கிராம்பில் புரதம், கொழுப்பு, பைனின், யூஜினால், வேனலின், நார்ப்பொருள், கால்சியம் பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ,பி,சி, ஹைட்ரோ குளோரிக் அமிலம் முதலியன அடங்கியுள்ளன.
தொடர் குமட்டல், வாந்தி ஏற்பட்டால் கிராம்புடன் ஏலக்காய் சேர்த்து பொடித்து இளஞ்சூடான நீரில் கலந்து குடித்து வர வாந்தி குமட்டல் நிற்கும்.
கிராம்புகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து கஷாயம் செய்து, அத்துடன் தேன் கலந்து குடித்து வர ஆரம்பநிலை ஆஸ்துமா குணமாகும்.
கிராம்பை சமையலிலும், பண்டங்களில் சேர்த்து சாப்பிட்டு வர, உடலிலுள்ள தீமைதரும் சில பாக்டீரியாக்களை அழிக்கும். இதிலுள்ள அசிடைல் யூனினால் கை, கால்களில் ஏற்படும் தசைபிடிப்பு மற்றும் வலியை போக்கும் ஆற்றல் கொண்டது.
சிறிது நல்லெண்ணெய்யில் இரண்டு கிராம்பை பொடித்துப் போட்டு சூடாக்கி ஆறினதும். மூன்று துளிகள் காதில் இட்டுவர, காது வலி நீங்கும்.
கொஞ்சம் தேனில் கிராம்புத்தூள் சேர்த்து சாப்பிட்டு வர நினைவாற்றல் அதிகரிக்கும்.
எலுமிச்சைச் சாறு, இஞ்சிச்சாறு இவற்றுடன் சிறிது கிராம்புத்தூள், இட்டு கலந்து குடித்து வர சாதாரண பித்தம் விலகும்.
அதிமதுரத்துடன், கிராம்பு வைத்து பொடித்து தேனில் சேர்த்து சாப்பிட்டால், குற்றிருமல் குணமாகும்.
கிராம்புடன் நீர் தெளித்து மைய அரைத்து, சூடாக்கி கை, கால் மூட்டுகளில் தடவி வர, மூட்டு வலி நீங்கும்.
வெள்ளைப் பூண்டுடன், கிராம்பு வைத்து அரைத்து சிறிதளவு சாப்பிட்டால் குடற்புழுக்கள் அழியும்.
பாலில் கிராம்புத்தூள் மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் மூக்கிலிருந்து நீர் ஒழுகல் நிற்கும்.
சொத்தை பற்களில் கிராம்பு எண்ணெய்யை சிறிது பஞ்சில் தோய்த்து வைத்தால் பல்வலி நீங்கும், ஈறு வீக்கம் குணமாகும்.
உப்புடன் கிராம்பை வைத்து பொடித்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு நீங்கி நலம் பயக்கும்.
கிராம்புடன் சீரகம் வெற்றிலை வைத்து மென்றுதின்று, ஒரு டம்ளர் லேசான சுடுநீர் குடித்தால், வயிற்று பொருமல் வற்றும்.
சுக்கு, கிராம்பு, துளசி இலை இட்டு கஷாயம் செய்து பருகி வர சளித்தொல்லை குணமாகும்.
கிராம்புடன் சின்ன வெங்காயம் வைத்து விழுதாக அரைத்து நெற்றியில் பற்றிட்டால், ஒற்றைத் தலைவலி ஓடிவிடும்.
ஒரு வெற்றிலையுடன், நான்கு கிராம்பு சேர்த்து மென்று தின்றால் அஜீரணம் அகலும்.
மஞ்சளுடன், கிராம்பு வைத்து விழுதாக அரைத்து தேள் கடி, பூரான்கடி போன்றவற்றின் மீது தடவி வர விஷம் முறியும், வலி நீங்கும்.
(எளிய இயற்கை மருந்துகள் நூலிலிருந்து)