சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்!
வேந்தர் தொலைக்காட்சியில் வரும் "புத்தம் புது காலை', "ஹலோ டாக்டர்', "ரீல் பெட்டி' போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருப்பவர் சாந்தினி. தொகுப்பாளினியைத் தவிர இவருக்கு வேறு முகங்களும் உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர் என மேலும் இருமுகங்கள்.
வேந்தர் தொலைக்காட்சியில் வரும் "புத்தம் புது காலை', "ஹலோ டாக்டர்', "ரீல் பெட்டி' போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினியாக இருப்பவர் சாந்தினி. தொகுப்பாளினியைத் தவிர இவருக்கு வேறு முகங்களும் உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர் என மேலும் இருமுகங்கள்.
சாந்தினி சொல்கிறார்:
எம்.எஸ்.சி எலக்ட்ரானிக்ஸ் மீடியா படித்திருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் பொழுதே இன்டன்ஷிப்பில் பிரபல பத்திரிகை, டிவி சானல்களில் நிரூபராக பணிபுரிந்தேன். படிப்பு முடிந்தது. வேறு வேலைக்குச் செல்ல மனமில்லை.
இந்த நேரத்தில் "தந்தி' தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி கொண்டிருந்த "360 டிகிரி உலகைச் சுற்றி' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினி விடுமுறையில் சென்றதால் வேறு தொகுப்பாளினி தேவைப்பட, என் தோழியின் மூலம் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. ஆனால் என் பெற்றோருக்கு அதில் விருப்பமில்லை. நான் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் பயந்தார்கள். ஒருவழியாக அவர்களைச் சமாதானப்படுத்தி அனுமதி வாங்கினேன்.
ஒரு சில நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு பிடித்திருந்ததால் தயாரிப்பு மற்றும் தொகுப்பாளினி என இரண்டையும் நானே கவனித்துக் கொண்டேன். இன்னொரு நிகழ்ச்சியான "திரைகடல்', என்ற சினிமா நிகழ்ச்சியையும் தயாரித்து தொகுத்து வழங்கினேன். அடுத்து "வானவில் லைவ் லைஃப்' என்ற நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் அவுட்டோர் ஷூட்டிங் வைத்திருந்தோம்.
இந்நிகழ்ச்சியில் நமது கலாச்சாரம் சார்ந்த பழைய விஷயங்கள், மறைந்து வரும் நமது பாரம்பரிய உணவு வகைகள் போன்றவற்றை கொண்டு வந்தோம். இந்த நிகழ்ச்சியின் மூலம் நமது பாரம்பரியம் குறித்து நிறைய விஷயங்களை நான் தெரிந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது "வேந்தர்' டிவியில் வரும் "புத்தம் புது காலை', "ஹலோ டாக்டர்', "ரீல் பெட்டி' நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறேன்.
ரீல் பெட்டி நிகழ்ச்சியைப் பொறுத்தவரை 3 பிரிவுகள் இருக்கும். "கதை சொல்ல போறோம்', "ரீமிக்ஸ்', "என்னோடு பாட்டு பாடுங்கள்' போன்றவை அவை. வெளியே எங்குச் சென்றாலும் ரீல் பெட்டியைப் பற்றி ரசிகர்கள் விசாரிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
மேலும் அவ்வபோது திரைப்பிரபலங்களுடன் நேர்காணல் செய்கிறேன். மீடியாவே வேண்டாம் என்று பயந்த என் பெற்றோர். தற்போது இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் வீட்டில் ஒளிபரப்பாகும் போது டிவியிலேயே ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் எல்லாம் காண்பித்து பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். நான் சரியான பாதையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.
தொடர்களில் நடிப்பதற்கும், திரையில் நடிப்பதற்கும் வாய்ப்புகள் வருகிறது. ஆனால் நடிப்பு பக்கம் போக கூடாது என்று வீட்டில் சொல்லியிருப்பதால் வாய்ப்புகளை தவிர்த்து
விடுகிறேன். இதைத் தவிர டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருக்கிறேன். ஜெயா டிவியில் வரும் "பெரிய இடத்துப் பெண்' தொடரில் வரும் இரண்டாவது நாயகிக்கு டப்பிங் பேச ஆரம்பித்திருக்கிறேன்.