இந்த ஆண்டிற்கான (2016) பத்மவிபூஷண் விருது பெற்றவர்களில் ஒருவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா. கடந்த 60 ஆண்டுகளாக தன்னலமில்லாமல் புற்றுநோய் ஒழிப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர் டாக்டர் சாந்தா.
வாழும்போதே வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் அவரைப் பற்றி இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள இதோ:-
டாக்டர் சாந்தா தற்போது அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவராக உள்ளார். தம்முடைய 87-ஆவது வயதிலும் இந்த நிறுவனத்தை உலகத் தரத்தோடு நடத்தி வருகிறார். புற்றுநோயாளிகளுக்குக் குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே டாக்டர் சாந்தாவின் குறிக்கோளாகும்.
மேலும் உலகில் எந்த மூலையில் புற்றுநோய் பற்றிய ஆய்வுகள் நடைபெற்றாலும், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், புதிய மருத்துவமுறை அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை அறிந்துகொண்டு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அதனை அறிமுகப்படுத்துவதைத் தனது தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளார் டாக்டர் சாந்தா.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் 1954-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் 2 குடிசைகளே கொண்ட மருத்துவமனையாக இது தொடங்கப்பட்டது. இதில்தான் டாக்டர் சாந்தா 1955-ஆம் ஆண்டு ஒரு மருத்துவராகத் தம்மை இணைத்துக் கொண்டார்.
டாக்டர் சாந்தா 1955-ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் ங.ஈ பட்டம் பெற்றவுடனேயே ACI (Adayar Cancer Institute)இல் சேர்ந்தார். தம்முடன் பணிபுரிந்த மற்றொரு டாக்டராக டாக்டர் கிருஷ்ணமூர்த்தியைத் தொழில் ரீதியான குருவாக மனதார ஏற்றுக்கொண்டார். இவர்கள் இருவரும் அஇஐ வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டனர்.
இவ்வாறு எளிமையாக ஆரம்பிக்கப்பட்ட அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையம் (ACI) இன்று ஆண்டுக்கு ஒரு லட்சம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
நோபல் பரிசு பெற்ற டாக்டர் எஸ்.சந்திரசேகர் டாக்டர் சாந்தாவின் தாய்மாமன் ஆவார். நோபல் பரிசு வாங்கிய விஞ்ஞானியான சர்.சி.வி.இராமன் டாக்டர் சாந்தாவின் தாத்தாவின் சகோதரர் ஆவார். டாக்டர் சாந்தாவின் குடும்பப் பின்னணி விஞ்ஞானிகள் என்பதால் இவரை மருத்துவராக்கவே குடும்பத்தினர் விரும்பவில்லை.
மேலும் 60 ஆண்டுகளுக்கு முன் "கேன்சர்' என்றாலே மரணம்தான் முடிவு என்னும் நம்பிக்கை மக்களிடையே இருந்ததனால் குடும்பத்தினரின் எதிர்ப்பு மிக அதிகமாகவே இருந்தது. இந்த எதிர்ப்பையும் மீறி தனது லட்சியத்தில் உறுதியாக இருந்ததாலும் இவரின் தன்னலமற்ற தியாகத்தினாலும்தான் பல விருதுகள் இவரைத் தேடி வந்தன. மகசேசே விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை இவர் ஏற்கெனவே பெற்று இந்த விருதுகளுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இப்போது பத்மவிபூஷண் விருதும் இவரை வந்தடைந்திருக்கிறது.
டாக்டர் சாந்தா இன்றும் அஇஐ இல் (24x7x365) நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கிறார். நோயாளிகளுக்காக மட்டும் அல்லாமல் ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு வழிகாட்டியாகவும், குருவாகவும் தம் அன்பால், பொறுமையால், தன்னலமற்ற சேவையால் விளங்கி வருகிறார்.
""புற்றுநோயில் பல வகைகள் உண்டு. பல நிலைகள் உண்டு. சில வகையான புற்று நோயாளிகளை நிச்சயமாகக் காப்பாற்ற முடியும். ஆரம்ப நிலையில் புற்று நோய்க்கான மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டால் பெருவாரியான நோயாளிகளைக் காப்பாற்ற முடியும்'' என்கிறார் டாக்டர் சாந்தா.
மேலும் இன்று ஆராய்ச்சிகள் போகும் போக்கைக் கணக்கில் கொண்டால் இன்னும் 10 ஆண்டுகளில் புற்று நோயாளிகளையும் காப்பாற்ற முடியும் என்று திடமாக நம்புகிறார் டாக்டர் சாந்தா.
வருங்கால மருத்துவர்களுக்கும், மருத்துவமனை உரிமையாளர்களுக்கும் இவர் விடுத்துள்ள செய்தி ""நோயாளிகளை மனிதர்களாக கருதுங்கள்; மனிதராக நடத்துங்கள். பலசரக்குப் பொருளாக அல்ல'' என்பதேயாகும். இதுநாள்வரை இவர் கடைப்பிடித்த வாழ்க்கை தத்துவம் ""To give and not to take'' என்பதுதான்.
டாக்டர் சாந்தா அன்னை தெரசாவுக்கு இணையாகப் போற்றப்பட வேண்டியவரே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.