்தது. தற்போது 2025 வரை அதன் பணி நீட்டிக்கவுள்ள நிலையில் மேலும் பல ஆச்சரியங்களை ஜூனோவிடமிருந்து அறிவியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.