தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய செவிலியர்!
கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில். மருத்துவ ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில். மருத்துவ ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கேரளாவில் செவிலியர் ஒருவர் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை கூட நிறுத்திவிட்டார். தாய்மையின் உயரிய செயலைக் காட்டிலும் தேசத்திற்காக உழைக்கும் இவரும் சாதனைப் பெண்தான்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார் ரீஜா விஷ்ணு. 2 வயது குழந்தைக்கு தாயான இவர், கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்புக் குழுவில் இடம் பெற்றுள்ளார். தினமும் 4 மணி நேரம் கரோனா நோயாளிகள் இருக்கும் சிறப்பு வார்டில் பணிபுரிந்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:
""கரோனா நோயாளிகளுக்கு துணைக்கு உறவினர்கள் இருக்க மாட்டார்கள். நாங்கள் தான் அவர்களைப் பார்த்துக் கொள்வோம். தனியாக இருப்பதால், அவர்கள் பல சந்தேகங்களை கேட்பார்கள். அவர்களுடன் முழு நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருப்போம். எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு கவசத்தை அணியவே அதிக நேரம் எடுக்கும். அதை அணிந்த பின் பணி நேரமான 4 மணி நேரம் வரை சிறுநீர் கழிக்கக்கூட முடியாது. கையுறை அணிந்து இருப்பதால் எந்த வேலை செய்தாலும் சிரமம் தான். மாஸ்க் அணிந்திருப்பதால் தண்ணீர் கூட குடிக்க முடியாது. வெப்பம் அதிகமாக இருக்கும் இந்த சூழலில் அந்த பாதுகாப்பு உடை மிகவும் வெப்பமாக உணர வைக்கும்.
இந்த சூழலில் எனது 2 வயது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை கூட நிறுத்திவிட்டேன். இவ்வளவு பிரச்னைகளை சந்தித்தாலும், கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் குணமாகி வெளியே வரும் போது உறவினர்களை விட நாங்கள் தான் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்''என்கிறார் ரீஜா.