வயதாவதை தடுக்க முடியாது! - ஷர்மிளா தாகூர்
சத்யஜித்ரேயின் "அபுர்சன்சார்' படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ஷர்மிளா தாகூர். 60 முதல் 70 ஆம் ஆண்டுகளில் "காஷ்மீர் கி கலி' , "ஆராதனா' , "அமர்பிரேம்' , "மவுசம்' , "ஈவினிங் இன் பாரிஸ்' , "
சத்யஜித்ரேயின் "அபுர்சன்சார்' படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் ஷர்மிளா தாகூர். 60 முதல் 70 ஆம் ஆண்டுகளில் "காஷ்மீர் கி கலி' , "ஆராதனா' , "அமர்பிரேம்' , "மவுசம்' , "ஈவினிங் இன் பாரிஸ்' , "சஃபர்' போன்ற பல வெற்றிப் படங்கள் மூலம் அன்றைய இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்ததை மறக்கமுடியாது. வழக்கமான பாணியிலிருந்து விலகி குல்சாரின் மவுசம் படத்தில் விலைமாதாக நடித்தது, அவரது நடிப்பு திறமைக்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களையே இவர் தேர்ந்தெடுத்ததும் இவரது புகழுக்கு காரணமாகும்.
இந்திய கிரிக்கெட் குழுவின் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியை இவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வந்த செய்தி திரையுலகத்தையே திகைக்க வைத்தது. வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இத்திருமணத்திற்கு பூரி சங்கராச்சாரியார் உள்பட பல இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் ஷர்மிளா மதம் மாறாமலேயே பட்டோடியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறினார். பட்டோடியும் வற்புறுத்தவில்லை. கொல்கத்தாவில் உள்ள நண்பர் வீட்டில் திருமணம் நடந்தது. பின்னர், பிரச்னைகளுக்கு முடிவுகட்ட மும்பையிலிருந்து தில்லியில் குடியேறினார். இதனால் திரைப்பட வாய்ப்புகளையும் தவிர்த்தார்.
ஆனால், திருப்தி மித்ரா என்ற நடிகை அவரது வாழ்க்கையில் வெற்றி பெற சந்தித்த இன்னல்களையும், பின்னர் அவரது தனிமை வாழ்க்கையை விளக்கும் அறுபதுகளில் பிரபலமான பெங்காலி மேடை நாடகத்தை, 1997- ஆம் ஆண்டு அருண் சுக்ரே என்ற இயக்குநர் 'அபராஜிதா' என்ற பெயரில் தயாரித்தபோது, தானே விருப்பப்பட்டு அதில் நடிக்க ஷர்மிளா ஒப்புக் கொண்டார். வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் மற்றவர்களுக்காக அதாவது கணவர், தந்தை அல்லது சமூகத்திற்காக செய்ய வேண்டிவரும். அதே நேரத்தில் சில விஷயங்களை நம் ஆத்ம திருப்திக்காகவும், மகிழ்ச்சிகாகவும் செய்ய வேண்டி வரலாம். அதுபோன்ற ஒரு வாய்ப்பாகவே அபராஜிதாவில் நடிக்க ஒப்புக் கொண்டேன்' என்று ஷர்மிளா கூறினாராம்.
2011-ஆம் ஆண்டு செப்.22 -ஆம் தேதி என்னுடைய கணவர் பட்டோடி காலமானது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் என்று கூறும் ஷர்மிளா, தனது இன்றைய வாழ்க்கையைப் பற்றி கூறுகிறார்: மீண்டும் திரைப்படங்களில் குறிப்பிட்ட பாத்திரங்களில் நடிக்க வேண்டுமென்று என் ரசிகர்கள் வற்புறுத்தவும் இல்லை. நானும் நினைக்கவும் இல்லை. ஆனால் நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நடிக்கலாமென்ற எண்ணம் இருக்கிறது.
திருமணமான நடிகைகளில் பலர் குடும்பத்துடன் ஒன்றி போவதுண்டு. என்னைப் பொருத்தவரை குடும்பத்தை கவனிப்பதோடு, எங்களுடைய பண்ணைகளை கவனிக்கும் பொறுப்பும் எனக்குள்ளது. பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் தினமும் ஒவ்வொரு பிரச்னை இருப்பதால் அதை கவனிப்பதற்கே நேரம் சரியாக உள்ளது. ஒருவகையில் இது வித்தியாசமான அனுபவம்தான். பெரிய வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை புரியுமென நினைக்கிறேன்.
இன்றைய நடிக - நடிகைகள் நவீன தொழில் புரட்சிகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். டிஜிட்டல் மீடியா மூலம் மக்களை தொடர்பு கொள்வது சுலபமாக இருப்பதுடன் செலவும் குறைவு. நம்முடைய கருத்துகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவதற்கும், கருத்து பரிமாற்ற விளக்கமளிக்கவும். இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி உதவுகிறது. இதனால் திரைப்படங்கள் மூலம் நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறைந்து விடுமென கருத முடியாது. டிஜிட்டல் மீடியா மூலம் தொடர்பு கொள்வதால் பணம் மற்றும் நேரம் விரயமாவது குறைகிறது. திரைப்படங்களுக்குள்ள செல்வாக்கு குறைய வாய்ப்பில்லை.
என்னுடைய காலத்தில் என்னுடன் நடித்துக் கொண்டிருந்த பல நடிக - நடிகையரை இத்திரையுலகம் புறக்கணித்து விட்டதாக சொல்ல முடியாது. வயதாவதை நம்மால் தடுக்க முடியாது. வயதுக்கேற்ப ஏற்படும் மாறுதல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு வயதாகி வருவதால் பொது வாழ்க்கையிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. எனக்கு திருமணமாகி, குழந்தைகளுக்குத் தாயாகி, கணவரை இழந்து, இப்போது பாட்டியாகி உள்ளேன். நரை விழுந்த முடியை மறைக்க நான் சாயம் பூசுவதில்லை. 70 வயதாகும் ஒரு பெண் 18 வயது பெண் போன்று செயல்பட முடியாது என்றாலும், என்னைப் பொருத்தவரை குனிந்து என் பாதத்தை தொடும் சக்தியும், நடப்பதற்கான சுறுசுறுப்பும் எனக்கிருக்கிறது. என்னை நானே கவனித்துக் கொள்கிறேன்.
என் குடும்பத்தில் என்னுடைய மகன் சயீப் அலிகானின் மகன் மற்றும் மகள் சோஹா அலிகானின் மகள் என இரு புதிய வரவுகள் சேர்ந்துள்ளனர். இவர்களுடன் பொழுதுபோக்குவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இந்த வாழ்க்கை நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அவர்கள் வளரும்போது ஒருவேளை என்னைச் சுற்றிலும் உள்ள சூழ்நிலை மாறலாம். அதுவரை இந்த வாழ்க்கையை அனுபவிக்கலாமே'' என்கிறார் ஷர்மிளா தாகூர்.