களை கட்டுகிறது... திருமண சீசன்!
எங்களுக்குள் காதல் இல்லை.. இருவருக்கும் இடையே பரஸ்பர மதிப்பு , மரியாதை உண்டு.
எங்களுக்குள் காதல் இல்லை.. இருவருக்கும் இடையே பரஸ்பர மதிப்பு , மரியாதை உண்டு. அதனால் நட்பில் இருக்கிறோம்..' என்று சொல்லி வந்த தீபிகா படுகோன், ரன்வீர் சிங் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்களாம்.
காதலிக்கும் போதே "பத்மாவதி' படத்தில் ரன்வீர் ஒருதலையாக காதலிக்கும் வில்லனாக வந்தவர். படம் வெற்றி பெரும் என்று உறுதியாகத் தெரிந்தவுடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீபிகாவுடன் மாலத்தீவுகள் சென்று வந்தார். உடன் இருவரின் பெற்றோர்களும் இருந்தனர் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். இருவரின் குடும்பத்தினரும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டார்களாம். நான்கு திருமண நாள் தேதியையும் தேர்ந்தெடுத்துவிட்டார்களாம். ஆனால் திருமணத்தை இந்தியாவில் வைப்பதா?. வெளிநாட்டில் வைப்பதா? என்று முடிவு செய்யவில்லையாம். ஆனால், திருமணம் எங்கு நடந்தாலும் மிக மிக நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு போகுமாம்..!
திருமண வேலைகள் தொடங்கும் முன் தீபிகா திருமணத்திற்கான உடைகள், நகைகள் வாங்குவதில் மும்முரம் காண்பிக்க.... திருமணம் இந்த டிசம்பருக்குள் நடக்கும் என்று பாலிவுட்டில் அடித்துச் சொல்கிறார்கள்.
நடிகர் அனில் கபூரின் மகளான நடிகை சோனம் கபூரும் தனது சிறு வயது தோழரான ஆனந்த் அஹுஜா என்பவரை இன்னும் சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.
ஆக... மொத்தத்தில் பாலிவுட்டில் திருமண சீசன் களை கட்டுகிறது.