சிதார் இசை மேதைக்கு அஞ்சலி செலுத்தும் மகள்கள்!
இந்த ஆண்டு அனுசரிக்கவுள்ள காலஞ்சென்ற பிரபல சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது மகள் அனுஷ்கா சங்கரும், அவரது ஒன்றுவிட்ட சகோதரியும் கிராமி விருது பெற்ற பாடகியுமான நோரா
இந்த ஆண்டு அனுசரிக்கவுள்ள காலஞ்சென்ற பிரபல சிதார் கலைஞர் பண்டிட் ரவிசங்கரின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது மகள் அனுஷ்கா சங்கரும், அவரது ஒன்றுவிட்ட சகோதரியும் கிராமி விருது பெற்ற பாடகியுமான நோரா ஜோன்ஸþம் இணைந்து லண்டனில் விரைவில் நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். ஏற்கெனவே இவர்களிருவரும் இணைந்து பல்வேறு இசை ஆல்பம், பாடல்கள், மியூசிக் வீடியோக்களை வெளியிட்டிருந்தாலும், மேடையில் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இரண்டாண்டுகளுக்கு முன் தன் தந்தை பண்டிட் ரவிசங்கர் இறப்பதற்கு முன் கடைசியாக பெங்களூருவில் அவருடன் சேர்ந்து நிகழ்த்திய இசை நிகழ்ச்சிக்குப் பின் லண்டன் சென்ற அனுஷ்கா. இப்போது இந்தியா திரும்பியுள்ளார். தற்போது 38 வயதாகும் அனுஷ்கா, கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து பல்வேறு இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். தற்போது தன் தந்தையின் நூற்றாண்டு விழாவையொட்டி சர்வதேச அளவில் பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளார். இதுவரை தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களை குறித்து பகிர்ந்து கொள்கிறார்:
""2018-ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் பலவித மாற்றங்களை ஏற்படுத்திய ஆண்டாகும். "லவ் லெட்டர்ஸ்' என்ற தலைப்பில் பாடல்களை எழுதி இசையமைத்து வெளியிட்ட நேரத்தில், எனது உடல் நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் இசையால் என்னுடைய நோயை குணப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால், இசை என்னுடைய வாழ்க்கையில் ஓர் அங்கமாக இருந்ததால் நல்லது கெட்டதை அறிந்து கொள்ள முடிந்தது.
எனது அனுபவங்களை எனக்கு நானே சொல்லிக் கொண்டதோடு, மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். பாடல்களை இயற்றி இசையமைத்தேன். ஒரு சமநிலைக்கு வந்த பின்னரே என்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று பார்ப்பதை நிறுத்தினேன்.
ஏழாண்டு திருமண வாழ்க்கைக்குப் பின், ஜூபின் சங்கர் ரைட் மற்றும் மோகன் சங்கர் ரைட் என்ற இரு ஆண் குழந்தைகளுக்குத் தாயான நான், என்னுடைய கணவரும், திரைப்பட இயக்குநருமான ஜோ ரைட்டிடமிருந்து விலக நேரிட்டது. வாழ்க்கையில் எனக்கிருந்த நம்பிக்கை மீது ஏற்பட்ட வலியையும், தனிமைத்தாய் என்பதன் அர்த்தத்தையும் இப்போது உணர்கிறேன்.
நிலவொளியில் அமர்ந்து சிதாரை மீட்டும் போது என்னுடைய துயரங்களை ஒரளவு மறக்கமுடிகிறது. பிரிவுக்குப் பின் எனக்கு மிக நெருக்கமான சிநேகிதிகளுடன் தொடர்பு கொண்டேன். அவர்கள் அளித்த ஆலோசனைகளும் ஆதரவும் எனக்கு உதவியாக இருந்தது.
மேலும் பல பெண் கலைஞர்கள் எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் மீண்டும் இசைத்துறையில் ஈடுபட உறுதுணையாக நின்றனர். எனக்கொரு பிரச்னை வந்தபோது அவர்கள் உதவிக்கரம் நீட்டிய தால், நான் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்தேன்.
நான் பிறந்தது முதலே என்னுடைய தந்தை வழியில் இசைத்துறையில், எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய என் அம்மா சுகன்யா ராஜனை, உயிருள்ள வரை மறக்க மாட்டேன். என்னுடைய வாழ்க்கையை வழி நடத்திச்செல்ல என் தந்தையின் வாழ்க்கை எப்படி உதவுகிறதோ. அதேபோல் என் அம்மாவின் ஆதரவும், அறிவுரைகளும் உதவுகின்றன.
இந்த ஆண்டு இசைத்துறையில் எனக்கொரு வடிவத்தைக் கொடுத்த என் தந்தையின் நூற்றாண்டாகும். அவரால்தான் எனக்கு புகழ் கிடைத்தது. அவரது மகள் என்பதில் பெருமைப்படுகிறேன்.
தன் இசையின் மூலம் இந்தியாவுக்கும், இந்திய இசை உலகிற்கும் எத்தனை பெருமை சேர்த்தார் என்பது அவரது ரசிகர்களுக்கும். மக்களுக்கும் தெரியும். மேலும் அவரது புகழை சர்வதேச அளவில் வெளிப்படுத்த வேண்டுமென்பதற்காகவே, நானும் என்னுடையஒன்றுவிட்ட சகோதரி நோரா ஜோன்ஸþம் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம். இது நாங்கள் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்'' என்றார் அனுஷ்கா சங்கர்.